12 April 2023

4. சீதை தசரதருக்கு பிண்டதானம் செய்தது....


வாழ்க வளமுடன் 



முந்தைய பதிவுகள்  

  “இத்தலத்தில் 48 இடங்களில் நீத்தார் கடன் நிறைவேற்ற வேண்டும்’ என்று தல புராணம் உரைக்கிறது. ஆனால், தற்போது பல்குனி நதி, விஷ்ணு பாதம், அட்சய வடம் (அழியாத ஆலமரம்) ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே திதி கொடுக்கிறார்கள்..


சீதை தசரதருக்கு “பிண்டப்பிரதானம்”, பிண்டதானம் செய்தது --

ஸ்ரீராமபிரான் வனவாசம் செய்கையில் சிரார்த்த தினம் வந்தது. வழக்கம் போல் லட்சுமணர் பிக்ஷை அரிசி வாங்க அருகிலுள்ள கிராமத்துக்குச் சென்றிருந்தார். 

வெகு நேரமாயிற்று. லட்சுமணரை காணும். இராமர் தம்பியைத் தேடி கிளம்பினார் . சிரார்த்த காலம் வந்தது.

 சீதை தவித்தாள். சிரார்த்த காலம் தாண்டி விட்டால் பிதுர்க்கள் சபிப்பார்களே என்று வருந்தினாள். 

தாபசம், இங்குதி ஆகிய பழங்களை பறித்து அக்கினியில் வேக வைத்தாள். அதைப் பிசைந்து பிண்டம் தயாரித்தாள். அப்போது அவள் முன்பு தேஜோ மயமாக பிதுர்க்கள் தோன்றினர். 

“சீதே, பிண்டத்தை எங்களுக்கு சமர்ப்பிக்கலாம். மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறோம்” என்றார் மாமனாரான தசரதர். 

“உங்கள் பிள்ளைகள் சமர்ப்பிக்க வேண்டியதை நான் செய்யலாமா?” என்று சீதை தயங்கினாள். 

“சிரார்த்த காலம் தவறி அசுர காலம் வந்து விடும். சாட்சி வைத்துக் கொண்டு கொடு. தப்பில்லை”என்றார் தசரதர்.

 சரி என்று சீதையும் பல்குனி நதி, பசு, ஒரு பிராமணன், துளசி செடி மற்றும் அக்ஷய வட ஆலமரம் ஆகியவற்றை சாக்ஷி வைத்துக்கொண்டு,

 அவை எல்லாம் ஒப்புக்கொண்டதும்,”உங்களைச் சாட்சி வைத்து பிதுர்க்களுக்கு பிண்டம் தருகிறேன். என் கணவரிடம் இந்த நிகழ்ச்சியைச் சொல்ல வேண்டும்” என்று கேட்டுக்கொண்டு பிண்டம் கொடுத்தாள். 

பிதுர்க்கள் பிண்டத்தை மகிழ்ச்சியோடு ஏற்று மறைந்தனர். 

சிறிது நேரத்தில் ஸ்ரீராம  லட்சுமணர்கள் தானியங்களோடு வந்தனர். “சீதா, சீக்கிரம் சமையல் செய்” என்றார் ராமர். 

சீதை நடந்ததைக் கூறினாள்.  ராமர் திகைப்புடன் “சாஸ்திரோக்தமாக சிரார்த்தம் நடத்தும் எங்கள் முன் வராத பிதுர்க்கள் உன் முன் தோன்றி நேரில் பிண்டம் வாங்கினர் என்பது கற்பனை” என்றார். 

“நாதா! நான் உண்மையைத்தான் சொல்கிறேன் பல்குனி நதி, பசு, ஒரு பிராமணன், துளசிச்செடி மற்றும் அக்ஷய வட ஆலமரம் ஆகியவற்றை சாக்ஷி வைத்துக் கொண்டேன். அவற்றிடம் விசாரித்துக் கொள்ளுங்கள்” என்றாள். 

உடனே ராமர், “சீதை சொல்வது போல் என் தந்தை பிதுர்க்களோடு நேரில் வந்து பிண்டம் வாங்கினாரா?” என்று கேட்க, அக்ஷய வட ஆலமரம் தவிர மற்றவர்கள் ‘`நாங்கள் அறியோம்’ என்று சொல்லி விட்டன. 

கடவுளான ராமர் வருவதற்குள் சீதை பிதுர் காரியம் முடித்ததற்குத் தாங்கள் உடந்தையாக இருந்தோம் என்று ராமர் கோபிப்பாரோ எனப் பயந்தன. 

ராமரும் வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு “சமையலை முடி. நாங்கள் நீராடி வருகிறோம்” என்று கூறிச்சென்றார். 

சீதை தன்னைக் கணவர் நம்பாததை எண்ணி துக்கத்தோடு சமையல் செய்தாள். 

ராமர் நீராடி வந்து சங்கல்பம் செய்து கொண்டு, பிதுர்க்களை சிரார்த்த சாமான்களில் ஆவாஹனம் செய்யும்போது வானிலிருந்து அசரீரி ஒலித்தது. 

