13 March 2022

ஸ்ரீ குலசேகராழ்வார் ...

 இன்று  குலசேகராழ்வார்   அவதார திருநட்சத்திரம் ..... மாசி -புனர்பூசம்







குலசேகராழ்வார்  வாழி திருநாமம்!

அஞ்சனமாமலைப் பிறவி ஆதரித்தோன் வாழியே
அணியரங்கர் மணத்தூணை அடைந்து உய்ந்தோன் வாழியே
வஞ்சிநகரம்   தன்னில் வாழ வந்தோன் வாழியே
மாசிதனில்  புனர்பூசம் வந்து உதித்தான் வாழியே
அஞ்சலெனக்   குடப்பாம்பில் அங்கையிட்டான் வாழியே
அநவரதம் ராம கதை அருளுமவன் வாழியே
செஞ்சொல்மொழி நூற்றஞ்சும் செப்பினான் வாழியே
சேரலர்கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே






குலசேகராழ்வார்

பிறந்த காலம் - 9ம் நூற்றாண்டு

பிறந்த இடம்   - திருவஞ்சிக்களம்

பிறந்த மாதம்  - மாசி

திருநட்சத்திரம் - புனர்பூசம்

வேறு பெயர்கள் - கொல்லி காவலன்,கூடல் நாயகன், கொயிகொனே , வில்லவர் கோனே , செய்ரளர் கோனே

சிறப்பு - ஸ்ரீகௌஸ்துபாம்ஸராய் - பெருமாள் அணியும் இரத்தின மாலையின் அம்சம்

பிரபந்தங்கள்- முகுந்தமாலா, பெருமாள் திருமொழி

பரமபதம் அடைந்த இடம் -  திருநெல்வேலி அருகிலுள்ள மன்னார்கோயில்








பெருமாள் திருமொழி
நான்காம் திருமொழி - ஊன் ஏறு  செல்வத்து 


 திருவேங்கடத்தில் பிறத்தட விரும்புதல் 


ஊன்  ஏறு செல்வத்து உடற்பிறவி யான் வேண்டேன் * 
ஆனேறு ஏழ் வென்றான் அடிமைத் திறம் அல்லால் * 
கூன் ஏறு சங்கம் இடத்தான் தன் வேங்கடத்துக்  *
கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே. (2) 

1 677


ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற் சூழ *
வானாளும் செல்வமும் மண் அரசும் யான் வேண்டேன் * 
தேன் ஆர் பூஞ்சோலைத் திருவேங்கடச் சுனையில் *
மீனாய்ப் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே.

2 678


பின்னிட்ட சடையானும் பிரமனும் இந்திரனும் *
துன்னிட்டுப் புகல் அரிய வைகுந்த நீள் வாசல் *
மின்வட்டச் சுடர் ஆழி வேங்கடக்கோன் தான் உமிழும் * 
பொன் வட்டில் பிடித்து உடனே புகழ் பெறுவேன் ஆவேனே. 

3 679


ஒண் பவள வேலை உலவு தண் பாற்கடலுள் *
கண் துயிலும் மாயோன் கழலிணைகள் காண்பதற்கு * 
பண்பகரும் வண்டினங்கள் பண் பாடும் வேங்கடத்து * 
செண்பகமாய் நிற்கும் திரு உடையேன் ஆவேனே.

4 680



கம்பமத யானை கழுத்தகத்தின் மேல் இருந்து *
இன்பு அமரும் செல்வமும்  இவ் அரசும் யான் வேண்டேன் *
எம்பெருமான் ஈசன் எழில் வேங்கட மலை மேல் *
தம்பகமாய் நிற்கும் தவம் உடையேன் ஆவேனே.

5 681


மின் அனைய நுண் இடையார் உருப்பசியும் மேனகையும் *
அன்னவர் தம் பாடலொடும் ஆடல் அவை ஆதரியேன் * 
தென்ன என வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்துள் * 
அன்னனைய பொற்குவடு ஆம் அருந்தவத்தேன் ஆவனே.

6 682





வான் ஆளும் மாமதி போல் வெண் குடைக்கீழ் * மன்னவர் தம் 
கோன் ஆகி வீற்றிருந்து கொண்டாடும் செல்வு அறியேன் *
தேன்  ஆர் பூஞ்சோலைத் திரு வேங்கட மலை மேல் * 
கானாறாய்ப் பாயும் கருத்து உடையேன் ஆவேனே. 

7 683


பிறை ஏறு சடையானும் பிரமனும்  இந்திரனும் *
முறையாய பெரு வேள்விக் குறை முடிப்பான் மறை ஆனான் * 
வெறியார் தண் சோலைத் திருவேங்கட மலை மேல் * 
நெறியாய்க் கிடக்கும் நிலை உடையேன் ஆவேனே.

8 684


செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே!  * 
நெடியானே! வேங்கடவா! நின் கோயிலின் வாசல் * 
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும் 
படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே. (2)


9 685


உம்பர் உலகு ஆண்டு ஒரு குடைக் கீழ் * உருப்பசிதன் 
அம்பொற் கலை அல்குல் பெற்றாலும் ஆதரியேன் * 
செம் பவள வாயான் திருவேங்கடம் என்னும் * 
எம்பெருமான் பொன் மலைமேல் ஏதேனும் ஆவேனே.

10 686


மன்னிய தண் சாரல் வட வேங்கடத்தான் தன் * 
பொன் இயலும் சேவடிகள் காண்பான் புரிந்து இறைஞ்சி * 
கொல் நவிலும் கூர்வேல் குலசேகரன் சொன்ன * 
பன்னிய நூல் தமிழ் வல்லார் பாங்காய பத்தர்களே.

11 687


 








குலசேகராழ்வார்  திருவடிகளே சரணம்....




அன்புடன்
அனுபிரேம்...

2 comments:

  1. குலசேகர ஆழ்வார் திருவடிகளே சரணம்.

    கீதா

    ReplyDelete
  2. தகவல்களும் படங்களும் நன்று. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete