07 September 2022

வாமன ஜெயந்தி...

இன்று வாமன ஜெயந்தி...

ஆவணி , சுக்கில பட்ச துவாதசி திதியில், அதிதி- கஸ்யபரிடத்தில் 

பிரகலாதனின் பேரன் மகாபலியின் ஆணவத்தை அடக்க பெருமாள் எடுத்த அவதாரம் - வாமன அவதாரம்.







 சுக்கில பட்ச த்வாதசி திதியில், அதிதி- கஸ்யபரிடத்தில் பலியை அடக்குவதற்காக ஒளி பொருந்திய வாமனனாகத் தோன்றினார்.

 பிரகலாதனின் பேரன் மகாபலியின் ஆணவத்தை அடக்க பெருமாள் எடுத்த குள்ள வடிவம் வாமன அவதாரம். தன் அடியில் மூவுலகங்களையும் அளந்து திருவிக்ரமனாக வானுக்கும் மண்ணுக்கும் உயர்ந்து நின்றார்.




           இந்திரனுடன் போர் செய்து பலி தோற்றான். மீண்டும் பலம் பெற்று எப்படியாவது தேவர்களை ஜெயிக்க வேண்டும் என பிருகு வம்சத்தில் தோன்றிய சுக்ராச்சாரியார் முதலிய அந்தணர்களை அணுகி ஆலோசனை செய்தான். அவர்கள் பலிச் சக்கரவர்த்தியிடம் விக்ரஜித் என்ற ஒரு பெரிய வேள்வியை நடத்தும்படி உபதேசம் செய்தார்கள். அவ்வாறு அவர் வேள்வி செய்யவே அதில் இருந்து ஓர் பொன் ரதம் வந்தது. அந்த ரதத்தில் கணக்கற்ற வில்லும், அம்பும், கவசமும் இருந்தன.

             அச்சமயம் பலியினுடைய தாத்தாவாகிய பிரகலாதன் அவன் முன் தோன்றி அவனுக்கு என்றும் வாடாத தாமரை மலர் மாலையைக் கொடுத்தார். சுக்கிராச்சாரியார் ஒரு சங்கைக் கொடுத்தார். பலிச்சக்கரவர்த்தி வேள்விக்கு வந்திருந்த அந்தணர்களை வணங்கினான். சுக்கிராச்சாரியாருடைய ஆசியையும் பெற்றான். 

இரதத்தில் ஏறினான்.

 கவசத்தைத் தரித்துக் கொண்டான்.

 ஒரு கையில் வில்லையும், மறுகையில் சங்கையும் தாங்கிக் கொண்டான். அசுர சேனைகள் புடைசூழ தேவலோகம் சென்றான். அமரர் உலகத் தலைநகர் ஆன அமராவதியை முற்றுகையிட்டான். அமராவதிப் பட்டணம் தனக்கு உடைமை ஆயிற்று என்ற உற்சாகத்தில் அசுரப்படைகளுடன் பலி இந்திரப்பட்டணத்தைத் தாக்கினான். 

இந்திரனுக்கு அச்சம் ஏற்பட்டது. உடனே குல பிரகஸ்பதியாகிய வியாழ பகவானைப் கலந்து ஆலோசித்தான்.

         தேவேந்திரன் பிரகஸ்பதியிடம், குருபகவானே! பலி முன்பைவிட அதிக பராக்கிரமத்துடன் அசுர சேனைகளைத் திரட்டிக் கொண்டு நம்மை முற்றுகையிட்டிருக்கிறான். அவன் செய்த வேள்வியின் ஓம குண்டத்திலிருந்து தோன்றிய ரதத்தில் ஏறி வந்திருப்பதைப் பார்த்தால் நாம் அவனை ஜெயிக்க முடியாது என்றார்.

