05 March 2019

திருக்காமீசுவரர் திருக்கோவில்,வில்லியனூர்


அருள்மிகு ஸ்ரீ கோகிலாம்பிகை உடனுறை   ஸ்ரீ  திருக்காமீசுவரர் திருக்கோவில்,வில்லியனூர் , புதுவை







இங்கு எழுந்தருளியுள்ள சுயம்புநாதரின் பெயர் திருக்காமீசுவரன்.

 இவருக்கு நடுவழிநாதன், வைத்தியநாதன், வில்வநேசன் எனப் பல பெயர்கள் உள்ளன.

காமீஸ்வரர்                   -காமன் பூஜை செய்தமையால்

நரசிங்கநாதர்                - நரசிங்க மூர்த்தி பூஜை செய்ததால்

வைத்தியநாயகர்        -ஆதி சேஷனின் பிணி நீக்கியதால்

நடுவறிவாரர்       - நிருபமுனிவர் மற்றும் இந்திரன் ஆகியோர்க்கு
நடுவாக நின்று துயர் துடைத்ததால்.

வில்வனேசன்    - வில்வம் நிறைய சூழப்பெற்ற இடத்தில்
அமைந்திருப்பதால்.

இத்திருத்தலத்தில் எழந்தருளியிருக்கும் மூலவர் சுயம்பு வடிவிலானவர்.



இத்திருக்கோயிலில் உள்ள கோகிலாம்பிகை அம்மன் குயிலம்மை என்றும் முத்தம்மை என்றும் அழைக்கப்படுகிறாள். அம்மனின் துவாரபாலகியின் வலதுகரத்தில் சங்கு இருப்பது சிறப்பானதாகும்.


திருக்காமீசுவரம், வில்வவனம், வில்வநகர், வில்லேச்சுரம், வில்லியனூர் என இத்தலத்தின் பெயர்களும் பலவாகும். 


இத்திருக்கோயிலில் நாயன்மார்களுக்கு உற்சவமூர்த்தி சிலைகள் உள்ளன.

இங்குள்ள விநாயகர், வலம்புரி விநாயகராகக் காட்சி தருகிறார். 

முருகன் பெயர் முத்துக்குமரன்.





தலபுராணம்

 

சோழவள நாட்டைச் சேர்ந்த கமலாபுரி என்ற நகரை தருமபாலன் என்ற மன்னன் ஆண்டுவந்தான். முற்பிறவியில் அவன் செய்த பாவத்தின் பலனாக அவன் உடல் முழுக்க வெண்குட்ட நோய் தாக்கியது.

 மனம் நொந்து இருந்த மன்னனிடம் புண்ணியகீர்த்தி என்ற அந்தணர் வந்தார். அவரின் ஆலோசனைப்படி தொண்டை வள நாட்டில் வில்வவனம் என்ற பெயரில் உள்ள பிரம்மனால் பூஜிக்கப்பட்ட திருக்காமீஸ்வரர் ஆலயம் சென்று பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கி, இறைவனை வழிபடச் சென்னார்.

அவ்வாறே மன்னன் தருமபாலனும் செய்ய, அவனது நோய் அனைத்தும் நீங்கியது. 

பிரம்மதேவன் உருவாக்கிய தீர்த்தம் இது. 

ஹிருத்தாபநாசினி, பிரம்ம தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது. 


இத்தீர்த்தத்தில் மூழ்கி பலன் பெற்றவர்கள் ஆதிசேஷன், இந்திரன், மன்மதன், கோவிந்தினி எனும் அந்தணர், சகலாங்க சவுந்தரி என்ற கணிகை, சோழன் நரசிங்கமூர்த்தி என்று பட்டியல் நீள்கிறது.

இது போன்று மற்றொரு புராணக் கதையும் உண்டு,
உழவார் கரை பண்ணையார் வளர்த்த பசு ஒன்று  சிவலிங்கம் மறைந்துள்ள புற்றின் மீது பால் சுரப்பதைக் கண்ட மக்கள்,

தங்கள் மன்னனிடம் கூற, மன்னனும் அங்கு வர, அங்கே மறைந்திருந்த சுயம்புலிங்கம் வெளிப்பட்டது.  இம்மன்னன் இறைவனுக்கு மிகப்பெரிய ஆலயம் எழுப்பினான் என தலபுராணம் கூறுகிறது.








