13 April 2023

5. கயா சிரார்த்தம் -- மாத்ரு ஷோடஸி

 

வாழ்க வளமுடன் 


முந்தைய பதிவுகள்  





கயை புனிதத் தலத்தில் இறந்த முன்னோர்களுக்கு  பிண்டமளித்து நீத்தார் கடன் செய்வது மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது. இந்தப் பிண்டங்களை பல்குணி நதிக்கரையிலும், விஷ்ணு பாதத்திலும் அக்ஷய வடம் எனும் விழுதில்லா ஆலமரத்தின் அடியிலும் படைக்கிறார்கள்.

 இங்கு நம் முன்னோர்களுக்கு மட்டுமல்ல; நண்பர்கள், (ஏன் நல்ல மனமிருந்தால் எதிரிகளுக்கும் கூட பிண்டம் வைக்கலாம்) உறவுகள், நாம் செல்லமாக வளர்த்த ஆசை வளர்ப்புப் பிராணிகள், முகம் தெரியாதவர்கள், விபத்து போன்றவற்றில் மறைந்தவர்கள் என அனைவருக்கும் பிண்டம் வைக்கலாம். அக்ஷய வடத்தில் பிண்டம் வைப்பதோடு ”நீத்தார் வழிபாடு” கயையில் நிறைவடைகிறது. இதனால் நம் முன்னோர்கள் மகிழ்வதாகவும், மேலுலகம் செல்வதாகவும், நம்மை ஆசிர்வதிப்பதாகவும் நம்பிக்கை.


ஜீவதோர் வாக்ய கரணாத்

ப்ராத்யாப்தம் பூரி போஜணாத்

கயாயாம் பிண்ட தானாத்

த்ரிபி : புத்ரஸ்ய புத்ராய

என்கிறது வடமொழி ஸ்லோகம்.

(புத்ரனின் கடமை என்னவென்று சாஸ்த்ரங்கள் கூறும் போது, தாய்தந்தை சொற்படி நட, அவர்கள் இறந்தபின் அவர்களுக்கு வருஷா வருஷம் குறிப்பிட்ட திதியில் ச்ராத்தம் (ப்ரத்யாப்திகம்) முறையாக செய், கயாவிற்கு சென்று அவர்களுக்கு பிண்ட ப்ரதானம் செய், இந்த மூன்றும் எவன் செய்கின்றானோ அவன்தான் புத்ரன் என்று வலியுறுத்துகின்றன)............

 தாய், தந்தையரை மதித்துப் பராமரிப்பது மட்டுமல்ல புத்திரனின் கடமை. அவர்கள் இறந்தபின்னும் அவர்கள் மேல்நிலைக்கு உயர நீத்தார் வழிபாடுகளைச் செய்ய வேண்டும். அதுவும் ’கயை’ போன்ற இடத்திற்குச் சென்று அவர்கள் உயர்நிலைக்குச் செல்ல பிண்ட தானம் செய்ய வேண்டும். அவனே நல்ல புத்திரன் என்கிறது இந்த ஸ்லோகம்.


கயா ஸ்ரார்த்த முறைகள் –

ஸ்ரார்தத்தை கயாவாசிகளை வ்ரித்தே செய்ய வேண்டும்.

கணவன் மனைவி சேர்ந்து கயா ஸ்ரார்த்தம் செய்வது சிறந்தது.

கருப்பு எள்ளையே உபயோகிக்க வேண்டும்

தந்தை தாய் பரம பதித்து ஓர் ஆண்டுக்கு பிறகே கயா ஸ்ரார்த்தம் செய்ய வேண்டும்.

தந்தை பரமபதித்து தாய் ஜீவித்து இருக்கும் போது கயா ஸ்ரார்த்தம் செய்யலாம் -ஆனால் தாய் பரமபதித்து தந்தை ஜீவித்து இருந்தால் செய்ய முடியாது.


மாத்ரு ஷோடஸி ஸ்லோகமும் அர்த்தமும் .....

நம்மைப் பத்து மாதம் சுமந்து, உதிரத்தைத் தாய்பாலாக்கி அளித்து, பெற்று வளர்த்து ஆளாக்குபவள் அன்னை. அந்த அன்னைக்கு இறந்த பின்னரும் காட்டும் நன்றிக் கடனே மேற்கண்ட 16 பிண்டப் பிரதானம். அதற்கென்று உள்ள மந்திரங்களைச் சொல்லி அந்தப் பிண்டத்தைப் படைக்கின்றனர்.

