12 August 2022

அருள்மிகு மஹாசம்பத் கௌரி உடனுறை நந்திகேஸ்வர சுவாமி திருக்கோவில், துறையூர்.

மகா சம்பத்கெளரி உடனுறை நந்திகேஸ்வரர் திருக்கோவில் .. 

இத்தலம்  திருச்சி மாவட்டம் துறையூரில் அமைந்துள்ளது.


மூலவர் - நந்தீஸ்வரர்

 அம்பாள் - நல்ல நாயகி 

தலவிருட்சம் - மகிழ மரம் 

தீர்த்தம்  - நந்தி தீர்த்தம்

மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக  எழுந்தருளியுள்ளார்.

 நந்தீஸ்வரர் சுயம்பு லிங்க மூர்த்தம்.  பெரிய திருமேனி அழகிய திருமேனி.

 இவருக்கு திருச்சிற்றம்பலமுடைய நாயனார் மற்றும் உலகு உய்ய வந்த சோளீஸ்வரமுடைய நாயனார் ஆகிய திருநாமங்கள் இருப்பதாக கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.

 அம்பாள் நல்ல நாயகி சதுர் புஜங்களுடன், ஜடா மகுடமும் கொண்ட அழகான திருவுருவம். கேட்டதெல்லாம் தரும் வரபிரசாதி.





ஒரு காலத்தில் நாகக்கன்னிகை ஒருத்தி பாதாள லோகத்திலிருந்து ஓர் சிவலிங்கம் கொணர்ந்து இப்பகுதியில் வில்வ மரத்தினடியில்  வைத்து பூஜித்து சென்றதும் அய்யனார், பிடாரி, இந்திரன் முதலானோர் அவரை பூஜித்துப் பேறு  பெற்றனர்.

வேணுவன  முனிவர் பலநாள் இங்கு தபசு இயற்றி இறைவனின் திருவருள் அடைந்ததால் இத்தலத்திற்கு வேணுபுரி  எனவும், இறைவனுக்கு வேணுபுரீஸ்வரர் எனவும், இத்தலத்தில் எழுந்தருளும் திருமாலுக்கு வேணுகோபால மூர்த்தி எனவும் பெயர் வழங்கலாயிற்று. 









 தல வரலாறு  

ஒரு காலத்தில் இப்பதியில், பச்சை மலை சாரலில் பராசுரன் என்னும் அரக்கன் புத்திரப் பேறு வேண்டி சிவபெருமானை நோக்கித் தவம் செய்ய, சிவபெருமான்   தோன்றி அவ்வாறே அருள அவ்வரக்கன் அவ்விடத்தில்  ஓர் பெரிய சிவலிங்கமும், நந்தியையும் பிரதிஷ்டை செய்து பூஜித்து சென்றான். 

பிறகு அவ்விடத்தில் இப்பெருமானைக் கண்ட திருமால் நந்தி தேவர்  வேடம் கொண்டு இறைவனைப் பூசிக்க, அரன்  தோன்றி முகுந்தா எம்மை பூசிக்கும் காரணம் யாது ? என்று வினவ, 
 திருமால், ஐயனே! ஆன்மாக்களுக்குத்  துன்பமளிக்கும் அசுரர்களை  ஒழிக்க அடியேனுக்கு கதாயுதம் ஒன்றை அருள வேண்டும் என்று வேண்டினார். அரனும்  அவ்வாறே அருளினார்.





பிற்காலத்தில் வில்வ மரத்தடியில் புதையுண்ட சிவலிங்கத்தை  அரசு புரிந்த சுந்தர சோழத்துறை என்ற  அரசன் வெளிக்கொணந்து பிரதிஷ்டை செய்து ஆலயம்  எழுப்பினார் என்பது வரலாறு கூறும் தகவல் ஆகும்.









இத்தலத்தில் வழிபட்டோர் - நாக கன்னிகை, பிடாதி, அய்யனார், இந்திரன், திருமால், வேணுவன முனிவர், பராசுரன்.
இத்தலத்தின்   வேறு பெயர்கள் - நந்திகேஸ்வரம், வேணுபுரி, தீர்த்தபுரி, துறைசையம்பதி.  

தேவாரத் திருத்தலங்கள் என்பதுபோல்,தேவார வைப்புத்தலங்கள் என சிவாலயங்கள் உண்டு.

இதனை வைப்புத்தலம் என சுருக்கமாக கூறுவர். இதில் நந்திகேச்சுரம் என்னும்  துறையூர் ஆலயமும் உள்ளது.




 துறையூரின் பிரதான சாலையில் அமைந்துள்ள மிக அற்புதமான, தெய்வீகமான தலம். மிக சிறப்பான வேலைப்பாடுகள் அமைந்த தூண்களும், மனதிற்கு இனிமையும், நிறைவையும் தரும் தலம்.

1. சிவபுராணம்

(சிவனது அநாதி முறைமையான பழமை)

திருப்பெருந்துறையில் அருளியது

(கலிவெண்பா)

திருச்சிற்றம்பலம்


எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்

மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்

உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற

மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்

ஐயா எனஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35


வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா

பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி

மெய் ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச் சுடரே

எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே

அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40


திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!


அன்புடன்,
அனுபிரேம் 💜💜💜


No comments:

Post a Comment