தலமகிமை

நைமிசவனத்திலே பல முனிவர்கள் இருந்து வேள்வி முதலியன செய்து கொண்டு வந்தனர். அவர்களுக்குப் பறவைகளும், விலங்கினங்களும் பணியாற்றின.

முனிவர்கள் எல்லாம்,  சூத முனிவரை நோக்கித் தேவரீர் திருவருளால் பல தலங்களின் வரலாறுகளைத் தெரிந்து கொண்டோம் .....முற்காலத்தில் பல தலங்களைக் கூறியதுண்டு ..

தன்பால் இறத்தலால் காசியும்,
 பிறத்தலால் ஆரூரும்,
தன்னை நினைத்தலால் அருணாசலமும்,
தரிசிதலால் சிதம்பரமும், முத்தி தருவன என்று சொன்னீர்.


 அத்தலங்களிலே அங்கணம் செய்தால் பூர்வ ஜன்ம புண்ணியம் உள்ளவர்களுக்கே இயலும்.

மிக்க பாவமுடையார் சென்று இறைஞ்சினாலும் முத்தி நல்கும் தலம் உள்ளதோ? என்று வினவினார். அது கேட்ட சூத முனிவர் அத்தைய தலம் ஒன்று உள்ளது.

சிவபெருமான் முருகக் கடவுளுக்கும், அவர் என் குருவாகிய வியாச முனிவருக்கும், அவர் எனக்கும் அதனைக் கூறினார் .... அம்முனிவர்கள் மீண்டும் விண்ணப்பித்துக் கொள்ள மேலே சொல்லலானார்.

சேதுவுக்கு வடக்கே முப்பத்தாறு யோசனை தூரத்திலும், கீழ்க்கடலுக்கு மேற்கே அரையோசனைத் தூரத்திலும் முத்தாற்றிடையே காமீச்சரமென்றும் திருநாமத்தை உடைய தலமொன்று உண்டு.

தன் பால் வந்து தரிசித்தவர் பாவத்தைப் போக்குவது அது.

இம்மையில் நினைத்தவற்றைப்  பெருகுவித்து, மறுமையில் முத்தியையும் பெறச்செய்வது.

அத்தலத்தில் இருத்தாபநாசினி என்னும்   தீர்த்தம் ஒன்றுண்டு. யாவராயினும் எந்த நாட்டில் இருப்பவராயினுய் காமீசமென்னும் திருநாமத்தை உச்சரிப்பராயின் பல காலம் சிவலோகத்திலிருந்து, அப்பால் முத்தி அடைவர்.




வில்லைப் புராணம் :

இக்கோவிலைப் பற்றி அறிய உதவும் தலபுராணம் வில்லைப்புராணம் ஆகும்.  495 பாடல்களைக் கொண்ட இதனை இயற்றியவர் வீரராகவக்கவி என்ற புலவர். 

இதை வெளி உலகிற்கு கொண்டு வந்த பெருமை தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத அய்யரையே சாரும். 

பிரான்சு நாட்டின் தலைநகரான பாரீசில் பேராசிரியராக இருந்த ஜூலின் வின்சென்ட் என்பவர் பாரீஸ் நகர் தேசிய நூலகத்தில் இருந்த கையேட்டுப் பிரதியை நகல் எடுத்து சாமிநாத அய்யருக்கு அனுப்பி வைக்க, அது 1940-ம் ஆண்டில் பதிப்பிக்கப் பெற்று, வெளியுலகத்திற்குத் தெரிய வந்தது.


கமலாபுரி அரசனான தருமபால சோழன் என்னும் அரசன் இத்திருக்கோயிலின் இறைவனை வழிபட்டு இவ் இறைவனுக்கு ஆலயம் எடுப்பித்து, தேர் இயற்றி , கோயிற்பணியாளரை நியமித்து, ஊர் உண்டாக்கி, சிவப்பணி செய்தான் என்று வில்லைப் புராணத்துத் தருமபாலச் சுருக்கம் கூறுகிறது.





பிரசவ நந்தி

இத்திருத்தலத்தில் வீற்றிருக்கும் அம்மன் நற்பிரசவம் நடந்திட அருள்புரிவாள். இங்குள்ள பிரசவ நந்தி எனும் சிறிய அசையும் நந்தியிடம், தங்கள் வேண்டுதல்களைக் கூறித் திசைமாற்றி வைக்கின்றனர். 

