12 September 2022

ஒன்பதாம் திருநாள் --- பிட்டுக்கு மண் சுமந்த பெருமான் ....

   மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் முக்கிய திருவிழாவான ஆவணி மூலத் திருவிழாவின்  கொடியேற்ற காட்சிகள் ... 

 முதல்நாள் ---கருங்குருவிக்கு உபதேசம் செய்த படலம்.

இரண்டாம் நாள் --- நாரைக்கு முக்தி கொடுத்த லீலை.

மூன்றாம்  நாள் ---மாணிக்கம் விற்ற லீலை.

 நான்காம் நாள் ---தருமிக்குப் பொற்கிழி அளித்த லீலை.

ஐந்தாம் நாள் -- உலவாக்கோட்டை அருளிய லீலை

 ஆறாம் நாள் --- பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை

ஏழாம் நாள் --- வளையல் விற்ற லீலை

எட்டாம் நாள் ----நரியைப் பரியாக்கிய லீலை.

ஒன்பதாம் நாள் --- பிட்டுக்கு மண் சுமந்த பெருமான் 






திருவிளையாடல் புராணம்.


திருவிளையாடற்புராணம் மிக விரிவாக மாணிக்க வாசகர் அருள் வரலாற்றை,

௧ . வாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம்

௨ . நரி பரியாக்கிய படலம்

௩ . பரி நரியாக்கிய படலம்

௪ . மண் சுமந்த படலம்

என்ற நான்கு படலங்கள் வாயிலாக பரஞ்சோதி முனிவர் மிக விரிவாகக் கூறியுள்ளார். மாணிக்கவாசகரின் முழுமையான வரலாற்றை உணர்ந்து கொள்வதற்குத் திருவிளையாடற் புராணமே நமக்குத் துணை நிற்கிறது.

வாதவூரர் கொணர்வித்த பரிகள் நரிகளாக மாற, பாண்டியனின் வீரர்கள் மணிவாசகரைக் கடற்கரையின் சுடு மணலில் இட்டுத் தண்டிக்கின்றனர். மணிவாசகரைத் தாம் ஆட்கொண்டருளிய நிகழ்வை உலகறியச் செய்யவும், வந்தி என்னும் மூதாட்டிக்குச் சிவபதம் அருளவும் ஆலவாய் வள்ளல் திருவுளம் பற்றுகிறார். வைகை நதி பெருவெள்ளமாய்க் கரையைக் கடக்கிறது.

அவர் ஒரு மூதாட்டி. வந்தியம்மை என்ற பெயரைக் கொண்டவர். ஆயிரம் பிறைகளுக்கும் மேல் கண்டவர். தளர்ந்த உடல். கூன் விழுந்திருந்தாலும் தனது காலிலேயே நிற்க வேண்டும் என்ற மனஉறுதி. அதனால் தானே உழைத்து இறைவனுக்கும் பங்கு கொடுத்து வாழ்ந்தார்.

அவரது பக்தியையும் மாணிக்கவாசகரின் பெருமையையும் உலகத்துக்கு உணர்த்த விரும்பிய சிவப்பரம்பொருள் , வைகை நதியைப் பெருக்கெடுக்க வைத்தான். வைகையும் அணைகளை உடைத்துக் கொண்டு மதுரையை அழிக்கப்புகுந்தது.

நதியின் அணைகளை மீண்டும் புதுப்பித்து உயர்த்தாவிட்டால் பேரழிவு ஏற்பட்டு விடும் என்பதைக் கண்ட மன்னன் அரிமர்த்தனபாண்டியன் அமைச்சர்களுடன் ஆலோசித்து நதியின் கரைகளை செப்பனிட உத்தரவு பிறப்பித்தான்.

வீட்டுக்கு ஒருவர் கரையை அடைக்க வேண்டும் என்ற ஆணையின் கீழ் வந்தியம்மைக்கும் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டது.

வந்தியம்மை பிட்டு விற்றுப் பிழைத்தவர்.

 சிவப்பரம்பொருள் மீது மிகுந்த பக்தி உடையவர் என்பதால் அவிக்கும் முதல் பிட்டை மதுரை சுந்தரேஸ்வரனுக்கு அர்ப்பணம் செய்வார். சிவனடியார் ஒருவரைத் தேடிக் கண்டு பிடித்து பிரசாதமாக அதனைக் கொடுத்து விடுவார். சிவனடியார்களிடத்தில் சிவனையே கண்டவர் அவர்.