           பலிச் சக்கரவர்த்தியை இந்த நிலையில் மோதுவது என்பது உகந்தது அல்ல. அவன் பிருகு வம்சத்து மகரிஷியின் பரிபூரண ஆசியைப் பெற்று வந்திருக்கிறான். நீங்கள் எல்லோரும் சுவர்க்கத்தை விட்டுப் போய் விடுங்கள். அவனுக்கு எப்படியாவது சொர்க்கத்தை தான் கட்டி ஆள வேண்டும் என்ற ஆசை. அந்தக் குறிக்கோளை அவன் அடைவது உறுதி. இருந்தாலும் காலப்போக்கில் அவனே தன்னை அழித்துக்கொள்வான். 

எந்த மகரிஷிகளினால் அளப்பரிய பலத்தைப் பெற்றானோ அந்த மகரிஷிகளுக்கு அர்ப்பணம் செய்து, அவர்களாலேயே அவன் அழிவைத் தேடிக் கொள்வான். 

கவலை வேண்டாம். நீயும், உன் ஆட்களும் ஸ்ரீமந்நாராயணனைத் தேடி சரண் அடையுங்கள். அவர்தான் பலிக்கு அழிவைத் தரக்கூடியவர் என்று பிரகஸ்பதி அறிவுரை செய்தார்.

           இந்திரன் தேவர்களுடன் தேவலோகத்தை விட்டு வெளியேறினான். அசுரருக்குத் தெரியாத இடம் ஒன்றில் போய் மறைந்து கொண்டான். பலி இதனால் தேவலோகத்தை எளிதில் கைப்பற்றினான். அமராவதியிலேயே தங்கி மூன்று உலகங்களையும் கட்டி ஆண்டான். தவிர அந்தணர்களும் மகரிஷிகளும் தத்தம் கர்மாவை குறைவின்றி நடத்திக் கொள்ளவும் பலி வழி செய்து கொடுத்தான். அதனால் ஜீவராசிகளும் அவனைப் போற்றிப் புகழ்ந்தன.

           பிருகு வம்ச அந்தணர்கள் தங்கள் சீடனுக்கு வந்த இந்திர பதவியைப் பார்த்து மகிழ்ந்தனர். அவன் இந்தப் பதவியில் இருந்து நழுவாமல் இருக்கும்படியாக நூறு அசுவமேத யாகங்களைச் செய்யுமாறு அவனிடம் கூறினார்கள். பலியும் அசுவமேத யாகம் செய்யத் தொடங்கினான். இதனால் மூவுலகிலும் இவன் புகழ் ஓங்கி நின்றது.

    தேவர்கள் தட்சன் மகளாகிய அதிதி என்பவளுக்கும், கச்யப முனிவருக்கும் பிறந்தவர்கள். இதனால் தன் மக்களுக்கு ஏற்பட்ட, இழி நிலை வாழ்க்கையை எண்ணி அதிதி மிகவும் வருந்தினாள். கஷ்யப்பரை நோக்கி, தேவர்களும் அசுரர்களும் உமது புத்திரர்கள். தேவலோகத்தில் எனது புத்திரர்களான தேவர்கள் பதவி, சொத்து, சுகம் அனைத்தையும் இழந்து தவிக்கிறார்கள். அவர்கள் மீண்டும் பழைய நிலையை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாகக் கூறுங்கள் என்றார்.

           நீ பரந்தாமனை தியானம் செய். அவர் உனக்கு வழியைத் தந்தருள்வார். பரந்தாமனை அடைய பயோவ் விரதம் எனப்படும் விரதத்தை பங்குனி மாதம் சுக்லபட்சம் பிரதமை திதி வரும் நாளில் ஆரம்பித்து தொடர்ந்து பன்னிரெண்டு நாள்கள் கடைபிடித்து ஸ்ரீ ஹரி நாராயணனை சந்தோஷப்படுத்துவாயாக என்றார் கச்யபர். அதிதியும் அதை மேற்கொண்டாள். விரதத்தை தவறாமல் கடைபிடித்தாள். கடைசி நாள் அன்று பகவான் சங்கு சக்ரதாரியாக அவளுக்கு காட்சி கொடுத்தார். அப்போது அவள் மனம் மிக மகிழ்ந்தது.