பக்தர்கள் சுகப்பிரசவம் முடிந்ததும் மறுதிசை மாற்றி வைத்து வழிபடுகின்றனர். 

பிரசவம் குறித்த பழங்காலச் சிற்பமும் கல்தூணில் செதுக்கப்பட்டுள்ளது.








இத்திருத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் கோகிலாம்பாள் சமேத திருக்காமீஸ்வரருக்கு ஒவ்வெரு வருடமும் , வைகாசி மாதம் வருட பிரம்மோற்சவப் பெருவிழா  நடைபெறுகின்றது. 

அவ்விழாவின் ஒன்பதாம் நாள் அன்று திருத்தேர் விழா நடைபெறுகின்றது.

 இவ்விழாவானது புதுச்சேரி மாநிலத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாகும். இம்மாநிலத்திலையே பெரிய தேர் ஆனது இத்திருத்தலத்தின் தேர் ஆகும்.

இத்திருத்தேர்  67 அடி உயரம் கொண்டது. இவ்விழாவின் போது புதுச்சேரி மாநில கவர்னர், மாநில முதல்வர், மற்றும் ஏனைய மத்திய மந்திரி , புதுவை சட்டமன்ற உறுப்பினர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துத் துவக்கி வைப்பது ஓவ்வொரு வருடமும் நடக்கின்ற நிகழ்ச்சியாகும்.






மறைக ளாயின நான்கும்
    மற்றுள பொருள்களும் எல்லாத்
துறையும் தோத்திரத் திறையும்
    தொன்மையும் நன்மையும் ஆய
அறையும் பூம்புனல் ஆனைக்
    காவுடை ஆதியை நாளும்
இறைவன் என்றடி சேர்வார்
    எம்மையும் ஆளுடை யாரே

வேதங்கள் நான்கும் மற்றைய பொருள்களும், பல சமயங்களும், அவற்றில் புகழ்ந்து சொல்லப்படும் கடவுள்களும், இவை அனைத்திற்கும் முன்னேயுள்ள முதற்பொருளும், வீடுபேறும் என்கின்ற இவை எல்லாமாய் நிற்கின்ற ஒலிக்கும் அழகிய நீரையுடைய திருவானைக்காவைத் தனதாக உடைய முதல்வனை, ` இவனே முதல்வன் ` என்று அறிந்து, நாள்தோறும் அடிபணிகின்றவர், எம்மையும் அடிமைகொண்டு ஆளுதலுடையவராவர்.



அன்புடன்
அனுபிரேம்

10 comments:

  1. வாய்ப்பு கிடைத்தும் மிஸ் பண்ணிட்டேன்ப்பா.
    கோவில் வெகு அருமையா இருக்கும்போல!

    ReplyDelete
    Replies
    1. நகரின் நடுவே இருந்தாலும் அமைதியான கோவில் ராஜிக்கா...

      அடுத்த முறை வாய்ப்பு கிடைக்கும் போது சென்று வாருங்கள் ..

      Delete
  2. அழகிய கோவில் புதுவை போகும் எண்ணம் உண்டு. பார்க்கலாம்..

    ReplyDelete
  3. அனு இந்தக் கோயில் போயிருந்தாலும் இந்தக் குறிப்புகள் அதைப் பர்றிய விவரங்கள் எல்லாம் உங்க மூலமாத்தான் தெரிஞ்சுக்கறேன். பாண்டிச்சேரில இருந்தப்ப ஒரு சில நேரத்துல போயிருக்கேன்..

    கீதா

    ReplyDelete
  4. திருக்காமீசுவரம் கோவில் அழகு. தலவரலாறு, தல மகிமை அருமை.
    வாய்ப்பு கிடைத்தால் பார்க்க வேண்டும்.
    படங்கள் எல்லாம் நேரில் பார்த்த உணர்வை தருகிறது.
    வில்லியனூர் மாதா மிகவும் பிரசித்தம் அல்லவா?

    ReplyDelete
  5. கோவிலும் கோவில் குளமும் என்னை ரொம்பவே கவர்ந்தன

    ReplyDelete
  6. கோவிலும் படங்களும் மிக அழகு. வாய்ப்பு கிடைக்கும்போது செல்லவேண்டும்.

    ReplyDelete
  7. அழகான படங்கள்.

    கோவில் தகவல்கள் சிறப்பு.

    ReplyDelete
  8. அழகான கோவில். நிறைய தகவல்கள். அருமை.

    ReplyDelete