13 July 2019

ஸ்ரீ நாதமுனிகள்

ஸ்ரீ நாதமுனிகள்  திருநட்சத்திரம் ஆனி அனுஷம் இன்று ..






நாதமுனிகள் வாழி திருநாமம்



ஆனி தனில் அனுடத்தில் அவதரித்தான் வாழியே!

ஆளவன்தார்க்கு உபதேசம் அருளி வைத்தான் வாழியே!

பானு தெற்கில் கண்டவன் சொல் பல உரைத்தான் வாழியே!

பராங்குசனார் சொல் பிரபந்தம் பரிந்து கற்றான் வாழியே!

கானமுறத் தாளத்தில் கண்டிசைத்தான் வாழியே!

கருணையினால் உபதேசக் கதி அளித்தான் வாழியே!

நானிலத்தில் குரு வரையை நாட்டினான் வாழியே!

நலம் திகழும் நாதமுனி நற்பதங்கள் வாழியே!





ஆசார்ய பரம்பரையில் திருமகள் கேள்வன், திருமகள், சேனைமுதலியாராகிய விஷ்வக்சேனர், நம்மாழ்வார் என்ற நான்கு ஆசாரியர்களில், முதல் மூவர் விண்ணுலகத்தவர்.

நான்காவது ஆசாரியரான நம்மாழ்வார் இறைவனால் மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர் - அதனால் உள்ளதை உள்ளபடி உள்ளங்கை நெல்லிக்கனி போல் அறிந்து வேதங்கள் சொல்லாதவற்றையும் வேதங்களில் நேரடியாகச் சொல்லப்படாதவற்றையும் வேதங்களில் குழப்பம் தரும் பகுதிகளைத் தெளிவுறுத்துபவற்றையும் தன்னுடைய திருவாய்மொழி முதலான பாசுரங்களில் பாடி 'வேதம் தமிழ் செய்த மாறன்' என்று பெயர் பெற்றவர்.

இப்பரம்பரையில் ஐந்தாவது ஆசாரியர் நாதமுனிகள். அவர் முதற்கொண்டு தொடர்ந்து ஆசார்ய பரம்பரை தடையில்லாமல் வந்து கொண்டிருக்கிறது.



பிறந்த காலம்      - கி.பி. 823 - கி.பி. 917
பிறந்த ஆண்டு - சோபக்ருத ஆண்டு
மாதம் - ஆனி
திருநட்சத்திரம் - அனுசம்
திதி - பௌர்ணமி (புதன் கிழமை)
இடம் - காட்டு மன்னார் கோயில் (வீரநாராயணபுரம்)
அம்சம் - சேனை முதலியாரின் படைத்தலைவர் கஜாநனர்.

நாதமுனிகள் யோகவித்தை தேவ கான இசை ஆகியவற்றில் சிறந்து விளங்கினார்.

இவரது இயற்பெயர் திருவரங்க நாதன். ஆனால் இவர் சிறந்த யோகியாக இருந்ததால் இவரை திருவரங்க நாதமுனிகள் என்று அழைத்தனர்.

அதுவே பிற்காலத்தில் மருவி நாதமுனிகள் ஆயிற்று.


காட்டுமன்னார்குடி என்ற திருத்தலத்தில் ஒன்பதாம் நூற்றாண்டில் பிறந்தவர் நாதமுனிகள். அவர் பிறந்த காலத்தில் ஆழ்வார்களால் பாடப்பெற்ற பாசுரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பாடப்பெற்று வந்தன.

எல்லோரும் முறையாகப் பயின்று பாடும்படியாக அவை தொகுக்கப் பெறவில்லை. அனைத்து பாசுரங்களையும் அறிந்தவர் என்று ஒருவரும் காணப்படவில்லை.

அப்படியிருக்கும் போது இத்திருத்தலத்தில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு இறைவனை வணங்கவந்த அடியவர்கள் சிலர் 'ஆராவமுதே' என்று தொடங்கும் திருவாய்மொழியின் பத்து பாசுரங்களைப் பாடினார்கள்.

அப்பாசுரங்களின் அழகிலும் இனிமையிலும் பொருளாழத்திலும் கவரப்பட்ட இளைஞரான நாதமுனிகள் அப்பாடல்களைப் பற்றி அந்த அடியார்களிடம் விசாரிக்க, அவர்கள் தாங்கள் கும்பகோணத்தில் இருந்து வருவதாகவும் அப்பாசுரங்கள் நம்மாழ்வாருடைய திருவாய்மொழிப் பாசுரங்கள் என்றும், அவை திருக்குடந்தைப் பெருமாளைப் பாடும் பாசுரங்கள் என்றும் அதனால் முன்னோர்கள் கற்றுக் கொடுத்துத் தங்களுக்குப் பாடமாயின என்றும் தெரிவித்தனர்.



அப்பாசுரங்களின் முடிவில் 'ஆயிரத்தில் இந்தப் பத்துப் பாசுரங்கள்' என்ற குறிப்பு வந்ததைக் கேட்டு அந்த ஆயிரம் பாசுரங்களும் அவர்களுக்குத் தெரியுமா என்று நாதமுனிகள் கேட்க, 'தெரியாது. ஆழ்வாரின் பிறந்த ஊரான திருக்குருகூர் ஆழ்வார் திருநகரிக்குச் சென்றால் கிடைக்கலாம்' என்று அவர்கள் கூறினார்கள்.