    அதிதி தேவியே! உன் விரதத்தை கண்டு மகிழ்ந்தேன். இப்போது உன் தேவகுமாரர்கள் பதவியிழந்து, நின்கின்றனர். அவர்களை மீண்டும் சொர்க்கலோக ஆட்சிக்கு ஆளாக்க வேண்டும். உன் புதல்வன் தேவேந்திரன் மீண்டும் அமராவதி நகரில் ஆட்சி செய்ய வேண்டும் என நீ ஆசைப்படுகிறாய். ஆனால் தற்சமயம் அது இயலாது. அசுரர்கள் யாரும் வெல்ல முடியாதபடி பராக்கிரமம் பெற்றிருக்கிறார்கள். 

அவர்கள் நல்ல காலம், அந்தணர்கள் பராமரிப்பில் ஆட்சி நடத்தி வருகிறார்கள். 

எனவே போர் செய்து பயன்பெற முடியாது. ஆயினும் நீ என்னை வழிபட்டதற்குரிய பலன் உனக்கு நிச்சயம் உண்டு. ஆகவே உன் விருப்பத்தை வேறொரு விதத்தில் நிறைவேற்றித் தருகிறேன்.

 நானே உனக்குப் புத்திரனாகப் பிறக்கவேண்டும் என்று மனத்திலே எண்ணி தியானம் செய். அதன்படியே பிறந்து தேவர்களை நான் காப்பாற்றுகிறேன் உன் ஆசை நிறைவேறும்.

அதிதியும், கச்யபரும் பல மகரிஷிகளை அழைத்து வரச்செய்து வைதீக கர்மாக்களைச் செய்து வாமனன் என்று பெயரிட்டனர்.




           மகரிஷிகள் பெருமானுக்கு உபநயனம் செய்து வைத்தார்கள். அச்சமயம் கதிரவனே அவருக்கு காயத்ரி மந்திரத்தை உபதேசித்தான். பிரகஸ்பதி பிரம்ம சூத்திரத்தை (பூணூலை) கொடுத்தார். கச்யபர் முஞ்சியைக் (தர்ப்பை அரை ஞாண் கயிறு) கொடுத்தார். பூமாதேவி கிருஷ்ணா ஜனத்தை (மான் தோலை) கொடுத்தாளஅதிதியும், கச்யபரும் பல மகரிஷிகளை அழைத்து வரச்செய்து வைதீக கர்மாக்களைச் செய்து வாமனன் என்று பெயரிட்டனர்.

           மகரிஷிகள் பெருமானுக்கு உபநயனம் செய்து வைத்தார்கள். அச்சமயம் கதிரவனே அவருக்கு காயத்ரி மந்திரத்தை உபதேசித்தான். பிரகஸ்பதி பிரம்ம சூத்திரத்தை (பூணூலை) கொடுத்தார். கச்யபர் முஞ்சியைக் (தர்ப்பை அரை ஞாண் கயிறு) கொடுத்தார். பூமாதேவி கிருஷ்ணா ஜனத்தை (மான் தோலை) கொடுத்தாள். சந்திரன் தண்டத்தை அளித்தான். அதிதி கௌபீனம் கொடுத்தாள். பிரம்மா கமண்டலம் வழங்கினார். குபேரன் பிச்சை பாத்திரம் கொடுத்தான். பார்வதி தேவி அதில் முதல் பிச்சை ஈந்தாள்.

            இவ்வாறு நிகரற்ற பேரும் புகழும் பெற்ற அந்தணச் சிறுவன் தனது வைதீக கர்மாக்களைத் தவறாது செய்து வந்தான். நர்மதா நதியின் வடகரையில் பலிச்சக்கரவர்த்தி ஒரு பெரிய யாகசாலை அமைத்தான். அந்த வேள்விக்கு மகரிஷிகளை எல்லாம் வரவழைத்திருந்தான். வாமனர் தன் பெற்றோரிடம் அந்த யாக சாலைக்குத் தான் போக வேண்டும் என்று அனுமதி கேட்டார். அவர்கள் அனுமதி தந்து ஆசி கூறி வழியனுப்பி வைத்தனர்.




