31 October 2025

பூதத்தாழ்வார் - ஐப்பசியில் அவிட்டம்

  ஸ்ரீ பூதத்தாழ்வாரின் அவதார திருநட்சத்திரம் இன்று .... ஐப்பசி மாதம் அவிட்ட நட்சத்திரத்தில் அவதரித்தவர் இவர்.




பூதத்தாழ்வார் வாழி திருநாமம்!

அன்பே தகளி நூறும் அருளினான் வாழியே

ஐப்பசியில் அவிட்டத்தில் அவதரித்தான் வாழியே

நன்புகழ் சேர் குருக்கத்தி நாண்மலரோன் வாழியே

நல்ல திருக்கடல்மல்லை நாதனார் வாழியே

இன்புருகு சிந்தை திரியிட்ட பிரான் வாழியே

எழில்  ஞானச் சுடர்விளக்கை ஏற்றினான் வாழியே

பொன்புரையும்  திருவரங்கர் புகழுரைப்போன் வாழியே

பூதத்தார் தாளிணை இப் பூதலத்தில் வாழியே  !




பூதத்தாழ்வார் -

பிறந்த ஊர் - மகாபலிபுரம்

பிறந்த ஆண்டு - 7ம் நூற்றாண்டு

நட்சத்திரம்   - ஐப்பசி அவிட்டம் (வளர்பிறை நவமி திதி)

கிழமை   - புதன்

எழுதிய நூல் - இரண்டாம் திருவந்தாதி

பாடல்கள்  - 100

சிறப்பு     -  குருக்கத்தி மலரில் பிறந்தவர், திருமாலின் கதாயுத அம்சம்.

மஹாவிஷ்ணுவின் கதையான கெளமோதகியின் அம்சமான பூதத்தார் கடல்மல்லையில் (மாமல்லபுரம்), கடலுக்கருகில் உள்ள குளக் கரைத் தோட்டத்தில் ஒரு குருக்கத்தி (நீலோத்பவ) மலரில் அவதரித்தார். 

இவர் திருமாலையே எந்நேரமும் நினைத்து, அவர் கல்யாண குணங்களை அனுபவித்துக் கொண்டே-வேறு எதிலும் நாட்டமில்லாமல் , ஒரு அசாதாரண மனிதராக இருந்ததால், பூதத்தாழ்வார் என்றழைக்கப்பட்டார்.

வடமொழியில் பூ என்பது ஓர் அடிச் சொல். அதன் அடியாகப் பிறந்ததே  பூதம் என்னும் சொல். இதற்குச் சத்து (அறிவு) என்று பொருள்.

எம் பெருமானின் திருக்குணங்களை அனுபவித்தே சத்தைப் பெற்றார் ஆதலால், பூதத்தாழ்வார் எனப்பட்டார் எனவும், பூதம் என்பது இவ்வுலகிலே நிலைத்து இருக்கக் கூடிய பொருள்களைக் குறிப்பது. 

அதாவது  பகவத் பக்தி, பகவத் ஞானம், பரம பக்தி என எம்பெருமானை  தவிர வேறு ஒன்றும் இல்லை எனும் வைராக்கியம். அவ்வாறு எம்பெருமானிடத்திலே, அவனது கல்யாண குணங்களில் அடிமை  செய்யப் பெற்றவராதலால் பூதத்தாழ்வார் எனப்பட்டார் எனவும்  பெரியவர்கள் வாக்கு.

 இவரின் மறு பெயர்கள் பூதஹ்வயர் மற்றும் மல்லாபுரவராதீசர் ஆகியவை.

 இவர் அருளிச்செய்த பிரபந்தம் இரண்டாம் திருவந்தாதி. நூறு பாசுரங்கள் அந்தாதி க்ரமத்திலே இருக்கக்கூடிய பாசுரங்கள். 




பூதத்தாழ்வார் வாழி திருநாமத்தின் விளக்கம்

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக என்று தொடங்கி பூதத்தாழ்வார் அருளிச்செய்த நூறு பாசுரங்கள் கொண்டது இரண்டாம் திருவந்தாதி.   அப்படிப்பட்ட பூதத்தாழ்வார் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்.

ஐப்பசியில் அவிட்ட நக்ஷத்திரத்தில் அவதரித்தவர் பூதத்தாழ்வார் அவர் வாழ்க என்று சொல்கிறார் அப்பிள்ளை.

