28 April 2020

உடையவர் திருநட்சத்திரம்

உடையவர் திருநட்சத்திரம் -  சித்திரையில் திருவாதிரை

சுவாமி  இராமானுஜரின்   1004 ஆம் ஆண்டு திருநட்சித்திரம்   - இன்று...






எம்பெருமானார்  (சித்திரை – திருவாதிரை)



அத்திகிரி அருளாளர் அடிபணிந்தோன் வாழியே

அருட்கச்சி நம்பியுரை ஆறுபெற்றோன் வாழியே

பத்தியுடன் பாடியத்தைப் பகர்ந்திட்டான் வாழியே

பதின்மர்கலை உட்பொருளைப் பரிந்துகற்றான் வாழியே

சுத்தமகிழ் மாறனடி தொழுதுய்ந்தோன் வாழியே

தொல் பெரிய நம்பி சரண் தோன்றினான் வாழியே

சித்திரையில் ஆதிரை நாள் சிறக்க வந்தோன் வாழியே

சீர் பெரும்பூதூர் முனிவன் திருவடிகள் வாழியே ..!





எண்டிசையெண் இளையாழ்வார் எதிராசன் வாழியே

எழுபத்து நால்வருக்கும் எண்ணான்குரைத்தான் வாழியே

பண்டை மறையைத் தெரிந்த பாடியத்தோன் வாழியே

பரகாலன் அடியிணையைப் பரவுமவன் வாழியே

தண்டமிழ் நூல் நம்மாழ்வார் சரணானான் வாழியே

தாரணியும் விண்ணுலகும் தானுடையோன் வாழியே

தெண்டிரை சூழ்பூதூர் எம்பெருமானார் வாழியே

சித்திரையில் செய்யதிருவாதிரையோன் வாழியே









 திருநக்ஷத்ரம்  : சித்திரை, திருவாதிரை

அவதார ஸ்தலம்  : ஸ்ரீபெரும்பூதூர்

ஆசார்யன்  : பெரிய நம்பி

சிஷ்யர்கள்  : கூரத்தாழ்வான், முதலியாண்டான், எம்பார், அருளாளப்பெருமாள் எம்பெருமானார், அனந்தாழ்வான், 74 சிம்ஹாசனாதிபதிகள், 700 சந்யாசிகள், மற்றும் பல ஆயிரம் சிஷ்யர்கள் -12000 ஸ்ரீவைஷ்ணவர்கள்,  மற்றும் பல ஆயிரம் ஸ்ரீவைஷ்ணவர்கள் இவருக்கு சிஷ்யர்களாக இருந்தார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது.

பரமபதித்த இடம்  : ஸ்ரீரங்கம்

எம்பெருமானார் அருளிச்செய்தவை  : நவரத்தினங்களாகக் கருதப்பட்ட ஒன்பது (9) க்ரந்தங்களை அருளிச்செய்தார்.

அவை ஸ்ரீபாஷ்யம், கீதா பாஷ்யம், வேதார்த்த ஸங்ரஹம், வேதாந்த தீபம், வேதாந்த ஸாரம்,சரணாகதி கத்யம், ஸ்ரீரங்க கத்யம், ஸ்ரீவைகுண்ட கத்யம் மற்றும் நித்ய க்ரந்தம்.







இளையாழ்வார்- கேசவ தீக்ஷிதர் மற்றும் காந்திமதி அம்மங்காருக்கு, ஆதிசேஷனுடைய அவதாரமாக ஸ்ரீபெரும்பூதூரில் அவதரித்தார்.


சுவாமியின் மற்றும்   பல திருநாமங்கள் ...

1. இளையாழ்வார் என்ற திருநாமத்தை அவருடைய பெற்றோர்கள் சார்பில் பெரிய திருமலை நம்பி சூட்டினார்.

2. ஸ்ரீராமானுஜ என்ற திருநாமத்தை பஞ்ச  ஸம்ஸ்காரத்தின் போது பெரிய நம்பி சூட்டினார்.

3. யதிராஜ மற்றும் ராமானுஜ முனி என்ற திருநாமத்தை சன்யாஸாச்ரம ஸ்வீகாரத்தின் போது தேவப்பெருமாள் சூட்டினார்.

4. உடையவர் என்ற திருநாமத்தை நம்பெருமாள் சூட்டினார்.

5. லக்ஷ்மண முனி என்ற திருநாமத்தை திருவரங்கப் பெருமாள் அரையர் சூட்டினார்.

6. திருக்கோஷ்டியூரில் எம்பெருமானார் சரமஸ்லோக அர்த்தத்தை ஆசையுடையோர்க்கெல்லாம் கூறியபொழுது, திருக்கோஷ்டியூர் நம்பி “எம்பெருமானார்” என்ற திருநாமத்தை சூட்டினார்.

7. சடகோபன் பொன்னடி என்ற திருநாமத்தை திருமாலை ஆண்டான் சூட்டினார்.

8. எம்பெருமானார் 100 தடா வெண்ணை மற்றும் 100 தடா அக்கார அடிசில் திருமாலிருஞ்சோலை அழகருக்கு சமர்பித்தவுடன், “கோயில் அண்ணன்” என்ற திருநாமத்தை ஆண்டாள் சூட்டினாள்.

9. ஸ்ரீ பாஷ்யகாரர் என்ற திருநாமத்தை ஸரஸ்வதி காஷ்மீரில் சூட்டினாள்.