           சுவாமி! தாங்கள் இந்த யாகசாலைக்கு எழுந்தருளியது கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். தங்களுக்கு ஏதாவது தேவை என்றால் அதை அடியேன் தர சித்தமாக இருக்கிறேன். தாங்கள் தம் தேவைகளைப் பெற்று மேலும் என்னை கிருதார்த்தன் ஆக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். 

பலியின் பிரார்த்தனையைக் கேட்ட பகவான், அசுரேந்திரா! நீயோ பரம பாகவதனான பிரகலாதன் வம்சத்தில் பிறந்தவன். அதனால் உனக்குக் கிடைக்காத சம்பத்தே இல்லை. மேலும் நீயோ மகரிஷிகளை மதித்து அவர்கள் வார்த்தைகளைத் தட்டாமல் கேட்டு அவர்கள் வழி நடக்கிறாய். அந்தணர்களுக்கு ஆவன செய்து ஆதரிக்கிறாய். இப்படிப்பட்ட உனக்கு என்ன குறை இருக்கப் போகிறது?




மூன்றடி நிலம்


           நான் உன்னிடம் விரும்புவது எல்லாம் எனது கால் அடியினால் மூன்றடி நிலமே. அதற்கு மேலே எனக்கு எதுவும் தேவை இல்லை. ஆக எனக்குத்தேவையான அந்த மூன்றடி நிலத்தைப் பெற்றுப் போகவே வந்திருக்கிறேன் என்றார்.

    சுவாமி! தாங்களோ மிகவும் இளைய வயதினராகத் திகழ்கிறீர்.

 பிரம்மச்சர்யத்தைக் கடைபிடிக்கும் உங்களுக்குப் பகவானைத் தியானிக்கச் சௌகர்யமாக நிறைய மலர்கள் பூத்து குலுங்கும் பூந்தோட்டத்துடன் கூடிய பெரிய நிலத்தையே தருகிறேன், என்றான் பலிச்சக்கரவர்த்தி. 

அசுர சிரேஷ்டனே! நீ கூறிய வார்த்தைகளால் நான் மிகவும் திருப்தி பெற்றேன். ஆனால் எனக்கு நான் கேட்கும் மூன்றடி நிலம் மட்டும் போதும், வேறெதும் தேவையில்லை என்றார்.

           பலிச்சக்கரவர்த்தி அவரை வணங்கி தங்கள் விருப்பப்படியே தருகிறேன் என்று சொல்லிவிட்டு வாமனருக்கு தானம் செய்வதற்கு நீர் நிறைந்திருக்கும் கிண்டியை கையில் எடுத்தான்.




          அந்நேரம் இவற்றையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த சுக்கிராச்சாரியார், பலியே! இதோ இங்கே குள்ளமான உருவில் வந்து நிற்பது ஸ்ரீமந்நாராயணனே. அவர் தேவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் இங்கு வந்திருக்கிறார். அவசரப்படாமல் சற்று நிதானமாகவே செய். நீ செய்யப் போகும் காரியத்தால் உனக்கு மட்டும் அல்ல, உன்னைச் சேர்ந்தவர்களுக்கும் உன்னை நம்பி இருக்கிற அசுரர்கள் அனைவருக்கும் அழிவு வந்திருக்கிறது என்பதை மறந்துவிடாதே.வாக்கு கொடுத்த விட்டோமே, அதை நிறைவேற்ற வேண்டுமே என்ற தயக்கம் வேண்டாம். ஒரு சில இக்கட்டான நிலையில் வாக்குத் தவறுவதை சாஸ்திரங்கள் சம்மதிக்கின்றன.

           அதுமட்டுமல்ல ஒருவர் பிரம்மச்சர்ய விரதம் பூண்டு பிறர் பொருளுக்கு ஆசைப்படும் போது நீ பொய் பேசுவது தவறில்லை. ஆகவே உன் வாக்குறுதியை மறந்து விடுவாயாக என்று விளக்கமாக சுக்கிராச்சாரியார் எடுத்து உரைத்தார்.

