01 November 2025

பேயாழ்வார் - ஐப்பசியில் சதயம்

 ஸ்ரீ பேயாழ்வார்  அவதார  திருநட்சித்திரம் இன்று ...  ஐப்பசி மாதம் சதய  நட்சத்திரத்தில் அவதரித்தவர் இவர்...







  பேயாழ்வார் வாழி திருநாமம்!

திருக்கண்டேன் என நூறும்  செப்பினான் வாழியே

சிறந்த ஐப்பசியில் சதயம் செனித்த வள்ளல் வாழியே

மறுக்கமழும் மயிலைநகர் வாழ வந்தோன் வாழியே

மலர்க்கரிய நெய்தல் தனில் வந்து உதித்தான் வாழியே

நெருங்கிடவே இடைகழியில் நின்ற செல்வன் வாழியே

நேமிசங்கன் வடிவழகை நெஞ்சில் வைப்போன் வாழியே

பெருக்கமுடன் திருமழிசைப் பிரான் தொழுவோன் வாழியே

பேயாழ்வார் தாளிணை இப்பெருநிலத்தில் வாழியே 



ஸ்ரீ  பேயாழ்வார் -


பிறந்த ஊர் -  மயிலாப்பூர்

பிறந்த நாள் - ஏழாம் நூற்றாண்டு

நட்சத்திரம் - ஐப்பசி சதயம் (வளர்பிறை தசமி திதி)

கிழமை      - வியாழன்

எழுதிய நூல் - மூன்றாம் திருவந்தாதி

பாடல்கள் -100

சிறப்பு - செவ்வல்லி மலரில் பிறந்தவர், திருமாலின் கட்கம் என்னும் வாளின் அம்சம் (நந்தகாம்சம்)


தொண்டை நாட்டில் மயூரபுரி எனும் மயிலாப்பூரில் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் உள்ள புஷ்கரணியில் திருமாலின் *நாந்தகம் எனும் வாளின்* அம்சமாக அவதரித்தவர்.


திருக்கோவலூர் திருத்தலத்தில் இடைக்கழியில்

 *வையம் தகளியா* என பொய்கையாழ்வாரும் ,

*அன்பே தகளியா* என பூதத்தாழ்வாரும் விளக்கேற்ற

திருமாலைக் கண்டு *திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்* எனத் தொடங்கி நூறு பாசுரங்கள் கொண்ட மூன்றாம் திருவந்தாதி பாடியவர்.


பேயாழ்வாரின் வாழி திருநாமம் விளக்கவுரை

பொய்கை ஆழ்வாரும், பூதத்தாழ்வாரும் ஏற்றிய விளக்கின் வெளிச்சத்தில்  பிராட்டியுடன் சேர்ந்து இருக்கக்கூடிய எம்பெருமானின் திருமேனியை முதலில்  பார்த்து அனுபவித்தவர் பேயாழ்வார்.அப்படிப் பார்த்த மகிழ்ச்சியில் திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும் அருக்கன் அணிநிறமும் கண்டேன் என்று ஆழ்வார் நூறு பாசுரங்களை மூன்றாம் திருவந்தாதியில் அருளிச் செய்கிறார். அவர் பல்லாண்டு வாழ வேண்டும் என்று அப்பிள்ளை முதல்வரியில் காட்டுகிறார்,

சிறந்ததான ஐப்பசி மாதம் சதய நக்ஷத்ரத்தில் அவதாரம் செய்த வள்ளல் வாழ்க.  வள்ளல் என்று இவ்வாழ்வாரை அழைக்கக் காரணம் எம்பெருமானைக் கண்ட பெருமையை தான் அனுபவித்தது மட்டுமல்லாமல் அனைவரும் அறியும் வண்ணம் பாசுரங்களாக அருளிச் செய்த உதார குணம் கொண்டவர். அப்படிப்பட்ட பேயாழ்வார் வாழ்க.

மரிக்கொழுந்து என்று வாசனை உடைய மலரின் மணம் கமழ்கின்ற மயிலை நகரில் வாழ வந்த பேயாழ்வார் வாழ்க.

இவர் கரிய நிறத்தில் இருக்கக் கூடிய நெய்தல் மலரில் அவதரித்தவர்.  இவரும் அயோநிஜர்.  அப்படிப்பட்ட பேயாழ்வார் வாழ்க.

மூன்று ஆழ்வார்களும் திருக்கோவலூரில் மழை பெய்து கொண்டிருக்கும் காலத்தில் இடைகழியில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை யாரோ நெருக்குவது போன்று தோன்றுகிறது.  எம்பெருமான் தன் பிராட்டியுடன் கூட இந்த பக்தர்களுடன் (மூன்று ஆழ்வார்கள்) சேர்ந்து அனுபவிக்க வேண்டும் என்று வந்திருக்கிறான். ஆனால் முதலாழ்வார்களுக்கு இருட்டில் அது தெரியாததால் மற்ற இரு ஆழ்வார்களும் (பொய்கையாழ்வார் மற்றும் பூதத்தாழ்வார்) விளக்கேற்ற எம்பெருமானை மூன்று ஆழ்வார்களும் தரிசிக்கிறார்கள்.  முதலில் திருக்கண்டேன் என்று பேயாழ்வார் பார்த்துச் சொல்ல மற்ற இருவரும். அவருடன் கூடி அனுபவிக்கிறார்கள்.  எம்பெருமானும் பிராட்டியுமாக அந்த இடைகழியிலே வந்து முதலாழ்வார்களை நெருக்க அந்த இடத்தில் நின்ற செல்வனான (பக்தி என்ற செல்வத்தை உடையவரான) பேயாழ்வார் வாழ்க.

