இன்று (11/04/2025) பங்குனி உத்திரம்-நம்பெருமாள், பெரிய பிராட்டியார் சேர்த்தி உற்சவம்: பிரணய கலகம் !
![]() |
பிரணய கலகத்தில் ஆரம்பிக்கும் சேர்த்தி உற்சவம் !!
இன்று நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து அதிகாலை 6 மணிக்குத் தங்கப் பல்லக்கில் புறப்பட்டு,சித்திரை/உத்திர வீதிகளில் வலம் வந்து, 8.30க்கு தாயார் சந்திதி எழுந்தருள்வார்.
அங்கு பிரணய கலகம் (மட்டையடி உற்சவம்) என்னும் தெய்வீக ஊடல் வைபவம் நடைபெறும்.
முன்னே அரையர் தாளம் இசைக்க, சத்தம் இல்லாமல் மெதுவாக 8 வீதிகளிலும் பெருமாள் எழுந்தருளி வருவார்.
கருட மண்டபத்திலிருந்து சக்கரத்தாழ்வார் சந்நிதி வழியாகச் செல்லும் பெருமாள் அங்கிருந்து அதீத முகப் பொலிவுடன்,பெரிய மேள முழக்கத்துடன் மிக வேகமாகச் செல்வார்.
தாயாரைத் காணப்போகிறோம் என்னும் பாரிப்பு/பூரிப்பு!
தாயார் சந்நிதிக்குள் மின்னல் வேகத்தில் நுழைய முற்படுகிறார்.
பெருமாள் வருவது கண்டு தாயார் சந்நிதி கதவுகள் மூடப்படுகின்றன.
உறையூர் கமலவலலி நாச்சியார் சந்நிதிக்குச் சென்று வந்த பெருமாளை, தாயார் அனுமதிக்க மறுப்பதால் கதவுகள் மூடப்படுகின்றன.
கதவுகள் மூடப்படுவதைக் கண்ட பெருமாள் மெல்ல பின்னால் செல்கிறார்.
தாயார் சந்நிதி கதவுகள் மீண்டும் திறக்க, இரண்டாவது முறையாக பெருமாள் வேகமாக ஓடிச் செல்ல முற்படுகிறார். இந்த முறையும் கதவுகள் மூடப்பட்டதோடு, பூப்பந்துகளும், பழங்களும் (வாழை,பலாச்சுளை) தயிரும் பெருமாள் பல்லக்கை நோககி வீசப்படுகின்றன. இதுவே மட்டை அடி என்று அழைக்கப்படுகிறது.
மீண்டும் பெருமாள் பின்னே மெதுவாக சென்று விடுகிறார்--மட்டையடி வாங்கிய சிலரோடு.
மூன்றாவது முறையாக கதவுகள் திறக்கப்பட்டு பெருமாள் முன்னே ஓட, கதவுகள் மீண்டும் மூடப்படுகிறது.
பெருமாள் மெதுவாக பின்னே சென்று நின்று விடுகிறார்!!
தாயார் தன் மீது கோபத்தில் இருப்பதால், இனி பேச்சுவார்த்தை நடத்துவது உசிதம் என்று பெருமாள் நினைக்க! மணியக்காரர் சமயம் சொல்லி அரையருடன், நம்மாழ்வார் சமாதானம் செய்ய வருகிறார்.
![]() |
![]() |
![]() |
![]() |
பிரணய கலஹம் –
பெருமாளுக்கும் தாயாருக்கும் நடக்கும் வாக்குவாதம் பெருமாள் சார்பாக அரையரும், தாயார் சார்பாக பண்டாரியும் விண்ணப்பம் செய்வார்கள்.
இந்த விண்ணப்பங்கள் தம்பிரான் படி வியாக்கியானத்தைக் கொண்டு அரையர்கள் சேவிப்பார்கள்.
இதில் அரையர்களும், பண்டாரிகளும், பெருமாளும், தாயாரும் பேசுவது போல் சொல்லும் வசனங்கள் உன்னதமானவை.
இந்த விண்ணப்பங்களின் சுருக்கம்.
பெருமாள் அருளிச்செய்த பிரகாரம்-1:
"நாம் பெரிய மனோரதத்தோடே தங்களிடத்தில் வந்தால் நம்மை உள்ளே வரவேற்று, சிம்மாசனத்தில் அமர்த்தி உபசாரங்கள் செய்வீர். இன்றைக்கு நாம் எழுந்தருளின இடத்தில் திருப்பல்லக்கைத் தொட்டுத் தள்ளி, திருக்காப்பு சேர்த்துக் கொண்டு, திருமுக மண்டலத்தைத் திருப்பிக் கொண்டு, திருச்சேடிமார்கள் கைகளாலே பந்துக்களாலும், பழங்களாலும் விட்டெறிவித்து, இப்படி ஒருநாளும் பண்ணாத அவமானங்களை எல்லம் இப்படி பண்ணவந்த கார்யம் எது…..?”
