24 January 2020

அன்னை அபிராமி...

வாழ்க வளமுடன் 

இன்று தை  அமாவாசை ....

அபிராமிப் பட்டருக்கு அன்னை காட்சி  அருளிய நாள் ...





திருக்கடையூர் ஆலயத்தில் சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வழிபாடுகள் நடத்திவந்த அத்யான பட்டர் என்னும் தலைமை பட்டரான அமிர்தலிங்க அய்யருக்கு சுப்பிரமணியன் என்ற மகன் பிறந்தார். பின்னாளில் அவர்தான் அபிராமி பட்டராக மாறினார்.




அமிர்தலிங்க அய்யர் தம் மகன் அபிராமி பட்டருக்கு சங்கீதப் பயிற்சியும், குடும்பத்தின் பரம்பரையான தேவி உபாசனையும் அறியச் செய்தார். அபிராமிபட்டர் சிறுவயது முதலே அன்னை அபிராமியிடம், அன்பும் பக்தியும் கொண்டிருந்தார். அன்னையைத் தியானித்து யோகசித்தி அடைந்தார்.

அவர் தமிழ் தவிர வடமொழியிலும், சங்கீதத்திலும் தேர்ச்சி பெற்றிருந்தார். அவர் உள்ளத்தில் அபிராமி அன்னையின் மீது தோன்றும் அன்பின் விளைவாக பல துதிகளைத் தாமே இயற்றிப் பாடியும் வந்தார்.

அம்பிகையை வழிபடும் சாக்த நெறியில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டார். ஒளி வடிவில் அம்பிகையைத் தரிசித்து பேரின்பம் கண்டார். ஆனால், இவரின் தெய்வீக நிலையை மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. பித்தன், கிறுக்கன் என்று அவரை கேலியும் கிண்டலும் செய்தனர்.

யோக முறையில் அம்பிகையைத் துதித்து வந்த அபிராமிபட்டர் சரியை, கிரியை என்பவற்றைக் கடந்து யோகநிலையின் ஆதார பீடங்களில் அம்பாள் திருக்கோலத்தைக் கண்ணாரக் கண்டு இன்புற்று இடைப்பட்ட கிரந்திகளை எல்லாம் தாண்டிச்சென்று ஸஹஸ்ராரத்தில் ஒளிரும் ஒளிமயமான லலிதையின் திருவருளைப் பரிபூரணமாய் உணர்ந்து அந்த ஆனந்தத்தில் திளைத்து இன்புற்று இருந்தார்.





கோயிலுக்கு வரும் அனைத்து பெண்களையுமே அபிராமியின் அம்சமாகவே அவர் எண்ணி வழிபடுவார். அர்ச்சனைக்காக கைகளில் கொண்டுவரும் மலர்களை அந்தப் பெண்கள் மேல் தூவி மகிழ்வார். அவரது ஞானக் கண்களுக்கு அந்தப் பெண்கள் அபிராமி அம்சமாகவே தோன்றினார்கள். ஆனால் மக்களோ அபிராமி பட்டரை தினம் தினம் கேலியும், கிண்டலும் செய்து வந்தனர்.

ஒரு கட்டத்தில் அவருடைய ஆனந்த நிலையும், அதன் காரணமும் புரியாமல் போகவே இவர் ஏதோ துர்தேவதையை ஆராதித்து வந்த காரணத்தால் இப்படிப் பைத்தியமாய் ஆகி, ஆசாரங்களை எல்லாம் கைவிட்டுக் கெட்டுப் போய்விட்டார் என்று கூட சொல்லித் தூற்ற ஆரம்பித்தனர்.

அபிராமி பட்டரோ அதைக் காதில் வாங்கவில்லை. யாரையும் கண்டு கொள்ளவும் இல்லை. அபிராமியைத் துதிப்பதும், அவளைப் பற்றி துதிகள் இயற்றிப் பாடுவதுமாய் இருந்தார்.

தினமும் கோயிலில் அன்றைய திதிகளைக் கூறுவார். பிறகு அந்த திதிக்கு ஏற்றவாறு வழிபாட்டு நியமங்களை ஏற்பாடு செய்வதும் அபராமி பட்டரின் நித்ய கடமைகளில் ஒன்றாகும்.

இந்தப் பித்தனின் புகழை ஊரறிய, உலகறியச் செய்ய திருவுள்ளம் கொண்டாள் அன்னை அபிராமி!





