14 February 2019

அறிவர் கோயிலும் ஓவியமும்

வாழ்க வளமுடன் ..

முந்தைய பதிவில் சமணர் குடைவரைக் கோயில் வெளிப்படங்களை கண்டோம் .



இன்று  அந்த கோவிலில் நாங்கள் கண்டு ரசித்தவை ,
அங்கிருந்த அலுவலர் அவற்றை அருமையாக விளக்கினார்.

நம் எண்ணத்தை போல மிக பெரிதாக எல்லாம் அந்த இடம் இல்லை, சிறிய அறை தான் ஆனால் கீர்த்தி பெரிது , அத்தகைய சிறப்புகள் கொண்டது.

அங்கு உள்ளே படம் எடுக்க அனுமதியில்லை . அதனால் இணையத்தில் கிடைத்த படங்களை வைத்து அந்த தகவல்களை இங்கு பகிர்கிறேன்.



சமணர் காலத்து ஓவியங்களான இவை கி.பி 7 மற்றும் 8 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை. குன்றுகளால் சூழப்பட்ட சித்தன்னவாசல் ஓவியங்கள், சமணர்களால் மூலிகையால் தயாரிக்கப்பட்ட வர்ணங்களை கொண்டு வரையப்பட்டவை. இந்தியாவின் வட பகுதியில் காணப்படும் அஜந்தா ஓவியங்களை போன்று தனிச்சிறப்பு மிக்க இந்த ஓவியங்கள் சுமார் 1000 - 1200 ஆண்டு பழமையானவை.

முன்மண்டபத்தின் விதானத்தை அண்ணாந்து பார்த்தால் அங்கு சித்திரிக்கப்பட்ட தாமரை தடாகம், 
அனைவரின் சிந்தையையும் கவரும். 
சித்தன்னவாசல் ஓவிய வேலைப்பாட்டின் உயிர்நாடியே இந்தத் தாமரைத் தடாகம்தான்.  

பசுமையான இலைகளுடன், தாமரையும், அல்லியும் இந்தத் தடாகத்தில் பூத்துக்குலுங்குகின்றன. 
பலவிதமான மீன்கள் அங்கும் இங்கும் ஓடி விளையாடுகின்றன. யானைகள் நீரைக் கலக்கி களித்திருக்கின்றன.





அன்னம், வாத்து போன்ற பறவைகள் தங்கள் குஞ்சுகளுடன் குலாவுகின்றன. சுற்றுச்சூழலை மறந்து அசைபோட்டு இருமாந்திருக்கும் எருமை மாடுகளின் தோற்றமுடைய ஓவியங்கள் இயல்பாக உள்ளன.



புராதன ஓவியங்களில் காவி,நீலம் இரண்டும் மட்டுமே ரசாயனநிறங்கள், பாறைகளிலிருந்து எடுக்கப்படுபவை.
மற்றவை  பச்சிலை நிறங்கள். 
ஆகவே அவை காலப்போக்கில் அழிந்து போகின்றன. 

முதலைகள் மீன்கள் ஓவியங்களின் ஒற்றைப்பரிமாணத்தன்மை, உடைகள் சுற்றப்பட்டிருக்கும் விதம்,  போன்றவை அஜந்தாஓவியங்கள்  போன்றவை .

இரு சமணர்கள் கைகளால் தாமரை மலர்களைப் பிடித்துக்கொண்டு குளத்தின் அழகை ரசிப்பது போன்று ஓர் ஓவியமும் நம்மை ஈர்க்கிறது. 

நடுமண்டபத்தை அடுத்து இருப்பது கோயில். 
வலப்பக்கமும் இடப்பக்கமும் சமண தீர்த்தங்கர் சிலையும், 
சமணத் தலைவர் சிலையும் உள்ளன.

கோவிலின் உள்ளே சென்று பார்க்கும் போது, குளுமையான அமைதியான  இடம் அது .

மிக பெரிய மலையின் கீழ் இந்த அறை உள்ளத்தால் அதன் குளுமை விவரிக்க இயலா அற்புதம் .
மேலும் அதில் நம் சுவாசத்தின் நாதம் ஆன ஓம் என்னும்  ஒலி,
ஒருவர் உள்ளே நின்று சுவாசிக்கும் போது 
வெளி மண்டபத்தில்  கேட்கிறது .







குகைக் கோயிலின் தரை நீங்கலாக, மற்ற பகுதிகளில் ஓவியங்கள் தீட்டப்பட்டதற்கான அடையாளங்கள் உள்ளன. இங்குள்ள ஓவியங்கள் Fresco-Secco முறையில் தீட்டப்பட்டுள்ளன. 

கருங்கல் பரப்பை பொலிந்து, சமப்படுத்தி, சுண்ணாம்புச் சாந்து பூசி அதன் மீது வெண்சுண்ணாம்பு பூச்சிட்டு 
வழுவழுப்பாகத் தேய்த்து அப்பரப்பில் ரேகைகளும், வண்ணங்களும் தீட்டப்பட்டுள்ளன. 

உலக நாடுகள் பலவற்றிலும் சமீபகாலத்தில்
 உண்டான இந்த முறை வண்ணங்கள், பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் பயன்படுத்தப்பட்டிருப்பது இந்திய ஓவியக் கலையின் சிறப்பை எடுத்துக் கூறும் வகையில் உள்ளது.


 சுவர் ஓவியங்கள் இடைக்காலத்தில் வெளியே தெரியாமல் மறைந்திருந்தன. 

இந்தியா விடுதலை அடைந்த பிறகும் போதிய பராமரிப்பின்றி புகை படிந்து இருந்த இக்குகைகளும், குகை ஓவியங்களும் கி.பி 1990 களில் நிறம் மங்க துவங்கியதால் செயற்கையாக நாம் தற்போது பயன்படுத்தும் வர்ணம் போன்ற பொருளைக் கொண்டு புதுப்பிக்கப்பட்டது.

 நின்று , நிதானமாக ரசிக்க வேண்டிய இடம் .


முந்தைய பதிவுகள்

சித்தன்னவாசல் பற்றி
சமணர் குடைவரைக் கோயில் 

தொடரும்....


அன்புடன்
அனுபிரேம்




4 comments:

  1. என் ஆவல் எப்போ நிறைவேணும்ன்னுதான் தெரில

    ReplyDelete

  2. அருமையான படங்கள் தகவல்கள் சகோதரி அனு/ அனு...

    துளசித்ரன், கீதா

    ReplyDelete
  3. சிறு வயதில் பார்த்தது.
    அழகாய் விவரித்திருக்கிறீர்கள்! படங்களும் அழகு!

    ReplyDelete