10. பூதபுரீசர் என்ற திருநாமத்தை ஸ்ரீபெரும்புதூரில் எழுந்தருளியிருக்கும் ஆதி கேசவ பெருமாள் சூட்டினார்.

11. தேசிகேந்த்திரர் என்ற திருநாமத்தை திருவேங்கடமுடையான் சூட்டினார்.






வையகம் தழைத்திட, வைணவம் வளர்த்திட்ட மகான் ஸ்ரீ இராமானுஜர்,
தானுகந்த திருமேனியராக ஸ்ரீ பெரும்புதூர்,
தமர் உகந்த திருமேனியராக மேல்கோட்டை திருநாராயணபுரம்,
தானான திருமேனியகராக ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களில் அருள்கிறார்.

சுவாமி இராமானுஜர் வைணவத்தின் அருமை பெருமைகளை பாரத நாடு முழுவதும் பரவச் செய்தார். பல்வேறு இடங்களில் வைணவ மடங்கள் நிறுவினார்.


முந்தைய பதிவுகள்...

 சுவாமி  இராமானுஜர் 

சுவாமி  இராமானுஜர் -உடையவரின் உயர்ந்த பக்தி நிலை 

உடையவர்  திருநட்சத்திர விழா...



திருவரங்கத்தமுதனார் அருளிய 
இராமாநுச நூற்றந்தாதி


சோராதகாதல் பெருஞ்சுழிப்பால் * தொல்லைமாலை யொன்றும்
பாராது அவனைப்பல்லாண்டென்றுகாப்பிடும் * பான்மையன் தாள்
பேராதவுள்ளத்திராமானுசன்தன்பிறங்கியசீர்
சாராமனிசரைச்சேரேன் * எனக்குஎன்னதாழ்வினியே?

15
3791


தாழ்வொன்றில்லா மறைதாழ்ந்து * தலமுழுதும்கலியே
ஆள்கின்றநாள்வந்து அளித்தவன்காண்மின் * அரங்கர்மௌலி
சூழ்கின்றமாலையைச்சூடிக்கொடுத்தவள்தொல்லருளால்
வாழ்கின்றவள்ளல் * இராமானுசனென்னும்மாமுனியே. (2)

16
3792





முனியார்துயரங்கள்முந்திலும் * இன்பங்கள்மொய்த்திடினும்
கனியார்மனம் கண்ணமங்கைநின்றானைக் * கலைபரவும்
தனியானையைத்தண்தமிழ்செய்தநீலன்தனக்கு உலகில்
இனியானை * எங்களிராமானுசனை வந்தெய்தினரே.

17
3793


எய்தற்கரியமறைகளை * ஆயிரம்இன்தமிழால் 
செய்தற்குஉலகில்வரும் சடகோபனைச் * சிந்தையுள்ளே
பெய்தற்கிசையும்பெரியவர்சீரை உயிர்களெல்லாம்
உய்வதற்குஉதவும் * இராமானுசன்எம்உறுதுணையே.

18
3794




உறுபெருஞ்செல்வமும் தந்தையும்தாயும் * உயர்குருவும்
வெறிதருபூமகள்நாதனும் * மாறன்விளங்கியசீர்
நெறிதருஞ்செந்தமிழாரணமேயென்று இந்நீணிலத்தோர்
அறிதரநின்ற * இராமானுசன் எனக்காரமுதே.

19
3795


ஆரப்பொழில்தென்குருகைப்பிரான் * அமுதத்திருவாய்
ஈரத்தமிழின் இசையுணர்ந்தோர்கட்கு * இனியவர்தம்
சீரைப்பயின்றுய்யுஞ்சீலங்கொள்நாதமுனியை நெஞ்சால்
வாரிப்பருகும் * இராமானுசன்என்தன்மாநிதியே.

20
3796



ஸ்ரீபெரும்புதூர்  எம்பெருமானார்


உய்ய ஒரேவழி! உடையவர் திருவடி!!

அத்திருவடிகளுக்கு சரணம்..!




 அன்புடன்

அனுபிரேம்..



5 comments:

  1. உய்ய ஒரே வழி, உடையவர் திருவடி...எங்களுக்கெல்லாம் அந்தவொரு அருமையான வாய்ப்பினைத் தந்துவிட்டீர்கள். நன்றி.

    ReplyDelete
  2. உடையவர் திருநட்சத்திர நாள். அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும்.

    வழமை போல படங்கள் சிறப்பு.

    நன்றி.

    ReplyDelete
  3. அருமையாக படங்களுடன் கூடிய இடுகை. மிகவும் சிறப்பா கோர்த்திருக்கீங்க. நான் ரொம்பவும் எதிர்பார்த்த ஸ்ரீரங்கம் உடையவர் படம் மிஸ்ஸிங். அதுதானே அவரது சரம உடல் (தானான மேனி).

    முனியார் துயரங்கள் முந்தினும்
    இன்பங்கள் மொய்த்திடினும் கனியார்

    இந்த மனநிலை வாய்ப்பது மிக மிக அரிது.

    ReplyDelete
  4. உடையவர் திருவடிகள் போற்றி..

    ReplyDelete
  5. உடையவர் திருவடிக்ளே சரணம்
    படங்கள் வரலறு மிக அருமை.

    ReplyDelete