           ஆச்சாரியாரே! நான் வாக்குத் தவறினால் பரமபாகவதனான என் பாட்டன் பிரகலாதனுக்கு அல்லவா இழிவு. தானம் செய்வதினால் நான் அனைத்தையும் இழந்தாலும் சரி, ஓர் அந்தணனுக்கு அளித்த பிராமணத்தை ஒரு போதும் நான் மீற மாட்டேன். வந்திருப்பது பரந்தாமனே என்று சொன்னீர்கள். பகவானே வந்து யாசிக்கிறான் என்றால் அது என் குலத்துக்கு ஏற்பட்ட பெருமையாகவே நினைக்கிறேன். அவருக்குத் தானம் கொடுப்பதால் வரும் விளைவு எதுவாயினும் நான் ஏற்றுக் கொள்ள சித்தமாகி விட்டேன். நான் கொடுத்த வாக்குறுதியை மீறப் போவதில்லை! என்றான் பலி.

           பலி தன் மனைவியை அழைத்து வாமனருக்கு நீர் வார்த்துக் கொடுக்கத் தயார் ஆனான். பிறகு வாமனருடைய திருப்பாதமலர்களைக் கழுவுவதற்கு ஒரு ஆசனத்தில் அமர்த்தினான். பலியின் மனைவி விந்தியாவளி நீர் முகர்ந்து கொடுத்தாள்.

           நிலத்தை தானம் செய்யும் பொருட்டு தாரை வார்த்துக் கொடுப்பதற்காக கிண்டிச் செம்பை எடுத்தான். அது சமயம் தன் அறிவுரையை ஏற்காமல் பலி தாரை வார்த்துக் கொடுத்து ஏமாந்து விடப் போகிறானே என்று எண்ணிய சுக்கிராச்சாரியார் வண்டு உருவெடுத்து செம்பினுள் நுழைந்து நீர்த்துவாரத்தை அடைத்துக் கொண்டார். 

செம்பிலிருந்து நீர் வரவில்லை. 

இதை உணர்ந்த பகவான் அறுகம்புல் ஒன்றினால் துவாரத்தில் குத்தினார். அந்த அறுகம்புல் துவாரத்தை அடைத்துக் கொண்டிருந்த சுக்கிராச்சாரியாரின் கண்களில் ஒன்றைக் குருடாக்கியது. கிண்டிச் செம்பிலிருந்து நீர் வெளி வந்தது. மனைவி நீர் வார்க்க மகாபலி தாரை வார்த்தான்.

     அசுரகுரு,சுக்ராச்சாரியார் மகாபலி தானம் கொடுப்பதை தடுத்ததிற்க்கு, பகவான் பதில் ஏதும் சொல்லில்லை,மாறாக தான் செய்ய வேண்டியதைதான் செய்தார். பிறர், தானம் கொடுப்பதை தடுப்பது இறைவனுக்கே பொருக்காது.


உலகளந்த பெருமாள் (திருவிக்ரமன்)

     அந்தண குலத் திலகமே! உம் காலடி அளவில் மூன்று அடிநிலங்களை உமக்குத் தானம் செய்கிறேன்! என்று தெரிவித்தான். வாமன மூர்த்தியாகிய பகவான் முகம் மலர்ந்தபடி தன் இருக்கையிலிருந்து எழுந்தார். 

அப்போது அவருடைய உருவம் வானளாவி நின்றது. 

அவருடைய திருமேனி எங்கும் நீக்கமற நிறைந்து நின்றது. 

விண்ணும், மண்ணும், திசைகளும், மற்ற உலகங்களும் ஏழுகடலும் அத்தனையும் அவரிடம் அடங்கி இருந்தன. இதைக்கண்ட அசுரேந்திரன் பிரமித்து நின்றான். 

இத்துடன் ஸ்ரீஹரியாகிய வாமனரின் ஒரு கையில் சுதர்சனச் சக்கரம் சுழன்றது. மற்றொரு கையில் சாரங்கம் என்ற வில்லும், இன்னொரு கையில் கௌமோதகி என்ற கதையும் வேறொரு கையில் வித்யாதரம் என்ற வாளும் பிடித்து நின்றிருந்தார். 




