29 December 2019

திருப்பாவை – பாசுரம் 13

 'புள்ளின் வாய் கீண்டானை'

"நீ உறங்குவது போன்ற உன்னுடைய கள்ளத்தனத்தை விட்டு எழுந்து வா!"





புள்ளின்வாய்கீண்டானைப் பொல்லாஅரக்கனை *

கிள்ளிக்களைந்தானைக் கீர்த்திமைபாடிப்போய்ப் *

பிள்ளைகளெல்லாரும் பாவைக்களம்புக்கார் *

வெள்ளியெழுந்து வியாழ முறங்கிற்று *

புள்ளும்சிலம்பினகாண் போதரிக்கண்ணினாய்! * 

குள்ளக்குளிரக் குடைந்துநீராடாதே *

பள்ளிக்கிடத்தியோ? பாவாய்! நீநன்நாளால் *

கள்ளம்தவிர்ந்து கலந்தேலோரெம்பாவாய்.







பொருள்: 

பறவை உருக்கொண்டு வந்த பகாசுரனின் வாயைக்கிழித்துக் கொன்ற கண்ணன் ,

இலங்கேஸ்வரனின் பத்துத்தலைகளையும் கிள்ளியெறிந்து அவனை வதம் செய்த ராமனுடைய புகழைப் போற்றிப்பாடி,

ஊரிலுள்ள அனைத்துப் பெண்களும் நோன்பு நோற்க,

குறித்த இடத்தில் வந்து சேர்ந்துவிட்டனர்.

 (சுக்கிரன்) சுக்கிரக்கிரகம் உச்சிக்கு வந்து, வியாழன் (குரு கிரகம்) மறைந்து விட்டது.

இரையைத் தேடி செல்லும் காலைப்பறவைகளின் இறக்கைகள் உண்டாக்கும் சப்தம் உன் காதுகளில் விழவில்லையா?

வண்டுகள் மொய்க்கும் அழகிய தாமரை மலர் போன்ற கண்களையுடையவளே!

உள்ளமும் உடலும் குளிர, எங்களுடன் சேர்ந்து குளிர்ந்த நீரில் அமிழ்ந்து நீராடாமல் இப்படி படுக்கையில் கிடக்கலாமோ,

அழகிய பெண்ணே!

 இந்நன்னாளில் தூங்குவது போல பாவனை செய்வதை விடுத்து, எங்களுடன் கலந்து நோன்புக்கு வருவாயாக!






ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.



அன்புடன்
அனுபிரேம்

3 comments:

  1. வணக்கம் சகோதரி

    அழகான படிக்க எளிதான பாசுரப் பாடலை சுவைத்தேன்.அதற்கு அழகான விளக்கமும் கண்டு ரசித்தேன். மார்கழியில் தாங்கள் தொகுத்து வழங்கும் இதம் தரும் பக்திப் பதிவு பகிர்வினுக்கு மிக்க நன்றி.

    ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  2. பாசுரமும் விளக்கமும் சிறப்பு. முதல் படம் மிக அழகு. தொடரட்டும் மார்கழிப் பதிவுகள்.

    ReplyDelete
  3. பாடலும் விளக்கமும், படங்களும் அருமை அனு.

    ReplyDelete