17 March 2022

மேல்கோட்டை யதிராஜ சம்பத்குமாரர் வைரமுடி உற்சவம்...

மேல்கோட்டை திருநாராயணபுரம் ஸ்ரீ செல்வநாராயண பெருமாள் திருக்கோயில்.

மேல்கோட்டை யதிராஜ சம்பத்குமாரர் வைரமுடி ஸேவை - திவ்ய தரிசனம்....




வைர முடி சேவை

அன்றைய நாளில் கருடன் கொணர்ந்த வைரத்தாலான கிரீடம் செல்லப் பிள்ளைக்கு சாற்றப்பட்டு, 

தங்கத்தாலான கருடன் மீது மாட வீதிகளில் உபய நாச்சிமார்களுடன் எழுந்தருள செய்யப்படுகிறது.

வைர முடியை பகலில் காண இயலாது என்ற நம்பிக்கையின் கண் இவ் வைர முடி சேவை இப்போதும் இரவுப் பொழுதிலே தொடங்கி விடியும் முன் முடிக்கப்பட்டுவிடுகிறது.

மேலும் வைரமுடி சாற்றும் போதும் பிரதான அர்ச்சகர் தன் கண்களை மெல்லிய துணியால் கட்டிய பின்னரே வைரமுடியை அதற்குண்டான பெட்டியிலிருந்து வெளியில் எடுக்கிறார்.


கருடனுக்கு வைநதேயன் என்ற பெயரும் உண்டு.

எனவே கருடனால் கொணரப்பட்டது “வைநதேய முடி” என்றழைக்கப்பட்டு,

“வைநமுடி” என சுருங்கி பின்னர் “வைரமுடி” என மருவியுள்ளது.











ஸ்ரீ செல்வப்பிள்ளை திருவவதார க்ரமம்-

ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு பெரிய பெருமாளை எழுந்து அருளப் பண்ணிக் கொடுத்த பின்பு
தன்னகத்தில் திருவாராதனத்துக்கு அர்ச்சாவதார இல்லாமையால் இழவு பட்டு இருக்கும் சமயம் இந்த மூர்த்தியை நான்முகன், சக்கரவர்த்தி திருமகனுக்கு எழுந்து அருளப் பண்ணிக் கொடுத்தான் –

அது முதல் -ஹ்ருத உத்பவன் -என்ற திருநாமம் உடைய இவருக்கு -ராம பிரியன் -என்ற திருநாமம் ஆயிற்று –


செல்லப்பிள்ளை கண்ணன் திரு மாளிகைக்கு சேர்ந்த க்ரமம் -

சக்கரவர்த்தி திரு மகன் -அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி -என்றபடியே
திரு அயோத்யையில் இருந்த சராசரங்கள் எல்லாவற்றையும் கூட்டிக்கொண்டு தன்னுடைச் சோதிக்கு சேரும் பொழுது 

இந்த ராம பிரியனை  திருவடி கையிலே கொடுத்தான் –

அவன் சக்கரவர்த்தி திருமகன் திருக்குமாரரான குசா மஹாராஜனுக்குக் கொடுத்தான் –

குசன் தனது பெண் குழந்தையான கனக மாலினிக்கு ஸ்த்ரீதனமாகக் கொடுத்தான் –

அந்த கனக மாலினி யது வம்சத்தில் யது சேகரன் என்கிற வரனைக் கைப்பிடித்ததால் -அந்த வம்சக் க்ரமத்தாலே 

ஸ்ரீ ராமபிரியன் கண்ணனுடைய திரு மாளிகையிலும் சேவையைக் கைக் கொண்டு நின்றான்

வைரமுடி சரித்திரம்

ஒரு கால் விரோசனன் என்கிற அசுரன் - தனது தகப்பனாக ப்ரஹ்லாதன் விஷயத்தில் தேவதைகளுக்கு இருக்கும் விஸ்வாசத்தைப் பற்றித் தானும் அவர்களோடே கூட பாற்கடலில் பள்ளி கொண்ட அநிருத்த பகவானை சேவித்துக் கொண்டு இருந்து –

பகவான் யோகத்துயில் கொண்டு இருக்கும் பொழுது யாரும் இல்லாத சமயத்தில்
பகவானுடைய கிரீடத்தைப் பறித்துக் கொண்டு பாதாள லோகம் சேர்ந்தான் –

பிறகு அந்தரங்க கைங்கர்ய பரர்கள் பகவானுடைய திருமுடியைக் காணாமல் -இது விரோசனன் செய்த தீம்பு என்று சங்கித்து ஸ்ரீ கருடாழ்வானை அனுப்பினார்கள் –

வைநதேயன் பாதாள லோகம் சென்று விரோசனனை ஜெயித்து அநிருத்தனனுடைய கிரீடத்தை மீட்டுக் கொண்டு மகா வேகத்துடன் வாரா நின்றான் –