தேவர்களும், முனிவர்களும் பகவானுடைய திவ்ய தரிசனத்தைக் கண்டு அவரைத் துதி பாடி வணங்கினார்கள். வானளாவ நின்ற வாமனர் ஒரு காலால் பூமியை அளந்தார். மற்றொரு காலால் வானத்தை அளந்தார்.

     இரண்டாவது அடியால் விண்ணுலகை அளக்கும்போது அந்த பாதத்திற்கு பிரும்மா அபிஷேகம் செய்த தண்ணீரே ஆகாச கங்கை நதி ஆயிற்று.




       இஷ்ஷவாகு வம்சத்து ஸ்ரீ ராமபிரானின் முன்னோரான பகீரதன் என்ற அரசன், தன்னுடைய முன்னோர்களின் சாபத்தைப் போக்கி அவர்களது ஆத்மா முக்தி அடைய, கங்கை நதியை பூமிக்கு கொண்டு வந்தான். கங்கையின் வேகத்தை தணிக்க பரம்மசிவனை தியானித்து தபமிருக்க அவர் அதை தன்னுடைய ஜடையில் தாங்கி அதை ஆறு பிரிவாகப் பிரித்து, ஆறு நதியாக பூமிக்கு அனுப்பினாராம்.

      மீண்டும் தன் உடலைக் குறுக்கி வாமனராக நின்று, மூன்றாவது அடி வைக்க இடம் ஏது? என்று வினவினார்.




மூன்றாம் அடிக்குத் என் சிரசின் மீது தாங்கள் காலடியை வைக்கலாம். அதனால் ஏற்படும் எந்த விளைவுகளையும் நான் ஏற்றுக் கொள்ள சித்தமாகவே இருக்கிறேன். இச்சமயம் வருண பாசத்தால் பலி கட்டுப்பட்டான். அங்கே பிரகலாதன் வந்தான். பலி தன் தலையைத் தாழ்த்தி தன் பாட்டனாகிய பிரகலாதனுக்கு அஞ்சலி செலுத்தினான்.

    பிரகலாதன் பேரன் பலிக்கு ஆசி கூறிவிட்டு மகாவிஷ்ணுவிடம், பிரபோ மகாபலிக்கு இந்திரபதவியை அளித்தவரும் தாங்களே, இப்போது அதைப் பரித்துக் கொண்டதும் தாங்களே. இவை அனைத்தும் உங்கள் திருவிளையாடல்கள். 

அனைத்தும் நன்மைக்கே என்பது எனது கொள்கை.

 மகாபலியின் மனைவியும் அறிவிலிகளாக இருந்தத் தங்களைக் காத்தருள வேண்டினாள். பிரம்மாவும், தயாநிதியே! தாங்கள் கருணை கூர்ந்து பலியின் விஷயத்தில் அவனுக்குப் பரிபூரண அனுக்கிரகத்தைத் தந்தருள பிரார்த்திக்கிறேன்.

         பகவான் திருவாய் மலர்ந்து பிரம்மதேவனே! என்னைச் சரணடைந்தவர்களை நான் ஒருபோதும் கைவிட மாட்டேன். இங்கே பலி தான் செய்யப்போகும் தான தர்மத்தால் தனக்குப் பதவி பறிபோகும், துன்பம் வரும் என்று அவனுடைய குலகுரு சுக்கிராச்சாரியார் சொல்லியும், தடுத்து நிறுத்த முயன்றும் பலி தன் உறுதியைக் கைவிடவில்லை. எனது மாயைகளைத் தேவர்களும், முனிவர்களும்கூடத் தாண்டுவது அரிது. ஆக அவர்களாலும் அடைய முடியாத சிரேயஸ்ஸை பலி அடைந்து விட்டான்.

        தசாவதாரங்களில் உத்தம அவதாரம் என்ற ஏற்றம் பெற்றது வாமன அவதாரம். மற்ற அவதாரங்களில் அசுரர்களை வதம் செய்யும் பகவான், இதில் மட்டும் யாரையும் கொல்லவில்லை. மாறாக, மகாபலியின் ஆணவத்தைப் போக்கி பிறவாநிலை அளித்தார்.

           நெடுமால் என்று பெயருக்கேற்ப நெடியவனாக வளர்ந்து மண்ணுலகையும், விண்ணுலகையும் திருவடியால் அளந்தார்.




