31 August 2022

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்....

                             அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்...


வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள்
நோக்கு உண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.



பூக்களைக் கொண்டு சிவந்த மேனியுடைய விநாயகரது 
பாதங்களைத் துதிப்பவர்க்கு வாக்குத் திறமையும், நல்ல மனமும், 
பெருமலரை உடைய லக்ஷ்மியின் கடாக்ஷமும், நோயற்ற வாழ்வும் 
கிடைக்கும்.


மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள  முக்குறுணிப் பிள்ளையார் ....



     மீனாட்சி அம்மன் சன்னிதியில் இருந்து சொக்கநாதராகிய சுந்தரேஸ்வரரைத் தரிசிக்கச் செல்லும் வழியில் தெற்குப் பார்த்த வண்ணம் எட்டு அடி உயர ‘முக்குறுணி விநாயகர்’ எழுந்தருளி உள்ளார். கி.பி.17-ஆம் நூற்றாண்டில் திருமலை நாயக்க மன்னருக்கான அரண்மனை கட்டுவதற்காக, வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் அருகே மண் எடுக்கப்பட்டது. அப்போது மண்ணுக்கடியில் இருந்து முக்குறுணி விநாயகர் கிடைத்ததாகவும், பின்னர் மன்னர் திருமலை நாயக்கர் முக்குறுணி விநாயகரை, மீனாட்சி அம்மன் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்ததாகவும் வரலாறு கூறுகிறது. 













ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி அன்று, முக்குறுணி விநாயகருக்கு முக்குறுணி அரிசியால் மிகப்பெரிய அளவில் கொழுக்கட்டை செய்து நைவேத்தியம் செய்வது வழக்கம். ‘குறுணி’ என்றால் 6 படியாகும். முக்குறுணி என்பதால், 18 படி பச்சரிசியால் கொழுக்கட்டை செய்து நைவேத்தியம் செய்கிறார்கள்.

 ஆலய மடப்பள்ளியில் கொழுக்கட்டைச் செய்யப்பட்டு, விநாயகர் சதுர்த்தி யன்று காலை 11 மணி அளவில் கரும்பில் பிள்ளையினைத் தொட்டில் கட்டி தூக்கி வருவதுபோல் கொழுக்கட்டையை எடுத்துவந்து படைத்து, பக்தர்களுக்கும் வினியோகிக்கிறார்கள்.




பாலும், தெளிதேனும், பாகும், பருப்பும் இவை 
நாலும்கலந்து உனக்கு நான் தருவேன் -கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியேநீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா.

-ஒளவையார்



விநாயகர் திருவடிகளே சரணம் ...



அன்புடன் ,
அனுபிரேம்

2 comments:

  1. வாழ்த்துகள் அனு!

    கீதா

    ReplyDelete
  2. எமது வாழ்த்துகளும்கூடி

    ReplyDelete