பிட்டை விற்று காலம் ஓட்டிக் கொண்டிருந்த வந்தியம்மையையின் உடல் நிலையையும் கவனத்தில் எடுக்காது ஆணை பிறப்பிக்கப்பட்டு விட்டதால், நதியின் கரையை அடைக்க அவர் கூலிக்கு ஆள் தேடினார்.

எவருமே கிடைக்கவில்லை. மன்னின் தண்டனைக்கு ஆளாக வேண்டி வருமே என்று வந்தியம்மை கலங்கினார். 

சுந்தரேஸ்வரை மனம் உருக வேண்டினார். 

தினமும் பிட்டை நைவேத்தியம் செய்து தொழுது நின்ற பக்தைக்கு உதவிட சொக்கநாதப் பெருமான் திருவுளம் கொண்டார்.

கந்தல் துணியுடன் வந்தியம்மையை நாடி வந்தார். “கூலிக்கு ஆள் தேடுவதாக அறிந்தேன். அதனால் வந்தேன்” என்றார். 

வந்தியம்மைக்கு பெரும் மகிழ்ச்சி. 

எனினும் கூலி கொடுப்பதற்கு தன்னிடம் பணம் இல்லையே என்று வருந்திய அவர், கூலியாக பிட்டுத்தான் தரமுடியும் என்றார்.

கூலியாளாக வந்த சிவப்பரம்பொருளும் இணங்கினார். சுந்தரேஸ்வரருக்கு நிவேதனம் செய்த பிட்டை வந்தியம்மை அளிக்க அதனை ரசித்துச் சாப்பிட்ட இறைவர் தான் கொண்டு வந்திருந்த மண்வெட்டி கூடையுடன் வந்தியம்மைக்கென ஒதுக்கப்பட்ட இடத்தை அடைந்தார்.

சுறுசுறுப்பாக மண்வெட்டினார். 

ஆனால் பின்னர் களைப்படைந்தவர் போன்று அருகில் இருந்த மர நிழலில் ஓய்வு எடுத்தார். வந்தியின் வீட்டுக்கு மீண்டும் சென்று பிட்டு கேட்டு உண்டார். மற்றவர்களுடனும் பங்கிட்டுக் கொண்டார்.

மண்ணை கூடையில் அள்ளுவார். கூடையைத் தலையில் வைக்கத் தூக்கும் போது பாரம் தாங்காமல் அதனை கீழே தவற விடுவது போலப் போட்டு நிற்பார்.

 ஆடுவார்.

 பாடுவார். 

ஆனால் கரையை அடைக்கும் பணியைச் செய்யவே இல்லை.

அதனை அவதானித்த கண்காணிப்பாளர் கூலியாளாகிய சிவப்பரம்பொருளைக் கண்டித்தார்.அந்தச் சமயம் பார்த்து அரிமர்த்தன பாண்டியன் அங்கு வந்து விட்டான். 

மன்னன் வருவதைக் கண்ட சுந்தரேஸ்வரர் எதுவும் அறியாதவர் போன்று பாசாங்கு செய்து மீண்டும் மரத்தடிக்குச் சென்று நித்திரை செய்வது போன்று நடித்தார். 

வந்தியம்மையின் வேளையாள் தூங்குவதைக் கண்ட மன்னன் ஆத்திரமடைந்தான்.

வீரர்கள் அவரை எழுப்ப முயன்றனர். 

ஆனால் கூளியாளாக இருந்த சிவன் ஒரு சிறிதும் அசைந்து கொடுக்கவில்லை. அதனால் மேலும் சீற்றம் அடைந்த மன்னன் பிரம்பினால் அடித்தான். அந்த அடி சிவபெருமானைத் தவிர எல்லோரது முதுகிலும் விழுந்தது.

தான் அடித்த அடி தன்மீதே விழ மன்னன் அதிர்ச்சி அடைந்தான்.

நடந்தது எதுவும் தெரியாதது போன்று எழுந்த கூலியாளான சிவப்பரம்பொருள் கூடையில் ஒரு தடவை மண் எடுத்து வைகைக் கரையில் போட்டார். கரை அடைக்கப்பட்டது. 

வெள்ளமும் கட்டுக்கடங்கியது.

வேளையாளாக வந்த சிவனாரும் மறைந்தார். தமது சுயரூபத்துடன் காட்சி அளித்தார். 