சுதர்சன சக்கரம் (நேமி) மற்றும் பாஞ்சஜன்யம் (சங்கம்)  இரண்டையும் கையில் வைத்திருக்க கூடிய எம்பெருமானுடைய திருமேனி அழகை நன்றாகத் தன்னுடைய நெஞ்சிலே வாங்கி முதலிலே அனுபவித்தவரான பேயாழ்வாருக்குப் பல்லாண்டு.

மிகவும் ஈடுபாட்டுடன் திருமழிசை ஆழ்வார் தொழக் கூடியவர் பேயாழ்வார். திருமழிசை ஆழ்வார் பல மதங்களை ஆராய்ந்து ஒவ்வொரு மதத்திலும் உள்ளே புகுந்து அந்தந்த மதத்தில் இருந்த விஷயங்களை தெரிந்துகொண்டு அதை எல்லாம் ஆராய்ந்து பார்த்து, கடைசியில் எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன் தான் உயர்ந்தவன் என்று தெளிவு பெற்றவர். அவருக்குத் தெளிவு பிறப்பதற்கு மிக முக்கியமான காரணமாக இருந்தவர் பேயாழ்வார். பேயாழ்வார் வாழ்ந்த காலத்திலேயே திருமழிசை ஆழ்வாரும் வாழ்ந்திருக்கிறார்.   திருமழிசை ஆழ்வார் தம்முடைய யோக சக்தியினாலே ஏறக்குறைய 4700 ஆண்டுகள் இந்த உலகத்திலேயே இருந்திருக்கிறார் என்று சரித்திரம் காட்டுகிறது.

 பகவத் விஷயத்தில் ஈடுபாடு இல்லாமல் இருந்த திருமழிசை ஆழ்வாரை தம்முடைய ஞானத்தாலே பேயாழ்வார் நல்ல உபதேசங்கள்  செய்து திருத்துகிறார்.  அதிலிருந்து திருமழிசையாழ்வார் பேயாழ்வாரிடத்தில் மிகவும் பக்தியுடன் இருந்திருக்கிறார்.  திருமழிசை ஆழ்வார் தொழும் பேயாழ்வார் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்.

அந்தப் பேயாழ்வாரின் இரு திருவடிகளும் இந்தப் பரந்த பூவுலகில்  வாழ்க.





          

மூன்றாம் திருவந்தாதி



2335

பண்டுஎல்லாம் வேங்கடம்*  பாற்கடல் வைகுந்தம்,* 
கொண்டு அங்கு உறைவார்க்கு கோயில்போல்,* - வண்டு
வளம் கிளரும் நீள்சோலை*  வண் பூங் கடிகை,* 
இளங்குமரன் தன் விண்ணகர்.  (2)  61


2343

விண்ணகரம், வெஃகா*,  விரி திரை நீர் வேங்கடம்,* 
மண் நகரம் மா மாட வேளுக்கை,* - மண்ணகத்த
தென் குடந்தை*  தேன்ஆர் திருவரங்கம் தென்கோட்டி,* 
தன் குடங்கை நீர் ஏற்றான் தாழ்வு. 62



2344

தாழ் சடையும் நீள் முடியும்*  ஒண் மழுவும் சக்கரமும்,* 
சூழ் அரவும் பொன் நாணும் தோன்றுமால்,*- சூழும்
திரண்டு அருவி பாயும்*  திருமலை மேல் எந்தைக்கு,* 
இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து. 63



2345

இசைந்த அரவமும்*  வெற்பும் கடலும்,* 
பசைந்து, அங்கு அமுது படுப்ப,* - அசைந்து
கடைந்த வருத்தமோ*  கச்சி வெஃகாவில்,* 
கிடந்து இருந்து, நின்றதுவும், அங்கு? 64


2346

அங்கற்கு இடர் இன்றி*  அந்திப் பொழுதத்து,* 
மங்க இரணியனது ஆகத்தை,* - பொங்கி
அரி உருவ மாய்ப் பிளந்த*  அம்மான் அவனே,* 
கரி உருவம் கொம்பு ஒசித்தான் காய்ந்து.  65





உபதேசரத்தினமாலை


6
ஐப்பசியில் ஓணம் அவிட்டம் சதயம் இவை
ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர் – எப்புவியும்
பேசுபுகழ் பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார்
தேசுடனே தோன்று பிறப்பால்


7
  
மற்றுள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து
நற்றமிழால் நூல்செய்து நாட்டை உய்த்த - பெற்றிமையோர்
என்று முதலாழ்வார்களென்னும் பெயரிவர்க்கு
நின்றது உலகத்தே நிகழ்ந்து


















ஸ்ரீ பேயாழ்வார் திருவடிகளே சரணம்!!



அன்புடன்
அனுபிரேம் 💚💚💚💚


No comments:

Post a Comment