நாச்சியார் அருளிச்செய்த பிரகாரம்-1:
"தாம் எப்போதும்போல் எழுந்தருளி இருப்பது மெய்யானால்:
# திருக்கண்கள் எல்லாம் சிவந்து இருப்பானேன்?
#திரு அதரம் வெளுத்து இருப்பானேன்?
#திருக்குழல் கற்றைகள் எல்லாம் கலைந்திருப்பானேன்?
#திருக்கழுத்துகளில்லாம் நகஷதங்களாய் இருப்பானேன்?
#கஸ்தூரி திருமண்காப்பு கலைந்து இருப்பானேன்?
#திருமேனியில் எல்லாம் குங்குமப் பொடிகளாய் இருப்பானேன்?
# திருவடிகள் எல்லாம் செம்பஞ்சுக் குழம்பாய் இருப்பானேன் ?
# திருப்பரிவட்டங்கள் எல்லாம் மஞ்சள் வர்ண்மாய் இருப்பானேன்?
தேவரீர் நேற்று எழுந்தருளிய இடத்திற்கே செல்லலாம் .
பெருமாள் அருளிச்செய்த பிரகாரம் -2
#நாம் “செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார்” ஆதலால் இரவு முழுவதும் தூக்கமின்றி ஜெகத்ரக்ஷகம் செய்ததால் கண்கள் சிவந்து இருக்கிறது!
#அசுரர்களை அழிக்க பாஞ்சஜன்யதை ஒலித்ததால், அதன ஸ்பரிசம் பட்டு,அதரம் வெளுத்து இருக்கு!
# திருக்குழல் கன்றுகள் காற்றடித்து கலைந்து பேச்சுது!
# அதிபிரயாசமான காடுகளில் போகும்போது பூ முட்கள் கிழித்தன
# சூரியனின் கிரணங்கள் காரணமாக கஸ்தூரி திலகம் கலைந்து இருக்கு!
# தேவதைகள் புஷ்பங்கள் தூவியதால் குங்குமம் திருமேனியில் கொட்டி இருக்கு!
# குதிரை நம்பிரான் மேலேறி,அங்கவடி மேல், திருவடிகளே அழுத்திக் கொணடு, போன படியால்,திருவடிகள் சிவந்து போச்சுது !
# சந்த்யாராகம் போலேயிருக்கிற திவ்ய பீதாம்பரம் சாத்தியிருப்பதால்,உங்கள் கண்ணுக்கு மஞ்சள் வர்ணமாகத் தோன்றுகிறது.!
#நாம் வேட்டையாடி வரும்போது திருமங்கையாழ்வார் வந்து நம் பொருட்களைக் களவாடினார். அவரைத் திருத்தி, பின்னர் ஆபரணங்களை கருவூலத்தில் சேர்த்தோம். அப்போது பார்த்தால் கணையாழி தொலைந்து இருக்கு! ஆதலால் கணையாழியைத் தேடிக் கொண்டு, திருவீதிகளில் வலம் வந்து, கண்டெடுத்துக் கொண்டு வந்ததால் தாமதமாகி விட்டது.
அச்சமயம் தேவதைகள் சமர்ப்பித்த பாரிஜாத புஷ்பங்களை நாம் தர, ஏற்றுக் கொண்டு நம்மை உள்ளே அழைத்துக் கொள்ளவும்.
நாச்சியார் அருளிச்செய்த பிரகாரம்-2
கணையாழி மோதிரம் காணாமல் போனது மெய்யல்ல. தாங்கள் அதிகாலையில் கிளம்பி உறையூர் சென்று அங்கு நாச்சியாருடன் சேர்த்தி கண்டருளிய தடயங்கள் இவை. மென்மையான குணம் கொண்ட ஸ்தீரீகளான எங்களிடம் இப்படியான வஞ்ச மொழிகள் எல்லாம் சொல்ல வந்தீரே! இந்தப் பொய்களை ஏற்க முடியாததால், நேற்று எழுந்தருளிய இடத்திற்கே இன்றும் செல்லலாம்.
பெருமாள் அருளிச் செய்த பிரகாரம் -3
நாம் ஆனால் உறையூரைக் கண்ணாலே கண்டதுமில்லை!
காதாலும் கேட்டதுமில்லை!
யாரோ சிலர் சொன்னதை நம்பி நம்மைப் பண்ணாத அவமானங்கள் எல்லாம் பண்ணலாமா ? ஆகவே நாம் கொடுக்கும் புஷ்பத்தை ஏற்று உள்ளே விடவும்.
(ஏலாப் பொய்கள் உரைப்பானை,இங்கே போதக் கண்டீரே!)