அதற்கான நாளும் நெருங்கியது. ஒரு நாள் தை அமாவாசை தினத்தன்று தஞ்சையைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி (1675-1728) புரிந்து வந்த மராட்டிய மன்னர் சரபோஜி பூம்புகார் சென்று கடலில் நீராடினார். பிறகு அவர் திருக்கடவூருக்கு அமிர்தகடேசுவரரையும் அபிராமியையும் தரிசனம் செய்ய வந்தார்.

மன்னனைக் கண்டதும் மக்கள் வரவேற்று உபசரித்து வணங்கினார்கள். ஆனால் அபிராமிபட்டர் மன்னர் வந்திருப்பது அறியாமல், மன்னரை வணங்காமல் தனக்குள் தானே பேசிக் கொள்ளுவதும், சிரித்துக் கொள்ளுவதும், அழுவதுமாய் இருந்தார். மன்னர், இவர் யார் எனக் கேட்டார், சுற்றி இருந்தவர்கள் மன்னரிடம், மன்னா இவர் பெயர் அபிராமிபட்டர்.

தினமும் பைத்தியம் பிடித்தவர் போல நடந்து கொள்கிறார்.

தங்களுக்கு தர வேண்டிய மரியாதையை கூட வழங்காமல் கண்மூடி இருக்கிறார் பாருங்கள். எந்நேரமும் இப்படித்தான் இருப்பார். இவர் ஒரு பித்தன், என்று புகார் கூறினார்கள். ஆனால், சரபோஜி மன்னர் அவர்கள் சொன்னதை நம்பவில்லை.

இது எவ்வளவு தூரம் உண்மையாக இருக்கக் கூடும் என நினைத்த வண்ணம் சரபோஜி மன்னர் அதைச் சோதிக்க எண்ணினார்.

புறநினைவு சற்றுமின்றி, தன்னுள்ளே அன்னையைக் கண்டு பரவச நிலையில் அமர்ந்திருந்த அபிராமி பட்டரிடம் நெருங்கி சென்று இன்று என்ன திதி? என்று கேட்டார்.

மன்னரின் வருகையைப்பற்றி உணராமல் அன்னை அபிராமியின் ஒளிமிகுந்த முகத்தை பற்றி மட்டுமே எண்ணி யோக நிலையிலேயே கோடி சூர்யப் பிரகாசமாய் அன்னையைத் தன் மணக்கண்ணில் கண்டுகளித்திருந்த அபிராமிபட்டர் சற்றும் தாமதிக்காமல், இன்று பவுர்ணமி திதி” என்றார். உண்மையில் அன்று அமாவாசை.

அதை நினைத்தபடி சரயோஜி மன்னர் அப்படியென்றால் இன்று இரவு பவுர்ணமி நிலவு வருமா? என கேட்டார். அதற்கு அபிராமிபட்டர் நிச்சயம் வரும் என கண்மூடிய நிலையில் கூறினார்.



சரபோஜி மன்னருக்கு கோபம் வந்தது. இன்று இரவு பவுர்ணமி நிலவு வராவிட்டால் உனக்கு மரண தண்டனை என்றார். இது அரசகட்டளை என்று கூறி விட்டு மன்னர் சென்றார். அரசரும் அவருடைய பரிவாரமும் சென்ற பின்னர், தியானம் கலைந்தெழுந்த அபிராமி பட்டர் நிகழ்ந்ததை எல்லாம் மற்றவர்கள் மூலம் கேட்டு உணர்ந்தார்.

பெரிதும் வருந்தினார்.

ஏற்கெனவே ஊரும், உலகமும் தம்மைப் பித்தன் என்று சொல்லி எள்ளி நகையாடுவதை மெய்ப்பிப்பது போலவே நடந்த இந்த நிகழ்ச்சியால் கவலைப்பட்டார்.

இந்த தவறிலிருந்து அம்பிகையே தன்னைக் காத்தருளவேண்டும் என்று கண்ணீர் மல்க வேண்டினார்.

பிறகு அபிராமி சந்நிதி முன் ஒரு ஆழமான ஒரு குழியை வெட்டினார். அதில் விறகை அடுக்கி தீமூட்டினார்.



அதற்கு மேல் ஒரு விட்டமும், நூறு கயிறுகளாலான உறியையும் கட்டி, அதில் ஏறி அமர்ந்து கொண்டார். அம்பிகை எனக்குக் காட்சி கொடுத்து இந்தப் பழியை நீக்காவிட்டால் என் உயிரை விடுவேன்” என்று சபதம் செய்தார். பின்னர் அன்னையை நினைத்தப்படி அபிராமி அந்தாதியைப் பாட ஆரம்பித்தார்.

“உதிக்கின்ற செங்கதிர்” என்று ஆரம்பிக்கும் அந்தாதிப் பாடல்களை பாடத்தொடங்கினார்.

1: உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர்

மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை

துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்கும தோயம்-என்ன

விதிக்கின்ற மேனி அபிராமி, எந்தன் விழுத் துணையே:

உதய சூரியனின் செம்மையான கதிரைப் போலவும், 
உச்சித்திலகம் என்கிற செம்மலரைப் போலவும், 
போற்றப்படுகின்ற மாணிக்கத்தைப் போலவும், 
மாதுள மொட்டைப் போலவும், 
ஒத்து விளங்கும் மென்மையான மலரில் வீற்றிருக்கின்ற திருமகளும் துதிக்கக்கூடிய வடிவையுடையவள் என் அபிராமியாகும். அவள் கொடி மின்னலைப் போன்றும், மணம் மிகு குங்குமக் குழம்பு போன்றும் சிவந்த மேனியுடையவள். இனி அவளே எனக்குச் சிறந்த துணையாவாள்.


அபிராமி அந்தாதி மொத்தம் நூறு பாடல்கள் கொண்டது. ஒவ்வொரு பாடல் முடிந்ததும் ஒவ்வொரு கயிறாக அறுத்துக்கொண்டே வந்தார்.

காலை போனது; நண்பகல் சென்றது;

மாலையும் வந்தது... பொழுது சாய்ந்தது;

பட்டரின் நம்பிக்கை சாயவில்லை! அமாவாசை என்பதால் வானம் இருண்டு உலகமே இருளில் மூழ்கி கிடந்தது.


ஆனால், அன்னையின் ஆசியால் நிலவு நிச்சயம் வரும் என்று அபிராமி பட்டர் நம்பினார். 78 பாடல்கள் பாடி முடிந்தது. 78 கயிறும் அறுபட்டு விட்டது. மிகுதியாக இருந்த கயிற்றில் உறியில் இருந்த வண்ணம் பட்டர் நம்பிக்கை இழக்காது பாடிக்கொண்டே இருந்தார்.

அபிராமிபட்டர் 79 வது பாடலாக அம்மா! உன் விழிக்கே அருள் பார்வையுண்டு. பழிபாவம் கொண்டு உழலும் மாந்தருடன் இனி எனக்கு என்ன தொடர்புண்டு? என்ற பொருள்படும் வகையில், ”விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு” என்ற பாடலைப் பாடினார்.


79: விழிக்கே அருளுண்டு; அபிராமவல்லிக்கு, வேதம்சொன்ன

வழிக்கே வழிபட நெஞ்சுண்டு; எமக்கு அவ்வழி கிடக்கப்

பழிக்கே சுழன்று வெம் பாவங்களே செய்து, பாழ் நரகக்

குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு என்ன கூட்டு  இனியே?


அபிராமியின் விழிகளில் என்றும் அருளுண்டு. 
வேதமுறைப்படி அவளை வழிபட எனக்கு நெஞ்சமும் உண்டு. 
ஆகையால் பழியையும், பாவத்தையுமே விளைவித்து, பாழ் நரகக்குழியில் அழுந்தி வாடும் பேதையர்களோடு எனக்கு இனி என்ன தொடர்பு? (அபிராமி அன்னை சிறந்த துணையாவாள்).


 அதை பாடி முடித்ததும், அன்னை அபிராமி அவருக்கு அருட்காட்சி கொடுத்தாள்.




தன் காதில் அணிந்திருந்த கம்மலை அன்னை அபிராமி கழற்றி எடுத்து வானவீதியில் வீசி எறிந்தாள். அந்த கம்மல் வானில் மிதந்து பலகோடி நிலாக்கள் ஒன்று கூடியது போல் ஒளியைப் பொழிந்தது.

அவள் அபராமிபட்டரிடம், நீ வாய் தவறி மன்னனிடம் கூறிய சொல்லையும் மெய்யே என நிரூபித்தேன். நீ தொடங்கிய அந்தாதியை தொடர்ந்து பாடு, என்றாள்.


அம்பிகை அருள்பெற்ற அபிராமிப்பட்டர் பரவசமுற்றார். அதோடு, தம் அனுபூதி நிலையை வெளிப்படுத்தும் அந்தாதிப் பாடல்களைப் பாடி நிறைவு செய்தார்.

அபிராமிப்பட்டரின் உறுதியான பக்தி கண்டு சரபோஜி மன்னரும் மகிழ்ந்தார். அபிராமிபட்டரைப் பற்றி பித்தன் என்று கூறியவர்கள் எல்லாம் மன்னிப்பு கேட்டனர்.

சரபோஜி மன்னர் அபிராமிபட்டருக்கு ஏராளமான மானியம் அளித்தார். அதற்கான பட்டயம் இன்றும் அபிராமி பட்டரின் வாரிசுகளிடம் உள்ளது.

100: குழையைத் தழுவிய கொன்றையந்  தார் கமழ் கொங்கைவல்லி

கழையைப் பொருத திருநெடுந்தோளும், கரும்புவில்லும்

விழையப் பொரு திறல் வேரியம் பாணமும்; வெண் நகையும்,

உழையப் பொருகண்ணும், நெஞ்சில் எப்போதும் 
 உதிக்கின்றவே!



ஏ, அபிராமி! குழையிலே தவழும்படியாகவுள்ள கொன்றை மலரால் தொடுத்த மாலையின் மணம்கமழும் மார்பகங்களையும் தோளையும் உடையவளே! 

மூங்கிலை ஒத்த அழகிய கரும்பு வில்லும், கலவிபோருக்கு விரும்பக்கூடிய மணம் மிகுந்த ஐவகை மலர் அம்பும், 
வெண்மையான முத்துப்பல் இதழ்ச் சிரிப்பும், 
மானை ஒத்த மருண்ட கண்களுமே எப்பொழுதும் என் நெஞ்சில் நிறைந்திருக்கிறது. அத் திருமேனியையே நான் வழிபடுகின்றேன்.


நூற்பயன்
ஆத்தாளை, எங்கள் அபிராமவல்லியை, அண்டம் எல்லாம்
பூத்தாளை, மாதுளம் பூநிறத்தாளை, புவிஅடங்கக்
காத்தாளை ஐங்கணை பாசாங்குசமும், கரும்பும், அங்கை
சேர்த்தாளை, முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே.


எங்கள் தாயானவளை, அபிராமி வல்லியை, 
எல்லா உலகங்களையும் பெற்றவளை, 
மாதுளம் பூப்போன்ற நிறத்துடையவளை, 
உலகமெல்லாம் காத்தவளை, 
திருக்கரங்களில் மலர் அம்புகள் ஐந்தையும், 
பாசத்தையும், அங்குசத்தையும், கரும்பு வில்லையும் வைத்திருபவளை, மூன்று கண்களையுடைய தேவியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் நேராது; 
உலகில் வளமும் நலமும் பெற்று வாழ்வர்.


அபிராமி அன்னையின் திருவடிகளே சரணம் ...


அன்புடன் 
அனுபிரேம் 

6 comments:

  1. அறிந்த கதை மீண்டும் அறிய வைத்தமைக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  2. மிக அழகாக அபிராமவல்லியைக் கண்முன்
    கொண்டு வந்துவிட்டீர்கள்.
    அபிராமபட்டரின் அருளும் அன்னையின் அருளும் நம்மைக் காக்கட்டும்.

    ReplyDelete
  3. அபிராமி பட்டருக்கு அன்னை காட்சி தந்தநாளா நாமும் நினைவுகொண்டு வணங்குகிறோம்.

    ReplyDelete
  4. அபிராமி அம்மனுக்கு காட்சி கொடுத்த நாளை வானில் முழுநிலவை வரசெய்த நாளை நானும் முன்பு பதிவு செய்து இருக்கிறேன். என் கணவரும் அதற்கு ஓவியம் வரைந்து தந்து இருக்கிறார்கள்.

    படங்களும், கதையும், பாடலும் பகிர்வு மிக அருமை.


    அபிராமி அன்னையின் திருவடிகளே சரணம் ...

    ReplyDelete
  5. அருமையான பதிவு. இன்று தை அமாவாசை வெள்ளிக்கிழமையில் வந்திருப்பது இன்னும் விஷேசம்... அத்தோடு சனி மாற்றமும் சேர்ந்து...

    ReplyDelete
  6. அறிந்த கதையை மீங்கள் உங்கள் வழி படித்து அறிந்ததில் மகிழ்ச்சி.

    தொடரட்டும் பதிவுகள்.

    ReplyDelete