இந்த அக்ஷய வடத்தின் கீழே நிழலில் தான் பிண்ட பிரதானம் இடுவார்கள். இதில் முக்யமாக 64பிண்டங்களில் பெற்ற தாய்க்கு மட்டுமே 16 பிண்டங்கள். ஆந்த 16 பிண்டங்களை அம்மாவுக்காக ஒவ்வொரு வாக்யமாக சொல்லி இடுகிறோம். அந்த பதினாறு தான் “மாத்ரு ஷோடஸி”. 


1. கர்பஸ்ய உத்கமநே துகம் விஷமே பூமி வர்த்மநி |

தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


”கொஞ்சமா நஞ்சமா நான் உன்னை படுத்தியது. ஒரு பத்து மாத காலம் எப்படியெல்லாம் உன்னை உதைத்திருக்கிறேன். என்னையும் சுமந்தபடி மேடும் பள்ளமுமாக நீ அலைந்தாயே. நான் கொடுத்த கஷ்டத்தை துளி கூட நீ பொருட்படுத்த வில்லை. என்னை திட்டவில்லையே. சந்தோஷமாக என்னை உள்ளே அடக்கிய உன் வயிறை எண்ணற்ற முறை ஆசையாக தடவி கொடுத்தாயே. இதோ நான் செய்த பாவங்களுக்காக உனக்கு இந்த முதல் பிண்டம். பரிகாரமாக ஏற்றுக்கொள்வாயா?


2. மாஸி மாஸி க்ருதம் கஷ்டம் வேதநா ப்ரஸவே ததா |

தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


”ஏன் சோர்ந்து போயிருக்கிறாய். உன் பிள்ளை உள்ளே படுத்துகிறானா? பிரசவ காலம் கஷ்டமானது தான். மாசா மாசம் நான் வளர வளர உனக்கு துன்பத்தை தானே அதிகமாக கொடுத்துக் கொண்டே வந்தேன். இந்தா அதற்கு பரிகாரமாக நான் இடும் இந்த இரண்டாவது பிண்டம். ஏற்றுக்கொள் அம்மா.


3. பத்ப்யாம் ப்ரஜாயதே புத்ரோ ஜநந்யா: பரிவேதநம் |

தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


அம்மா, நான் அளித்த வேதனையில் நீ பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்துக்கொண்ட தாங்கமுடியாத துன்பம் நான் உன்னை வயிற்ருக்குள் இருந்தபோது உதைத்தது தானே. அதற்காக ப்ராயச்தித்தமாக இந்த 3வது ஸ்பெஷல் பிண்டம் உனக்கு. என் தாயே. 


4. ஸம்பூர்ணே தசமே மாஸி சாத்யந்தம் மாத்ருபீடநம் |

தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


”அம்மா, இந்த 4 வது பிண்டம் உனது பூரண கர்ப காலத்தில் நீ என்னால் பட்ட வேதனைக்காக — ஒரு பரிசு — என்றே ஏற்றுக்கொள். என்னைப் பொருத்தவரை எனது பிராயச்சித்தம் என்று நான் இடுகிறேன். 


5. சைதில்யே ப்ரஸவே ப்ராப்தே மாத விந்ததி துஷ்க்ருதம் |

தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் |


”ஏண்டி மூச்சு விடறது கஷ்டமாக இருக்கா. கொஞ்ச காலம் தான் பொறுத்துக்கோ” .என்று உன் உறவுகள், நட்புகள் கேட்குமே. அவ்வாறே மனமுவந்து நான் விளைத்த துன்பத்தை, வேதனையை நீ தாங்கினாயே. அதற்கு பரிகாரம் தான் இப்போது என் கையில் நான் தாங்கும் இந்த ஐந்தாவது பிண்டம். ஏற்றுக்கொள் என் அருமைத் தாயே.”


6. ‘ பிபேச்ச கடுத்ரவ்யாணி க்வாதாநி விவிதா நி ச|

தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


”குழந்தை வயித்திலே இருக்கும்போது இதெல்லாம் எனக்கு வேண்டாம். அப்புறமா சாப்பிடறேன்”என்று உனக்கு பிடித்ததை எல்லாம் கூட வேண்டாமே என்று உதறினாயே. எனக்காகவே பத்தியம் இருந்தாயல்லவா. நான் நோயற்று வளர, வாழ எத்தனை தியாகம் செய்தாய். நான் உனக்கு செய்த பாவத்திற்கு தான் இந்த ஆறாவது பிண்டம். அம்மா இதற்கு மேல் என்னால் என்ன செய்ய முடியும் சொல்?’