நாச்சியார் அருளிச்செய்த பிரகாரம்-3:
முநதா நாள்(ஏழாம் திருநாள்) தேவரீர் இங்கு எழுந்தருளிய போது, நாங்கள் செய்த உபசாரங்களை சரியாக ஏற்றுக் கொள்ளாமல், தாங்கள் மிகவும் அசதியாக இருந்தீர். நாங்கள் பதறிப்போய் தங்கள் திருமேனிக்கு என்ன ஆயிற்று என்று தங்கள் அந்தரங்க பரிஜனங்களிடம் விசாரித்ததில் தாங்கள் உறையூர் சென்று வந்த விஷயம் அறிந்தோம்! ஆகையாலே தாங்கள் எதுவும் சொல்ல வேண்டாம்.
பெருமாள் அருளிச்செய்த பிரகாரம் -4:
லோகத்தில் சந்தேகங்கள் தீர சில பிரமாணங்கள்(சத்தியம்) செய்வது போல,நாம் சில பிரமாணங்கள் செய்து தருகிறோம்.
* நாம் தேவாதி தேவனானபடியால் தேவதைகளைத் தாண்டித் தருகிறோம் !
* சமுத்திரத்தில் மூழ்குகிறோம் !
* அக்னிப்பிரவேசம் பண்ணுகிறோம் !
* பாம்பு குடத்திலே கை இடுகிறோம் !
* மழுவேந்துகிறோம் !
* நெய்யிலே முழுகுகிறோம் !
இப்படிப்பட்ட பிரமாணங்களை ஏற்று உள்ளே அழைத்துக் கொள்ளவும்.
நாச்சியார் அருளிச்செய்த பிரகாரம்-4:
*அநதத் தேவதைகள் தேவரீருடைய திருவடிகளை எப்போ காணப் போகிறோம் என்று அநேக காலங்களாக பிரார்த்தித்துக் கொண்டிருப்பவர்கள் அவர்களைத் தாண்டுகிறேன் என்றால் வேண்டாம் என்பார்களா ?
* பிரளய காலத்தில் சகலத்தையும் வயிற்றில் வைத்து ஒரு ஆலிலையில் துயின்ற உமக்கு சமுத்திரத்திலே முழுகுவது அருமையா?
*பிரம்மாவுக்காக உத்திரவேதியிலே ஆவிர்பவித்த உமக்கு அக்னி சுடுமோ?
*திருவனந்தாழ்வான் மீது திருக்கண் வளர்ந்திருக்கிற உமக்கு பாம்பு குடத்தில் கைவிட்டால், பாம்பு கடிக்குமா?
* கோடி சூர்ய பிரகாசமான திருவாழி ஆழ்வானை சதா திருக்கையிலே தரித்துக் கொண்டிருக்கும் தமக்கு இரும்பை தழுவி ஏந்துவது அருமையா?
* கிருஷ்ணா வதாரத்திலே பஞ்ச லட்சம் குடியுலுள்ள வெண்ணை உண்ட தமக்கு நெய்க்குடத்தில் கையிடுவது அருமையா?
இப்படிபட்ட பரிகாச பிரமாணங்களை ஏற்கும் இடத்திற்கு செல்லவும்.
பெருமாள் அருளிச்செய்த பிரகாரம் -5:
நாம் சொல்லும் பிரமாணங்களை பரிகாசம் செய்து, சற்றும் இரக்கம் வராமல் கோபத்தில் – “கண்கள் சிவந்து இருக்கு!” “திருமுகம் கருத்து இருக்கு!” இப்படி இருந்தால் நமக்கு வேறு என்ன கதி இருக்கிறது?
அழகிய மணவாளப் பெருமாள் ஸ்ரீரங்க நாச்சியார் சந்நிதி வாசலில் தள்ளுப்பட்டு கொண்டிருக்கிறார் என்ற அவமானம் உங்களுக்கே ஒழிய நமக்குத் தேவையில்லை. எனவே நாம் கொடுத்த புஷ்பத்தைச் சூட்டிக் கொண்டு, நம்மையும் உள்ளே அழைத்துக் கொள்ளவும்.
நாச்சியார் அருளிச்செய்த பிரகாரம்-5:
தாம் ஆண்டுக்கு ஒருமுறை இப்படித் தாறுமாறாகப் பண்ணிவிட்டு, வழிமாறி சென்று இங்கு மீண்டும் வந்து பிரமாணங்கள் செய்வதை பொறுக்க மாட்டோம்.
நம்முடைய அய்யா தமிழ்மாறன் நம்மாழ்வார் வந்து மங்களமாக சொன்னதால் பொறுத்தோம்! பொறுத்தோம்!! பொறுத்தோம்!!!
பெருமாளை உடனே உள்ளே எழுந்தருளப் பண்ணச் சொல்லி நாச்சியார் அருளிச்செய்த பிரகாரம் !!