“மன்னா, வந்தியம்மைக்கு உதவ வந்து பிட்டுக்கு மண் சுமந்தேன். அறவழியில் வந்த உனது செல்வத்தை மாணிக்கவாசகன் எனக்காகச் செலவிட்டான். அதனை நான் மனம் உவந்து ஏற்றுக் கொண்டேன். நரிகளை குதிரைகளாக ஆக்கி லீலை புரிந்ததும் நானே” என்று கூறி மறைந்தார்.

இந்த அற்புதங்கள் நிகழ்வதற்குக் காரணமான வந்தியம்மையைத் தேடி மன்னன் சென்ற போது சிவகணங்கள் அவரைத் தங்களுடன் அழைத்துச் செல்வதைக் கண்டான்.

குதிரை வாங்கக் கொடுத்த பெருநிதியை கோவில் கட்ட செலவழித்து விட்டார் என்ற கோபத்தில் சிறையில் அடைத்த மாணிக்கவாசகரைக் கண்டு மன்னிப்புக் கோர மன்னன் அவரைத் தேடிச் சென்றான்.

மாணிக்கவாசகர் அங்கில்லை என்பதைக் கண்டதும் கோவிலுக்குச் சென்றான். 

சுந்தரேஸ்வரப் பெருமான் முன் நிஷ்டையில் இருந்த மாணிக்கவாசகரிடம் மன்னிப்புக் கேட்டான். மீண்டும் அமைச்சர் பொறுப்பினை ஏற்க வேண்டும் என வேண்டினான். மாணிக்கவாசகர் அதனை ஏற்காது, தனது யாத்திரையைத் தொடர்ந்தார்.

வந்தியம்மைக்கு சிவபெருமான் மோட்ச அருள் புரிந்த இடத்தில் இன்று பிட்டு சொக்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது. 

வருடம் தோறும் ஆவணி மாதம் மூல நட்சத்திர தினத்தில் பிட்டுத்தோப்பில் எழுந்தருளியுள்ள சொக்கநாதருக்குப் பிட்டுத் திருவிழா நடைபெறும். மதுரை சுந்தரேஸ்வரர், மீனாட்சியம்மன், பிரியாவிடை நாயகி ஆகியோர் அன்றைய தினம் எழுந்தருளுவார்கள்.

பிட்டுத் திருவிழாவைக் கண்டு களிக்க திருப்பரங்குன்றத்து முருகப்பெருமான் தெய்வானையுடன் வருவார். விசேட அம்சமாக மாணிக்கவாசகரின் வரவும் இடம்பெறும்.

பிட்டுக்கு மண் சுமந்த வைபவம் நிகழும் போது பக்தர்கள் சொக்கநாதர், பாண்டிய மன்னன் அரிமர்த்தன பாண்டியன், வந்தியம்மை போன்று வேடமிட்டு சிவபெருமானாரின் திருவிளையாடலை கூடியிருப்பவர்களுக்கு நினைவுபடுத்துவார்கள்.

பிட்டுத்தோப்பில் எழுந்தருளியிருக்கும் சொக்கநாதருக்கு பிட்டுத் திருவிழா நடத்தப்படும் தினத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் கோவில் இரண்டும் நடைகள் சாத்தப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.













மாலை -  சுவாமி, அம்பாள்- வெள்ளி ரிஷபவாகனத்தில் 










மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்

எட்டாம் திருமுறை


பண் சுமந்த பாடற் பரிசு படைத்தருளும்

பெண் சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான்

விண் சுமந்த கீர்த்தி வியன் மண்டலத்து ஈசன்

கண் சுமந்த நெற்றிக் கடவுள் கலி மதுரை

மண் சுமந்து கூலி கொண்டு அக்கோலால் மொத்துண்டு

புண் சுமந்த பொன் மேனி பாடுதுங்கான் அம்மானாய்


பொழிப்புரை

பண்களைக் கொண்ட பாடல்களை மகிழ்ந்து ஏற்று வரமருளும் பெண்பாகனும், திருப்பெருந்துறையை உடையவனும், தேவலோகத்தில் உள்ளவர்களும் ஏற்றிப் போற்றும் சிறப்பினைக் கொண்டவனும், மண்ணுலகத்தின் தலைவனும், நெற்றிக் கண்ணனும் ஆகிய கடவுள், மதுரையில் மண் சுமந்து, பாண்டிய மன்னன் கைப் பிரம்படியினால் புண்பட்ட பொன் திருமேனியைப் புகழ்ந்து பாடுவோம் என்கிறார் மாணிக்கவாசகர்.

மீனாட்சி அம்மன்  திருவடிகளே சரணம் ....



தொடரும் ...


அன்புடன்
அனுபிரேம் 💓💓💓

No comments:

Post a Comment