7. அக்நிநா சோஷயேத்தேஹம் தரிராத்ரோ போஷணேந |

தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


”நான் குவா குவா என்று பேசி பிறந்து சில நாட்கள் தான் ஆகிறது. அப்போது நீ பசியை அடக்கி வெறும் வயிற்றோடு எத்தனை நாள் சரியான ஆகாரம் இன்றி தூக்கமின்றி வாடினாய். எனக்கு மட்டும் பால் நேரம் தவறாமல் கிடைத்ததே. அந்த துன்பத்தை நான் உனக்கு கொடுத்ததற்கு பரிகாரம் தான் இந்த 7வது பிண்டம்..\


8. ராத்ரௌ மூத்ரபுரீஷாப்யாம் க்லிந்ந: ஸ்யாந்மாத்ரு கர்பட |

தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது. கண்ணில் நீரும் சுரக்கிறது. எத்தனை இரவுகள் அசந்து தூங்கும் உன் புடவையை ஈரம் பண்ணியிருக்கிறேன். படவா என்று செல்லமாக தானே சிரித்துக்கொண்டே வேறு துணி எனக்கும் மாற்றினாய். இதற்கு நான் உனக்கு இடும் கைம்மாறு தான் இந்த 8 வது பிண்டம். இதையாவது ஈரமில்லாமல் தருகிறேனே. \


9. ”தயா விஹ்வலே புத்ரே மாதா ஹ்யந்தம் ப்ரயச்ச தி |

தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


”நான் சுகவாசி. எனக்கு எப்போது தாகம், பசி, தூக்கம், எதுவுமே தெரியாது.நீ தான் இருந்தாயே, பார்த்து பார்த்து அவ்வப்போது, எனக்காக நீ இதெல்லாம் செய்தாயே. இந்த பெரிய மனது பண்ணி என்னை வளர்த்த உனக்கு நான் எவ்வளவு துன்பம் தந்திருக்கிறேன். அதற்காக பிராயச் சித்தமாக இந்த 9வது பிண்டம். 

.

10. திவாராத்ரௌ ஸதா மாதா ததாதி நிர்பரம் ஸ்தநம் |

தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


”ஒரு சின்ன செல்ல தட்டு என் மொட்டை மண்டையில். ”கடிக்காதேடா..” . நான் பால் மட்டுமா உறிஞ்சினேன். என் சிறு பல்லால் உன்னை கடித்தேனே. வலித்ததல்லவா உனக்கு. இந்தா அதற்காக ப்ளீஸ் இந்த பிண்டத்தை ஏற்றுக்கொள் அம்மா


11. மாகே மாஸி நிதாகே சசிரேத்யந்த து கிதா |

தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


”வெளியே பனி, குழந்தைக்கு ஆகாது. இந்த விசிறியை எடு. குழந்தைக்கு உள்ளே வியர்க்கும். வாடைக்காத்து. ஜன்னலை மூடு. எனக்கு காத்து வேண்டாம். குழந்தையைப் போர்த்தவேண்டும். கம்பளி கொண்டுவா. குழந்தைக்கு குளிருமே.” காலத்திற்கேற்றவாறு என்னை கருத்தில் கொண்டு காத்த என் தாயே, நான் பிரதியுபகாரமாக கொடுப்பதெல்லாம் இந்த சிறு பிண்டம், 11வதாக எடுத்துக்கொள்.’


12. புத்ரே வ்யாதி ஸமாயுக்தே மாதா ஹா க்ரந்த காரிணி

தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


எத்தனை இரவுகள், எத்தனை மன வியாகூலம். குழந்தை நெற்றி எல்லாம் சுடறதே, சுவாசம் கஷ்டமாயிருக்கே. சளி உபாதையாக இருக்கிறதே என்று வருந்தி, நாமக் கட்டி, மஞ்சள், விபூதி, பத்து எல்லாம் தடவி மடியில் போட்டு ஆட்டி, தட்டி, என்னை வளர்த்தாயே, கண்விழித்து உன் உடல் . அதற்காகத்தான் இந்த 12வது பிண்டம் தருகிறேன்.