அதன்படியே நாதமுனிகள் தாமிரபரணி ஆற்றங்கரையில் இருக்கும் ஆழ்வார் திருநகரிக்கு வந்து விசாரிக்க அங்கும் அவருக்கு அப்பாசுரங்கள் கிடைக்கவில்லை.

நம்மாழ்வாரின் சீடரான மதுரகவியாழ்வார் தன் ஆசாரியரின் மேல் எழுதிய 'கண்ணிநுண்சிறுத்தாம்பு' என்று தொடங்கும் பத்து பாசுரங்கள் மட்டுமே கிடைத்தன.

அந்தப் பாசுரங்களைக் கற்றுக் கொண்டு நம்மாழ்வார் அமர்ந்திருந்த உறங்காப்புளியின் கீழ் அமர்ந்து அப்பாடல்களைப் பல்லாயிரம் முறை ஓதினார் நாதமுனிகள்.



அப்படி ஓதும் போது யோகதசையில் நம்மாழ்வார் நாதமுனிகளின் முன்பு தோன்றி தன்னுடைய திருவாய்மொழி மட்டும் இல்லாமல் மற்ற ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களையும் தந்தருளினார்.

அப்பாசுரங்களை எல்லாம் தொகுத்து முறைப்படுத்தி இசையமைத்து தன் மருமகன்களுக்கு அவற்றைக் கற்றுக் கொடுத்து அவர்கள் மூலமாக இசையுடன் கூடிய ஆழ்வார் பாசுரங்களை தமிழகம் எங்கும் பரவச் செய்தார் நாதமுனிகள்.


ஆசாரிய பரம்பரையில் நாதமுனிகளுக்குப் பின்னர் பெரும் புகழ் பெற்றவர் அவருடைய பேரனான யாமுனமுனிகள் /யமுனைத்துறைவர் .

அவருக்கு ஆளவந்தார் என்றும் ஒரு பெயர் உண்டு.

தனக்கு நம்மாழ்வார் மூலமாகக் கிடைத்த உபதேசங்களை எல்லாம் ஆளவந்தாருக்குத் தக்க காலம் வரும் போது உபதேசிக்கும் படி தன் சீடரான உய்யக்கொண்டாரிடம் சொல்லி வைத்தார் நாதமுனிகள்.

உய்யக்கொண்டாரும் தனது சீடரான மணக்கால் நம்பியிடம் அப்பொறுப்பை ஒப்படைத்தார்.

மணக்கால் நம்பி ஆளவந்தாருக்கு உபதேசம் செய்து தன் பரமகுருவின் கட்டளையை நிறைவேற்றினார்.



.
பாடல்களை ஓதினால் அவ்வளவு எளிதாக மனதில் நிற்காது. அதே பாடல்களை இசையுடன் பாடினால் மிகவும் எளிதாக மனதில் நிற்கும்.

இசையுடன் பாடும் படி அமைந்த நாலாயிரம் பனுவல்களுக்கும் தகுந்த இசைமுறைகளை அமைத்து கீழையகத்து ஆழ்வான், மேலையகத்து ஆழ்வான் என்னும் தன்னுடைய இரு மருமகன்களுக்கும் கற்றுக் கொடுத்து அதன் மூலம் நாலாயிரம் பாசுரங்களும் உலகத்தில் பரவும் படி செய்தார் நாதமுனிகள்.










திருவாய்மொழி

ஐந்தாம் பத்து

எட்டாம் திருவாய்மொழி – ஆராவமுதே

பேறுகிட்டாமையால் ஆராவமுதாழ்வாரிடத்தில் ஆழ்வார் தீராத ஆசையுடன் ஆற்றாமை பேசி அலமருதல்



ஆராவமுதே! அடியேனுடலம் நின்பாலன்பாயே 
நீராயலைந்துகரைய உருக்குகின்றநெடுமாலே! 
சீரார்செந்நெல்கவரிவீசும் செழுநீர்த்திருகுடந்தை 
ஏரார்கோலந்திகழக்கிடந்தாய்! கண்டேன் எம்மானே! (2)

1 3194



எம்மானே! என்வெள்ளைமூர்த்தி! என்னையாள்வானே! 
எம்மாவுருவும்வேண்டுமாற்றால் ஆவாய்! எழிலேறே! 
செம்மாகமலம்செழுநீர்மிசைக்கண்மலரும் திருக்குடந்தை 
அம்மாமலர்க்கண்வளர்கின்றானே! என்நான் செய்கேனே?!

2 3195



என்நான்செய்கேன்? யாரேகளைகண்? என்னையென் செய்கின்றாய்?  
உன்னாலல்லால்யாவராலும் ஒன்றும்குறைவேண்டேன் 
கன்னார்மதிள்சூழ்குடந்தைக்கிடந்தாய்! அடியேனரு வாணாள்  
சென்னாள்எந்நாள்? அந்நாள் உன்தாள்பிடித்தே செலக்காணே.