“ராமா! ஏன் இரண்டாம் முறையாக திதி கொடுக்க எங்களை அழைக்கிறாய்? சீதை கையால் பிண்டம் வாங்கி நாங்கள் திருப்தியுள்ளோம்” என்றது அசரீரி. 

அதன் பின் ராமர் சமாதானமானார்.  

ஆனால் கோபமே வராத சீதா அந்த சமயம் கோபப்பட்டு “பல்குனி நதியே! உன்னிடம் எந்தக் காலத்தும் வெள்ளம் தோன்றாது, தண்ணீர் வற்றியே காணப்படும் என்றும், 

பசுவே! உன் முகத்தில் வாசம் செய்த நான் உன் பின் பக்கத்துக்குப் போய் விடுவேன் என்றும், 

இந்த கயாவில் எங்கும் துளசி வளராது போகட்டும் என்றும்

’கயா பிராமணர்கள்’ தங்கள் வித்தையை விற்று வயிறு வளர்க்கும் அவலம் உண்டாகட்டும், மேலும் அவர்கள் எவ்வளவு இருந்தாலும் திருப்தி இல்லாமலே இருப்பார்கள் என்றும் ” என்று சீதை பொய்ச்சாட்சி கூறிய நால்வருக்கும் சாபமிட்டாள். 

ஆலமரம் தனக்கு சாட்சியாக நின்றதற்கு மகிழ்ந்து , “யுக யுகாந்திரங்கள் நீடுடி வாழ வாழ்த்தி, யுக முடிவின்போது பிரளயத்தின் போது, அக்ஷய வட இலையிலேயே பரமாத்மா குழந்தை வடிவில் தோன்றுவார். அவரது திருவடிகளில் உலகங்கள் அனைத்தும் லயமாகும் ” என்று அருளினாள். 

மேலும், “கயாவில் ஸ்ரார்த்தம் செய்ய வருபவர்கள் அக்ஷய வடத்திலும் பிண்டங்களை அர்ப்பணம் செய்வார்கள் அப்போது தான் கயாவில் ஸ்ரார்த்தம் செய்வதன் பலன் கிடைக்கும் ” என்றும் ஆசிர்வதித்தாள். 

இந்த சாபத்தின் விளைவால்தான் கயாவில் துளசி வளருவதே கிடையாது.

 மேலும் பல்குனி நதியும் வற்றிபோய் காட்சியளிக்கிறது.


முக்தியடைய அனுஷ்டானங்கள் புராணங்களில் கூறப்பட்டுள்ளன அதில் கயா சிரர்த்தமும் சொல்லப்பட்டுள்ளது.வட இந்தியர்கள் முதலில் கயாவின் அருகேயுள்ள ‘புன்புன் ‘ நதிக்கரையில் நீத்தார் கடன் முடித்து பின்னர் கயாவுக்கு வருகிறார்கள். கயாவில் எந்தக் காலத்திலும் பித்ரு-சிரார்த்த்ம பிண்டதானம் செய்யலாம் என்று கயா மகாத்மியம் விளம்புகிறது. 


நாங்கள் காலை  7 மணிக்கு இங்கு வந்தோம் என முந்தைய பதிவில் கூறினேன். மடத்தின் வழியாக 250 ரூபாய் செலுத்தி இங்கிருந்த புரோகிதரை பதிவு செய்து இருந்தோம். அவரிடம் பேசி ஏற்கனவே அவருடன் 25 பேர் கொண்ட சென்னை  குழு தர்பணத்திற்கு காத்திருந்தது. அவர்களுடன் நாங்களும் சேர்ந்து கொண்டோம். (அவர்களுக்கு எல்லாம் வேறு தொகை  அதிகமாக இருக்கும் போல, அதனால் எங்களிடம் அவர்களிடம் உங்களின் தொகையை கூறாதீர்கள் என கூறிவிட்டார்.)







பின் மிக பொறுமையாக மிக நன்றாக விளக்கி தர்ப்பணம் செய்ய வைத்தார். பின் அவற்றை விஷ்ணு பாதத்தில்  சமர்ப்பிக்க வைத்து அட்சய  வடத்தை வலம்  வர செய்து, நமது ஆக சிறந்த கடமையை சிறப்பாக செய்ய வைத்தார் அந்த பண்டிதர்.


தொடரும் ...


நம்மாழ்வார் அருளிச்  செய்த 

பெரிய திருவந்தாதி

2585

முயற்றி சுமந்து,எழுந்து*  முந்துற்ற நெஞ்சே,* 

இயற்றுவாய் எம்மொடு நீ கூடி,* நயப்பு உடைய

 நா ஈன் தொடைக் கிளவி*  யுள் பொதிவோம்,*  நல் பூவைப் 

பூ ஈன்ற வண்ணன் புகழ்  (2)




அன்புடன்,
அனுபிரேம் 🌼🌼🌼



No comments:

Post a Comment