13. யமத்வாரே மஹாகோரே மாதா சோசதி ஸந்ததம் |

தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


நான் இந்த பூலோகத்தில் இப்போது கார், பங்களா வசதிகளோடு கை நிறைய காசோடு . ஆனால் இதெல்லாம் அனுபவிக்காமல் நீ யமலோகம் நடந்து சென்று கொண்டிருக்கிறாயே. என் கார் அங்கு வராதே. வழியெல்லாம் எத்தனை இடையூறு. அவை எதுவுமே உனக்கு துன்பம் தராமல் இருக்க நான் தர முடிந்தது இந்த 13வது பிண்டம் தான் அம்மா. 


14. யாவத்புத்ரோ ந பவதி தாவந்மாதுச்ச சோசநம் |

தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


நான் இப்போது, பெரிய டாக்டர், எஞ்சினீயர், வக்கீல், ஜட்ஜ், ஹெட்மாஸ்டர், கம்ப்யூடர் ஸ்பெஷலிஸ்ட் — நீ இல்லாவிட்டால் நானே எது.? ஏது? ஆதார காரணமே, என் தாயே, இந்த 14வது பிண்டம் தான் அதற்கு பரியுபகாரமாக உனக்கு என்னால் தர முடிந்தது. 


15. ஸ்வல்ப ஆஹாரஸ்ய கரணீ யாவத் புத்ரச்ச பாலக: |

தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


திருப்பி திருப்பி சொல்கிறேனே. நான் வளரத்தானே நீ உன்னை வருத்திக்கொண்டாய். நீ வேண்டியதை திரஸ்கரித்தாய். நான் புத்தகத்தில் தான் ”தன்னலமற்ற”

தியாகம் என்று படிக்கிறேன். நீ அதை பிரத்யக்ஷமாக புரிந்து அனுபவித்தவள். எனக்காக நீ கிடந்த பட்டினி, பத்தியம் எல்லாவற்றிற்கும் உனக்கு நான் தரும் பிரதிஉபகாரம் இந்த 15வது பிண்டம் ஒன்றே. 


16. காத்ரபங்கா பவேந்மாதா ம்ருத்யு ஏவ ந ஸம்சய |

தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||


நான் சுய கார்யப் புலி. சுயநல விஷமி. உன்னில் நான் உருவாகி, கருவாகி, சிறுவனாகி, பெரியவனாகி,இப்போது உன் மரண வேதனையை சற்றே உணர்ந்தவனாக கண்ணில் நீரோடு தரும் இந்த 16வது கடைசி கடைசி பிண்டத்தை ஏற்றுக்கொள் என் தாயே. தெய்வமே. என்னை மன்னித்து ஆசிர்வதி.


மஹா பூதாந்தரங்கஸ்தோ மஹா மாயா மயஸ்ததா

ஸர்வ பூதாத்மகச்சைவ  தஸ்மை ஸர்வாத்மனே நமஹ


( எவர் எல்லா உயிரினங்களில் உள்ளுறைபவராகவும் மஹா மாயையையுடையவராகவும் ஸர்வ பூதாத்மகமாகவும் இருக்கிறாரோ அந்த ஸர்வாத்மனை நமஸ்கரிக்கிறேன் )”


( இணையத்தில் கயா சிரார்த்தம்  பற்றி வாசிக்கும்  பொழுது மனதை தொட்ட  வரிகள் அதனாலே இங்கு பகிர்கிறேன். )


 கயா சிராத்தம் முக்கியத்துவம் பெறுவதற்கு புராணங்களில் பல கதைகள் உண்டு. கயாசுரன் என்ற ஒரு அசுரன் தேவ-அசுர யுத்தத்தில் தோல்வியடைந்து தனது முக்திக்கு வழிதேடினான். தனது உடம்பையே ஒரு ஸ்தலமாக்கிய அவனது வேண்டுகோளுக்கு இணங்க பிரம்மதேவர் அங்கே ஆலமரத்தினை உண்டாக்கி ஒரு யக்ஞம் மேற்கொண்டார். அந்த யக்ஞத்தால் திருப்தியுற்ற நாராயணன் தனது திருப்பாதத்தால் கயாசுரனுக்கு மோக்ஷத்தை அருளினார். 


விஷ்ணுவின் பாதம் பதிந்த அந்த ஸ்தலத்தில் சிராத்தம் செய்வதால் முன்னோர்களுக்கு குறைவில்லாத அளவிற்கு திருப்தி உண்டாகிறது. கயாசுரனின் பெயரால் அந்த ஸ்தலம் கயா என்றும்,பிரம்ம தேவன் யக்ஞம் செய்த அந்த ஆலமரம் அக்ஷய வடம் என்றும் பெயர் பெற்றன. வடமொழியில் ‘வடம்’ என்றால் ஆலமரம் என்றும், அக்ஷயம் என்றால் குறைவில்லாத என்றும் பொருள்.  இந்த கதையை  முந்தைய பதிவுகளில் கண்டோம்.