வைரமுடியை கண்ணனுக்கு சமர்ப்பித்தது –

இப்படி பெரிய திருவடி ஆகாச மார்க்கத்தில் வரும் பொழுது தன்னுடைய கதி தடைப்பட்டதைப் பார்த்து விஸ்மதனாய்-

நான்கு பக்கமும் பார்த்தாலும் ஒன்றும் புலப்படாமல் கீழே பூமியைப் பார்த்தான் –

மயில் பீலிகளாலும் குஞ்சா மணிகளாலும் அலங்க்ருதனாய் வேணு கானம் பண்ணிக் கொண்டும் பிருந்தாவனத்தில் ஆநிரைகளைக் காத்துக் கொண்டும் இருக்கிற கோபாலனைக் கண்டான் –

பரம ஆனந்த பூரிதனாய் - 
இவனால் தான் என்னுடைய கமனம் நழுவிற்று - என்று நிச்சயித்து –

பகவானுடைய கருத்தின் படியே அந்தக் கிரீடத்தை கண்ணனுடைய சிரஸ்ஸிலே சமர்ப்பித்தான்-

அநேக யோஜனை விஸ்தாரமான அந்த முடியானது பகவானுடைய சங்கல்பத்தாலே கண்ணனுடைய சிரஸ்ஸுக்குத் தகுதியாக மாறி விட்டது –

பிறகு கண்ணனை ப்ரதக்ஷிண நமஸ்காரங்களைப் பண்ணி வணங்கி கருடன் பாற் கடல் சேர்ந்தான் – அங்கு எல்லாருக்கும் இந்த விஷயத்தைச் சொல்ல அவர்களும் ஆனந்தித்தார்கள் –

கண்ணன் செல்லப்பிள்ளைக்கு வைரமுடியை சமர்ப்பித்தது –

கண்ணன் தனது க்ருஹ அர்ச்சையான ராமப் பிரானுக்கு - அந்த முடியை சமர்ப்பித்தான் –

அது அவனுடைய சங்கல்பத்தாலே செல்வப்பிள்ளைக்குத் தகுதியாக போக்யமாய்த் தலைக்கட்டிற்று –

இவ்விதமாக வைரமுடியைச் சாற்றி ராமப் பிரியனை நித்ய ஆராதனம் செய்து கொண்டு இருந்தான் –

இப்படி இருக்கும் பொழுது ஒரு சமயம் நம்பி மூத்தபிரான் தீர்க்க யாத்திரைக்காக எழுந்து அருளினை காலத்தில் இந்த நாராயணாத்ரிக்கு வந்து கல்யாணி தீர்த்தத்தில் அவகாஹித்து ஆனந்த மய திவ்ய விமான மத்யஸ்தரான திரு நாராயணப் பெருமாளைச் சேவிக்க -

தம்முடைய க்ருஹ அர்ச்சையான ராமப் பிரியனைப் போலவே இருக்கிறார் -என்று
அறிந்து ஸ்ரீ மத் துவாரகைக்கு எழுந்து அருளி தென் திசையில் தென் பத்ரி -என்னும் நாராயணாத்ரியில் நம்முடைய ராமப் பிரியனைப் போலவே இருக்கும்
ஒரு பெருமாள் இருக்கிறார் -என்று சொன்னார் –


கண்ணன் இதை ஒப்புக் கொள்ளாமல் -நம்பி மூத்தபிரான் யாதவர்கள் எல்லாரையும் அழைத்து
தானே ஸ்ரீ ராமப் பிரியனையும் எழுந்து அருளப் பண்ணிக் கொண்டு நாராயணாத்ரிக்கு வந்து திரு நாராயணன் முன்பே எழுந்து அருளப் பண்ணி எல்லாரும் சேவித்து இருவரும் ஒரே ரூபத்தை உடையவர்கள் என்று சம்மதித்து ஆனந்தித்தார்கள் –


நாராயணாத்ரிக்கு யாதவாத்ரி என்ற பெயர் வந்தது –
இப்படி யாதவர்கள் எல்லாரும் ஸ்ரீ ராமப் பிரியனை அங்கேயே எழுந்து அருளப் பண்ணி அந்தந்த உத்சவ காலங்களில் தாங்களும் அங்கேயே சென்று உத்ஸவாதிகளை நடத்தி வந்த படியால் இந்த மலைக்கு யாதவாத்ரி என்று அது முதல் திரு நாமம் ஆயிற்று –
இப்படி திரு நாராயணன் -செல்வப்பிள்ளை இருவரும் ஒரே இடத்தில் மூல பேரராயும் உத்சவ பேரராயும் நம்முடைய பாக்ய அதிசயத்தாலே சேர்ந்தார்கள் –

( நன்றி    -  thiruvonum blog    )





























நேரில் சென்றாலும் இத்தகைய தரிசனம் கிடைப்பது எளிது அல்ல, ...இத்தகைய தெளிவான படங்களை முக நூலில்  பகிர்ந்த பக்தர்கள் அனைவருக்கும்  மிகவும் நன்றி.