முதல் ஏகாந்தம்:
பெருமாள் பல்லக்கில் தாயாரை பார்த்தபடி நேராக எழுந்தருள்வார். ஏகாந்தத்தில் நாயனம் சற்று நேரம் வாசிக்கப்பட்டு பின்னர் முதல் ஏகாந்த தளிகைகள் சமர்ப்பிக்கப்படும்.பெருமாளும் தாயாரும் ஏக சிம்மாசனத்தில் எழுந்தருளி, திவ்ய சேர்த்தியில் நமக்கு சேவை சாதிப்பார்கள்.
"அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பன்" என்று பாடிய நம்மாழ்வாரின் நந்நயம்:
நம்மாழ்வார் எழுந்தருளி தாயாரிடம் பிரார்த்தித்து,அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி தம் பக்தர்களின் குறை தீர்த்து நலம் காக்க பெருமாளும் சேர்ந்து எழுந்தருளி சேவை சாதிக்க வேண்டும் என்று, சமாதானம் செய்து வைக்க ஊடல் முடிந்து கூடல் எனப்பெறும் தெய்வீக சேர்த்தியானது, இந்த மண்ணுலகு உய்ய, மண்ணுலகிலுள்ள மனிசர்கள் உய்ய ஆரம்பமாகின்றது..!
ஸ்ரீபாஞ்சராத்ர ஆகமமானது பிரணயகலகம் எனப்படும் உற்சவத்தினைக் கொண்டாடுமாறு சொல்கின்றது. நம்பெருமாள், பங்குனி ஆறாம் திருநாளன்று உறையூர் எழுந்தருளியது ஒரு நல்ல காரணமாக அமைய, உற்சவம் அழகுபட பிரணய கலகத்துடன் அமைக்கப் பெற்றது.
ஜீவாத்மா--பரமாத்மா அநுபவம்:
இந்த பிரணயகலகமானது, ஜீவாத்மா – பரமாத்மா இடையில் நடக்கும் போராட்டத்தின் ஒரு சூட்சுமமான வெளிப்பாடு. தாயார் ஜீவாத்மாவிற்காக அதீத கருணை காட்டும் அற்புதமான அன்பு கொண்டவள்.
குற்றமே செய்தொழியும் சேதனர்களின் குற்றம் ஒதுக்கி, சிறு நல்குணம் இருந்தாலும், அதனை பெரிதுபடுத்தி, மிக்கத் தாயன்போடு, எம்பெருமானிடத்தில் தாம் உஜ்ஜீவிக்க சிபார்சு செய்பவள்.
பகைவனுக்கும் அருளும் பண்புள்ளவள்.
இந்த பிரணய கலகம்/சேர்த்தி உற்சவம் மூலம் திவ்ய தம்பதிகள் நமக்குச் சில விஷயங்களை சூட்சுமமாகத் தெளிவுறுத்துகின்றனர்.
இது இன்றளவும் நமக்கு ஏற்புடைதயதாகயுள்ளது. இதனை நாமறிந்து வாழ்வோமானால் என்றும் நன்மையுண்டு.
அவையாவன:
1) என்னதான் கருத்து வேறுபாடுகள் கணவன், மனைவிக்குள் ஏற்பட்டாலும், யாரேனும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து, பொறுமையுடன் மீண்டும் இணைதல் வேண்டும். பிரிவு ஒன்றே தீர்வு எனக் கருதவேண்டாம். முடிந்தவரை பொறுமை காட்ட வேண்டும்.
2) சான்றோர்கள் அறிவுரையை ஏற்க வேண்டும். இதனை நம்மாழ்வாரின் அறிவுரையினைத் தாயார் ஏற்று, நம்பெருமாளுடன் சேர்த்தி கண்டருளுவதின் மூலம் நமக்கெல்லாம் உணர்த்துகின்றார்.
3) அனைவரிடத்திலும் அன்பாக இருக்க வேண்டும். எப்போதும் குற்றமேக் காணக்கூடாது. கோபித்தல் கூடாது.
(--- அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன் ---நன்றி சுவாமி -- )
எம் பரத்தர்* அல்லாரொடும் கூடலன்*
உம்பர் வாழ்வை* ஒன்றாகக் கருதலன்*
தம்பிரான் அமரர்க்கு* அரங்க நகர்*
எம்பிரானுக்கு* எழுமையும் பித்தனே 6
674
எத் திறத்திலும்* யாரொடும் கூடும்* அச்
சித்தந்தன்னைத்* தவிர்த்தனன் செங்கண் மால்*
அத்தனே* அரங்கா என்று அழைக்கின்றேன்*
பித்தனாய் ஒழிந்தேன்* எம்பிரானுக்கே 7
அன்புடன்
அனுபிரேம்💓💓💓
No comments:
Post a Comment