26 January 2019

ஸ்ரீ கூரத்தாழ்வான்

இன்று ஸ்ரீ   கூரத்தாழ்வான்    அவதார தினம் .....

தை – ஹஸ்தம்........





கூரத்தாழ்வான் வாழி திருநாமம்!


சீராரும் திருப்பதிகள் சிறக்கவந்தோன் வாழியே!

தென்னரங்கர் சீர் அருளைச் சேருமவன் வாழியே!

பாராரும் எதிராசர் பதம் பணிந்தோன் வாழியே!

பாடியத்தின் உட்பொருளைப் பகருமவன் வாழியே!

நாராயணன் சமயம் நாட்டினான் வாழியே!

நாலூரான் தனக்கு முத்தி நல்கினான் வாழியே!

ஏராரும் தையில் அத்தத்திங்கு வந்தான் வாழியே!

எழில் கூரத்தாழ்வான் தன் இணை அடிகள் வாழியே!






சுவாமி கூரத்தாழ்வான் வைபவம் போன வருட பதிவு  இங்கே

ஆளவந்தார் தொடக்கமாக ஸ்ரீராமானுஜர் காலம்வரை,
திவ்வியப் பிரபந்தத்திற்கு வாய்மொழியாகவே உரைகள் இருந்தது. வியாக்கியானங்கள் எல்லாம் ஸ்ரீராமானுஜருக்கு பிறகு தான் எழுதப்பட்டது.

ஸ்ரீராமானுஜர் போலவே அவர் சீடர்களும் திவ்யபிரபந்தத்தை முழுமையாக சுவாசித்தார்கள். தாங்கள் சுவைத்த திவ்யபிரபந்தத்தின் உள் அர்த்தங்களைப் பலருக்கு நன்கு விளங்கும் படி காலட்சேபம் செய்வதில் வல்லவர்கள்.





இதற்குச் சான்றாக ஸ்ரீராமானுஜருக்கு பிறகு வந்த உரையாசிரியர்கள் தங்கள் வியாக்கியானங்களில் ஆங்காகே பூர்வாசாரியார்களான கூரத்தாழ்வான் இப்படிக் கூறுவார், பட்டர் இப்படிச் சொல்லி விளக்குவார் என்ற ஈடு போன்ற
நூல்களில் குறிப்புக்களாக பார்க்கலாம்.

ஸ்ரீராமானுஜரின் முதன்மை சீடரான கூரத்தாழ்வான் திவ்யப்ரபந்த பாசுரங்களுக்குக் குறிப்பாக நம்மாழ்வார்  திருவாய்மொழிக்கு ஆழ்வான் எளிமையான விளக்கங்களைச் சொல்லிபுரியவைப்பாராம்.

“சிறுமா மனிசராய் என்னை ஆண்டார்” என்ற பாசுரத்தில்

 “சிறு – மா” அதாவது “சிறுமை – பெருமை” என்று ஒன்றுக்கொன்று முரண் பட்ட குணமாக இருக்கும்

இரண்டும் எப்படி ஒருவருக்கு அதுவும் பெருமாளுக்கு இருக்க முடியும் ? என்று ஆழ்வானுடைய திருகுமாரரான(மகன்) பட்டர் கேட்ட போது

 அதற்குக் கூரத்தாழ்வான் ”ஆண்டான், எம்பார், அருளாளப் பெருமாள் போன்றவர்கள் வடிவில்(மேனி) சிறுத்தவர்களாக இருந்தாலும், ஞானத்தால் உயர்ந்தவர்கள் அன்றோ?” என்று விடை சொன்னார்.






பிறகு ஒரு சமயம் ராஜேந்திர சோழன் சதஸ்ஸில் ஆழ்வான் திருவாய்மொழி காலஷேபம் ஸாதித்துக்கொண்டு இருந்த போது

”வலையுள் அகப்படுத்து என்னை நன்நெஞ்சம்”

(5ம் பத்து 3ஆம் திருவாய்மொழி 7ஆம் பாசுரத்தில்) என்ற

பகுதி வந்த போது  ’ஆமருவி நிரை மேய்த்தான் நம்பியார்’ என்ற நூறு வயது நிரம்பிய முதியவர் ஒருவர் எழுந்து பாசுரத்தில்

“தலையில் வணங்கவுமாங்கொலோ தையாலார் முன்பே” என்று முடிகிறது.

