14 January 2020

திருப்பாவை – பாசுரம் 3௦

திருப்பாவை முப்பது பாடல்களையும் பாடுவோர் திருமால் திருவருள் பெற்று எப்பொழுதும் பேரின்பத்துடன் வாழ்வார்கள்









வங்கக்கடல்கடைந்த மாதவனைக்கேசவனை *

திங்கள்திருமுகத்துச் சேயிழையார்சென்றிறைஞ்சி *

அங்கப்பறைகொண்டவாற்றை * அணிபுதுவைப் 

பைங்கமலத்தண்தெரியல் பட்டர்பிரான்கோதை சொன்ன *

சங்கத்தமிழ்மாலை முப்பதும்தப்பாமே *

இங்குப்பரிசுரைப்பார் ஈரிரண்டுமால்வரைத்தோள் *

செங்கண்திருமுகத்துச் செல்வத்திருமாலால் *

எங்கும்திருவருள்பெற்று இன்புறுவரெம்பாவாய். (2)




பொருள்: 

அலைகள் நிறைந்த பாற்கடலைக் கடைந்த மாதவனும், 

கேசி என்ற அரக்கனைக் கொன்ற கேசவனுமான கண்ணனை, 

சந்திரனைப் போன்ற அழகு முகம் கொண்ட அணிகலன் அணிந்த பெண்கள்  தரிசித்து,

 பாவை விரத பலன் பெற்ற விபரத்தை

 ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த, குளிர்ந்த தாமரை போன்ற முகத்தையுடைய பெரியாழ்வாரின் பெண்ணான ஆண்டாள்,

 இனிய தமிழில் முப்பது பாடல் பாடி பாமாலை தொடுத்திருக்கிறாள்.

 இதனை படிப்பவர்கள், உயர்ந்த தோள்களை யுடையவனும், 

அழகிய கண்களைக் கொண்ட திருமுகத்தை உடையவனும், 

செல்வத்துக்கு அதிபதியுமான திருமாலின் ஆசியுடன் எங்கு சென்றாலும் செல்வச்செழிப்பு பெற்று இன்பமுடன் வாழ்வர்.





ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.


அன்புடன்
அனுபிரேம்

2 comments:

  1. திருமாலின் ஆசியே அனைத்தும் தரும்.
    ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.

    ReplyDelete
  2. திருப்பாவை அமுதம் தினம் தினம் பருகத் தந்த உங்களுக்கு நன்றி.

    ReplyDelete