           மூன்றடியும் அளந்த பிறகு, இன்னும் ஒற்றை விரலை ஒற்றை விரலை நீட்டிக் கொண்டிருக்கிறார் அன்று நீட்டியது மகாபலியிடம் கடைசி அடி நிலத்தைக் கேட்பதற்காக. இன்று நீட்டியிருப்பது ஆணவத்தை விடுத்து, அவரிடம் நம்மைச் சரணடையச் செய்வதற்காக!

அடுத்து வரும் சார்வாணி மனுவந்திரத்திலே பலியே இந்திரனாக விளங்கப் போகிறான். அதுவரை சுதல லோகத்தில் சகல சம்பத்துகளும் பெற்று பலி அங்கு இருந்து வரட்டும் என்றார்.

யாக-பூர்த்தி

           சுக்கிராச்சாரியாரை அழைத்த பகவான், ஆச்சாரியாரே! யாகத்தைப் பூர்த்தி செய்யாதவன் பாவத்தை அடைவான் என்பதை நீர் அறிவீர். ஆகவே பலியின் யாகத்தைப் பூர்த்தி செய்யவும் என ஆணையிட்டார். பின்னர் வருண பாசத்தால் கட்டுண்டிருந்த பலியை விடுவித்தார். பகவானுடைய ஆணைப்படி சுக்கிராச்சாரியாரும் யாகத்தைப் பூர்த்தி செய்தார். யாகம் நிறைவேறியதும் பலி எல்லோருக்கும் அஞ்சலி செய்தான். அனைவரும் அவனைப் பாராட்டினார்கள். அடுத்து பிரகலாதனோடும் தன் உற்றார் உறவினரோடும் சுதல லோகத்திற்குப் பலி போனான்.


 (7)

குறள் பிரமசாரியாய் மாவலியைக்

குறும்பு அதக்கி அரசு வாங்கி

இறைப் பொழுதில் பாதாளம் கலவிருக்கை

கொடுத்து உகந்த எம்மான் கோயில்

எறிப்பு உடைய மணி வரை மேல்

 இளஞாயிறு எழுந்தாற்போல் அரவு அணையின்வாய் 

சிறப்பு உடைய பணங்கள்மிசைச் செழுமணிகள்

 விட்டு எறிக்கும் திருவரங்கமே


418


சிறிய ப்ரமசாரி வடிவம் கொண்டு மாவலியிடம் சென்று

மூன்றடி மண்ணை யாசித்து, அவனின் கர்வத்தை அடக்கி,

அவனுடைய ராஜ்யத்தைப் பெற்று, பின்பு நொடிப்பொழுதில்,

பாதாளத்தை அவனுக்கு ஏற்ற இருப்பிடமாகக் கொடுத்த

எம்பெருமானின் கோயில், ஜோதியுடன் விளங்கும் ஒரு நீல

ரத்ன மலையின் மேலே இளம் சூரியன் உதித்தாற்போல்,

சிவந்த ரத்தினங்கள் ஒளிரும் தலைகளை கொண்ட

பாம்பினைப் படுக்கையாக உடைய

எம்பெருமானின் திருவரங்கமே!





நீ அன்று உலகு அளந்தாய், நீண்ட திருமாலே! * 
நீ அன்று உலகு இடந்தாய் என்பரால் * நீ அன்று 
கார் ஓதம் முன் கடைந்து, பின் அடைத்தாய் மா கடலை * 
பேர் ஓத மேனிப் பிரான்! 

30 2211



வாய் மொழிந்து வாமனனாய் மாவலிபால் * மூவடி மண் 
நீ அளந்து கொண்ட நெடு மாலே! * - தாவிய நின் 
எஞ்சா இணை அடிக்கே ஏழ் பிறப்பும் ஆளாகி * 
அஞ்சாது இருக்க அருள். 

18 2299



ஓம் நமோ நாராயணாய நமக !!

பெருமான் திருவடிகளே சரணம் ..



அன்புடன்
அனுபிரேம்...


No comments:

Post a Comment