நாயகனை நாயகியானவள் தலையால் வணங்குவாள் என்பதற்கு ஏதேனும் ஆதாரம் உண்டோ?” என்று கேட்க உடனே கூரத்தாழ்வான்

“ஏன் இல்லை, என்று ஸ்ரீராமாயனத்தில் சுந்திரகாண்டத்தில் சீதைப்பிராட்டி அனுமானிடம் செய்தி சொல்லி அனுப்பிய போது

”எனக்காக ராமபிரானைத் தலையால் வணங்கு என்று சொல்லியிருக்கிறாளே” என்று எடுத்துக்காட்டினார்.




இப்பேர்பட்ட கூரத்தாழ்வானிடம் திருவாய்மொழி காலஷேபம் கேட்க வேண்டும் என்று நம் உடையவருக்கு மிகுந்த ஆசை.

ஆனால் ஆசாரியரான ஸ்ரீராமானுஜருக்கு காலஷேபம் சொல்ல கூரத்தாழ்வான் இசையவில்லை.

 எனவே முதலியாண்டான் போன்றவர்கள் ஆழ்வான் காலஷேபத்தைக் கேட்டு அதை ஸ்ரீராமானுஜரிடம் விண்ணப்பிப்பது என்ற ஏற்பாடு செய்யப்பட்டது.

கூரேசர் திருவாய்மொழியின் தொடக்கப் பாசுரமான

 “உயர்வற உயர்நலம் உடையவன்” என்று தொடங்கியதுமே நம்மாழ்வார் பெருமாளுடைய கல்யாண குணங்களைப் பேசுகிறாரே என்று ஆழ்ந்து அந்த அனுபவத்தில் அப்படியே
மயங்கி மோதித்துவிட்டார்.

இப்படி இவர் மயங்கியதை மற்றவர்கள் ஸ்ரீராமானுஜரிடம் தெரிவிக்க ., அவரும் ஓடி வந்து இது போல தான்

 “எத்திரம் உரலினோடு , இணைதிருந்து ஏங்கிய எளிவே” என்று நினைத்தவாறே,

 நம்மாழ்வார் பெருமாளுடைய குணத்தை வியந்து ஆறு மாசம் மயக்க நிலையிலேயே இருந்தார் என்று சொல்லி,

 நம் கூரத்தாழ்வானும் நம்மாழ்வார் போல் பகவத் அனுபவத்தில் மோகித்திருப்பதைக் கண்டு பரவசப்பட்டு,

 “ஆழ்வான்! ஆழ்வான்! ஆழ்வான்! எழுந்திரும்!” என்றாராம்.

அதனால் தான் அவர் ’ஆழ்வான்’ என்ற பெயருடன், அவரின் பிறந்த ஊரின் பெயரையும் சேர்த்து, கூர்த்தாழ்வான் என்ற திருநாமத்துடன் அழைக்கப்பட்டார்.






672.   
தீதில் நன்னெறி நிற்க*  அல்லாது செய்*
நீதியாரொடும்*  கூடுவது இல்லை யான்*
ஆதி ஆயன்*  அரங்கன் அந் தாமரைப்* 
பேதை மா மணவாளன்*  தன் பித்தனே 


673.   
எம் பரத்தர்*  அல்லாரொடும் கூடலன்*
உம்பர் வாழ்வை*  ஒன்றாகக் கருதலன்*
தம்பிரான் அமரர்க்கு*  அரங்க நகர்*
எம்பிரானுக்கு*  எழுமையும் பித்தனே


ஓம் நமோ நாராயணாய நம!!
கூரத்தாழ்வான்  திருவடிகளே சரணம்!!


அன்புடன்
அனுபிரேம்

2 comments:

  1. கூரத்தாழ்வான் பற்றிய விருவான பதிவுக்கு வாழ்த்துக்கள் அனு.

    ஓம் நமோ நாராயணாய நம!!
    கூரத்தாழ்வான் திருவடிகளே சரணம்!!

    ReplyDelete
  2. படங்கள் அழகு.....

    சிறப்பான தகவல்கள்.

    ReplyDelete