குருக்கத்தி என்பது மாதவிக் கொடி என்று அழைக்கப்படும் ஒரு கொடி.  நல்ல புகழை உடையதான அந்தக் கொடியிலே ஒரு புஷ்பத்திலே அவதரித்தவர் பூதத்தாழ்வார். இவரும் புஷ்பத்திலிருந்து அவதரித்ததால் அயோநிஜராவார்.  அப்படிப்பட்ட பூதத்தாழ்வார் வாழ்க,

திருக்கடல்மல்லை என்ற நகரத்துக்குத் தலைவராக இருக்கக் கூடியவர் இவர் வாழ்க. திருக்கடல்மல்லை தேசத்தில் எம்பெருமானுடைய அடியவர்கள் பலரையும் வழி நடத்தியவர் என்று பூதத்தாழ்வார் அறியப்படுகிறார்.

தன்னுடைய அன்பையே திரியாக இட்டு விளக்கேற்றிய பூதத்தாழ்வார் வாழ்க.

தனக்கு பகவத் விஷயத்திலே இருக்கக்கூடிய ஞானத்தையே கொண்டு விளக்கை ஏற்றிய பூதத்தாழ்வார்  வாழ்க.

பொன்னைப் போன்று இருக்கக்கூடிய திருவரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீ ரங்கநாதர்.  அவரிடத்தலே  மிகவும் ஈடுபாடு கொண்டு அவருடைய புகழை தன்னுடைய பாசுரங்களில் அழகாக வெளியிட்டவர் பூதத்தாழ்வார்.  அப்படிப்பட்ட பூதத்தாழ்வார் வாழியே

இந்த பூமியிலே பூதத்தாழ்வாருடைய இரண்டு திருவடிகளும் பல காலம் வாழவேண்டும் என்று அப்பிள்ளை அருளிச் செய்துள்ளார்.









ஸ்ரீ பூதத்தாழ்வார் அருளிச்செய்த இரண்டாம் திருவந்தாதி



2242


நின்றது ஓர் பாதம்*  நிலம் புதைப்ப நீண்ட தோள்*
சென்று அளந்தது என்பர் திசை எல்லாம்*  - அன்று-
கரு மாணியாய் இரந்த*  கள்வனே, உன்னைப்-
பிரமாணித்தார்*  பெற்ற பேறு.    61         


2243

பேறு ஒன்றும் முன் அறியேன்*  பெற்று அறியேன் பேதைமையால்,* 
மாறு என்று சொல்லி வணங்கினேன்,*  ஏறின்-
பெருத் தெருத்தம், கோடு ஒசிய*  பெண் நசையின் பின் போய்,* 
எருத்து இறுத்த நல் ஆயர் ஏறு.  62


2244

ஏறு ஏழும்*  வென்று அடர்த்த எந்தை,*  எரி உருவத்து-
ஏறு ஏறி பட்ட இடுசாபம்*  - பாறு ஏறி-
உண்ட தலை வாய் நிறைய*  கோட்டு அம் கை ஒண் குருதி,*
கண்ட பொருள் சொல்லின் கதை.     63    


2245

கதையின் பெரும் பொருளும் கண்ணா!*  நின் பேரே,- 
இதயம்*  இருந்தவையே ஏத்தில்,*  - கதையின்-
திருமொழியாய் நின்ற*  திருமாலே*  உன்னைப்-
பரு மொழியால் காணப் பணி.   64


2246

பணிந்தேன் திருமேனி*  பைங் கமலம் கையால்*
அணிந்தேன் உன் சேவடிமேல் அன்பாய்*  - துணிந்தேன்- 
புரிந்து ஏத்தி*  உன்னை புகலிடம் பார்த்து,*  ஆங்கே-
இருந்து ஏத்தி*  வாழும் இது.   65







உபதேசரத்தினமாலை


6
ஐப்பசியில் ஓணம் அவிட்டம் சதயம் இவை
ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர் – எப்புவியும்
பேசுபுகழ் பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார்
தேசுடனே தோன்று பிறப்பால்


7
 மற்றுள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து
நற்றமிழால் நூல்செய்து நாட்டை உய்த்த - பெற்றிமையோர்
என்று முதலாழ்வார்களென்னும் பெயரிவர்க்கு
நின்றது உலகத்தே நிகழ்ந்து










ஸ்ரீ பூதத்தாழ்வார்  திருவடிகளே சரணம்!!



அன்புடன்
அனுபிரேம் 💛💜💛

No comments:

Post a Comment