பெரும்பாலானோரால் சொல்லப்படுகின்ற இன்னொரு கதையும் உண்டு. பெருமாள் தனது வாமன அவதாரத்தின் போது மஹாபலிச் சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் தானம் கேட்டபோது தனது முதலாவது அடியால் பூமியை அளந்தார் என்று கேள்விப்பட்டிருப்போம். அவ்வாறு அவர் இந்த பூமியை அளக்க தனது முதல் அடியை வைத்த இடம் கயா என்றும் தனது பாதத்தினை அவர் அங்கு பதித்ததால் அது குறையின்றி வளர்ந்தது என்றும், அவர் பாதம் பதித்த அந்த இடமே விஷ்ணுபாதம் என்றழைக்கப்படுகின்ற கயா என்னும் புனிதத்தலம் என்றும் சொல்லப்படுகிறது. 


இத்தனை சிறப்பு வாய்ந்த அந்த கயா என்னும் புண்ணிய க்ஷேத்திரத்தில் தனது வாழ்நாளில் ஒருமுறையாவது சிராத்தம் செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு செய்கின்ற சிராத்தம் ஆனது 101குலத்தையும், அந்த மனிதன் சார்ந்த ஏழு கோத்திரக்காரர்களையும் கரையேற்றுகிறது என்றும் ஸ்மிருதி உரைக்கிறது. அதாவது, வருடந்தோறும் செய்து வரும் சிராத்தம் என்பதை அன்றாடம் நாம் சாப்பிடுகின்ற உணவு என்று வைத்துக்கொண்டால், கயா சிராத்தம் என்பது என்றோ ஒரு நாள் சாப்பிடுகின்ற விருந்து போஜனம் போல என்று சொல்லலாம். 





முந்தைய பதிவில் எங்களுக்கு வந்த பண்டிட் மிக சிறப்பாக சிரார்த்தம் செய்ய வைத்தார் என கூறினேன்.

சீதா மாதா சாபம் கொடுத்தது போல  அக்ஷய வடத்தை வலம் வரும் பொழுது மிக சிறு வயது அந்தணர்களுக்கும் பணம் கொடு பணம் கொடு என அனைவரையும் தொந்தரவு செய்கிறார்கள். அந்த ஒரு மரத்தை சுற்றி சில அடிகளுக்கு ஒருவர் என பலர் நிற்கிறார்கள். அதனை காணும் பொழுது  கஷ்டமாக இருந்தது. கொடுத்தாலும் அவர்களுக்கு  திருப்தி இல்லை.


பிறகு சிறிது நேரம் அங்கு அமர்ந்து வேடிக்கை பார்த்த பொழுது காலையில்  பல பெண்கள் பால், தண்ணீர், பூ என எடுத்து வந்து தாங்களே பூஜை செய்கிறார்கள். அதில் ஒரு சுவற்றில் பள்ளிகொண்ட பெருமாள் இருந்தார். பெண்கள் அவரின் காலை அமுக்கி விட்டு பின் கழுவி பூஜை செய்தார்கள் பார்க்கும் பொழுதே மிக அழகாக இருந்தது . அதிலும் அவர்கள் பெருமானின் காலை அத்தனை அன்பாக பிடித்து, ஒரு குழந்தைக்கு செய்வது போல செய்தது மனதிற்கு மிக நிறைவாக ஆசையாக  இருந்துது . மிக அழகிய பக்தி .


இங்கு பூஜை முடியவும் மீண்டும் எங்கள்  மடத்திற்கு சென்றோம். அடுத்து என்ன செய்தோம் அடுத்த பதிவில்....

 

தொடரும் ...


நம்மாழ்வார் அருளிச்  செய்த 

பெரிய திருவந்தாதி


  2

புகழ்வோம் பழிப்போம்*  புகழோம் பழியோம்* 

இகழ்வோம் மதிப்போம்*  மதியோம் இகழோம்*  மற்று-

எங்கள் மால்! செங்கண் மால்!*  சீறல் நீ, தீவினையோம்* 

எங்கள் மால் கண்டாய் இவை.  

2586



அன்புடன்,
அனுபிரேம் 🌼🌼🌼


No comments:

Post a Comment