3 3196



செலக்காண்கிற்பார்காணுமளவும் செல்லும்கீர்த்தியாய்!  
உலப்பிலானே! எல்லாவுலகுமுடையஒருமூர்த்தி!  
நலத்தால்மிக்கார்குடந்தைக்கிடந்தாய்! உன்னைக் காண்பான்நான்
அலப்பாய் * ஆகாசத்தைநோக்கி அழுவன்தொழுவனே.

4 3197



அழுவன்தொழுவன்ஆடிக்காண்பன் பாடியலற்றுவன்  
தழுவல்வினையால்பக்கம்நோக்கி நாணிக்கவிழ்ந்திருப்பன் 
செழுவொண்பழனக்குடந்தைக்கிடந்தாய்! செந்தாமரைக்கண்ணா! 
தொழுவனேனைஉனதாள் சேரும்வகையேசூழ்கண்டாய்.

5 3198


சூழ்கண்டாய்என்தொல்லைவினையையறுத்து உன்னடிசேரும் 
ஊழ்கண்டிருந்தே * தூராக்குழிதூர்த்து எனைநாள கன்றிருப்பன்?  
வாழ்தொல்புகழார்குடந்தைக்கிடந்தாய்! வானோர் கோமானே! 
யாழினிசையே! அமுதே! அறிவின்பயனே அரியேறே!

6 3199


அரியேறே என்னம்பொற்சுடரே! செங்கண்கருமுகிலே!  
எரியே! பவளக்குன்றே! நாள்தோளெந்தாய்! உனதருளே! 
பிரியா அடிமை என்னைக்கொண்டாய்! குடந்தைத் திருமாலே!  
தரியேன் இனிஉன்சரணந்தந்து என் சன்மம்களையாயே.

7 3200


களைவாய்துன்பம்களையாதொழிவாய் களைகண்மற்றிலேன்  
வளைவாய்நேமிப்படையாய்! குடந்தைக்கிடந்தமாமாயா!  
தளராவுடலமெனதாவி சரிந்துபோம்போது 
இளையாதுஉனதாள்ஒருங்கப்பிடித்துப் போதஇசைநீயே.

8 3201


இசைவித்து என்னைஉன்தாளிணைக்கீழ் இருத்தும் அம்மானே! 
அசைவிலமரர்தலைவர்தலைவா! ஆதிப்பெருமூர்த்தி! 
திசைவில்வீசும் செழுமாமணிகள்சேரும் திருக்குடந்தை 
அசைவிலுலகம்பரவக்கிடந்தாய்! காணவாராயே.

9 3202


வாராவருவாய்வருமென்மாயா! மாயாமூர்த்தியாய்! 
ஆராவமுதாய் அடியேனாவி அகமேதித்திப்பாய் 
தீராவினைகள்தீர என்னையாண்டாய்! திருக்குடந்தை 
ஊரா! *உனக்காட்பட்டும் அடியேன்இன்னம் உழல்வேனோ? (2)

10 3203


உழலையென்பின்பேய்ச்சிமுலையூடு அவளையுயிருண்டான்  
கழல்களவையேசரணாக்கொண்ட குருகூர்ச்சடகோபன் 
குழலின்மலியச்சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும் 
மழலைதீரவல்லார் காமர்மானேய்நோக்கியர்க்கே. (2)

11 3204





ஓம் நமோ நாராயணாய நம!!


நாதமுனிகள் திருவடிகளே சரணம் !!




அன்புடன்

அனுபிரேம்...

4 comments:

  1. வணக்கம் சகோதரி

    அருமையான தெளிவான பதிவு. அறியாதவற்றை விளக்கமாக தங்கள் பதிவின் வாயிலாக, தங்களின் அற்புதமான எழுத்து நடையில் படித்துணர்ந்தேன். எளிய நடையில் நன்கு படித்துணரும் பாசுரங்களையும் படித்துப் பாடி மகிழ்ந்தேன்.பக்தியுடன் பதிவு மிக அருமையாக இருக்கிறது சகோதரி. ஸ்ரீமன்நாராயணன் அனைவரையும் காத்தருள வேண்டுகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  2. http://mathysblog.blogspot.com/2014/01/blog-post_9.html

    http://mathysblog.blogspot.com/2014/01/2.html

    நாதமுனிகள் பற்றி நான் எழுதிய பதிவுகள்.

    அருமையாக அவரின் வரலாறை நீங்கள் எழுதி இருக்கிறீர்கள்.
    நான் நாதமுனிகள் திருவரசு போனது அப்புறம் பதிவு போட்டது எல்லாம் அவன் அருள்.
    நாதமுனிகள் திருவடிகளே சரணம்.

    ஓம் நமோ நாராயணாய நம!!

    ReplyDelete
  3. ரசித்துப் படித்தேன். நாதமுனிகள் என்றாலே அவர் தொகுத்த நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் நினைவிற்கு வருகிறது.

    ReplyDelete
  4. சிறப்பான தொகுப்பு.

    படங்களும் சிறப்பாக வந்திருக்கின்றன.

    ReplyDelete