நான்முகன் திருவந்தாதி 


நான்முகனை  நாராயணன் படைத்தான் * நான்முகனும் 
தான் முகமாய்ச் சங்கரனைத் தான் படைத்தான் * - யான்முகமாய் 
அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளை * 
சிந்தாமல் கொள்மின் நீர் தேர்ந்து. (2) 

1 2382

தேருங்கால், தேவன் ஒருவனே என்று உரைப்பர் *
ஆரும் அறியார் அவன் பெருமை * ஓரும் 
பொருள் முடிவும் இத்தனையே, எத் தவம் செய்தார்க்கும் 
அருள் முடிவது ஆழியான்பால். 

2 2383

பாலில் கிடந்ததுவும், பண்டு அரங்கம் மேயதுவும் * 
ஆலில் துயின்றதுவும் ஆர் அறிவார்? * - ஞாலத்து  
ஒரு பொருளை, வானவர் தம் மெய்ப் பொருளை * அப்பில் 
அரு பொருளை யான் அறிந்த ஆறு?

3 2384



ஸ்ரீ யதுகிரி தாயார் சமேத ஸ்ரீ திருநாராயண பெருமாள் திருவடிகளே சரணம் ... !!!

அன்புடன்
அனுபிரேம்
        

6 comments:

  1. அருமையான பதிவு.

    இரண்டடி தூரத்தில் வைரமுடியுடன் பெருமாளைச் சேவிக்கும் பாக்கியம் கிடைத்தது. இந்தத் தடவை ஐம்பதாயிரத்துக்கும் மேல் பக்தர்கள் வந்திருந்தனர். பொதுவா இரண்டு லட்சத்துக்கு மேல் வருவார்கள். கர்நாடக முதலமைச்சர் இந்தத் தடவை வந்ததால், கூட்டம் குறைவு என்று தோன்றியது அப்படியும் நாலு தெருக்களையும் (200 மீட்டர் ஒரு தெரு) கடக்க 6 மணி நேரத்துக்கும் மேல் ஆகிறது. நிற்க இடமில்லாத கூட்டம். எல்லா பக்தர்களும் நிறைவாக சேவிக்கும்படி ஒவ்வொரு பக்கத்திலும் திரும்பி 3 நிமிடங்களுக்கு மேல் தரிசனம் (ஒவ்வொரு 5 மீட்டருக்கும்). அதிகாலை 5 1/4 மணிக்கு ராஜமுடி சேவை. இது மொத்தமே 20 மீட்டர் தூரத்தை மட்டுமே கடந்து கோவிலுக்குள் சென்றுவிடும்.

    மிக மிக நிறைவான தரிசனம் அமைந்தது, பெருமாள் பிரசாதங்களும்தான் (ருசி சொல்லி மாளாது)

    ஒரு நாயகமாய்* ஓட உலகு உடன் ஆண்டவர்,*
    கரு நாய் கவர்ந்த காலர்* சிதைகிய பானையர்,*
    பெரு நாடு காண* இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்,*
    திருநாரணன் தாள்* காலம்பெறச் சிந்தித்து உய்ம்மினோ.

    இந்தப் பாடலைப் பகிர்ந்திருந்தால் இன்னமுமே பதிவுக்குப் பெருமை சேர்த்திருக்கும்

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கு மிக நிறைவான தரிசனம் கிடைத்தது எண்ணி மிக மிக மகிழ்ச்சி சார் ...

      நாங்கள் ஒரு முறை மட்டுமே சென்று நேரில் சென்று தரிசனம் பெற்றோம். அப்பொழுதும் மிக அதிக கூட்டம் ....


      இனிவரும் வருடங்களில் இப்படி உற்சவங்களுக்கு செல்லும் வாய்ப்புக்கள் குறைவே ..
      பையன் இந்த வருடம் 10 ம் வகுப்பில் எனவே சாதா நாட்களில் கிடைக்கும் நேரங்களில் தான் திருக்கோவில்களுக்கு செல்ல முடியும் ...


      ஒரு நாயகமாய் பாடலை பதிந்து இருக்கலாம் ...ஆனால் இனி வரும் தொடர் பதிவுகளில் நான்முகன் திருவந்தாதி பகிரும் எண்ணம் வந்ததால் அதனை பகிர்த்தேன் ..

      தங்களின் இனிய கருத்திற்கு நன்றி சார் ..

      Delete
  2. அனு படங்கள் ரொம்ப அருமை. அதனோடுகூடிய விவரங்களும் பாசுரங்களும். உங்கள் வழி தரிசனம் மிக்க நன்றி.

    வைரமுடி சேவை என்றதுமே நெல்லைதான் நினைவுக்கு வந்தார் அவர் நேரில் சென்று தரிசிக்கச் சென்றது தெரியும் என்பதால்!!!

    கீதா

    ReplyDelete
  3. வைரமுடிச் சேவை உங்கள் பதிவு வழி கண்டு ரசித்தேன். நன்றி.

    ReplyDelete