02 September 2022

முதல்நாள் -- கருங்குருவிக்கு உபதேசம் செய்த படலம்.

 மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் முக்கிய திருவிழாவான ஆவணி மூலத் திருவிழாவின்  கொடியேற்ற காட்சிகள் ... 

 முதல்நாள் ---கருங்குருவிக்கு உபதேசம் செய்த படலம்.



இறைவனான சொக்கநாதர் கருங்குருவிக்கு கருங்குருவிக்கு மிருத்யுஞ்சய மந்திரத்தை உபதேசம் செய்து முக்தி அளித்ததைக் குறிப்பிடுகிறது.

கருங்குருவிகள் வலியன் குருவிகள் என்று அழைக்கப்படும் காரணத்தையும் இப்படலம் எடுத்துரைக்கிறது.

கருங்குருவி கேட்டறிந்த சொக்கநாதரின் பெருமைகள், கருங்குருவி சொக்கநாதரை வழிபட்டது, இறைவனார் கருங்குருவிக்கு மிருத்யுஞ்சய மந்திரத்தை உபதேசித்தது, கருங்குருவி பெற்ற வரம் ஆகியவை இப்படலத்தில் விளக்கப்பட்டுள்ளன.

கருங்குருவிக்கு உபதேசம் செய்த படலம் திருவிளையாடல் புராணத்தின் கூடல் காண்டத்தில் நாற்பத்தி ஏழாவது படலமாக அமைந்துள்ளது.



இராசராச பாண்டியனுக்குப் பின் அவனுடைய மகன் சுகுண பாண்டியன் மதுரையை நல்லாட்சி செய்து வந்தான்.

அப்போது முற்பிறவியில் நல்ல வினைகள் செய்த ஒருவன், சில தீவினைகள் செய்தமையால் மதுரைக்கு அருகில் உள்ள ஊரில் கருங்குருவியாகப் பிறந்தான்.

அக்கருங்குருவியினைக் காகம் உள்ளிட்ட பறவையினங்கள் தலையில் கொத்தின. இதனால் கருங்குருவிக்குத் தலையில் காயங்கள் உண்டானது. கருங்குருவியால் அப்பறவைகளை எதிர்க்க இயலவில்லை.

எனவே கருங்குருவி அவ்வூரை விட்டு காட்டுப் பகுதிக்குச் சென்றது. அங்கு ஒருநாள் மரத்தில் கருங்குருவி அமர்ந்திருந்தது.

அப்போது சிவபக்தர் ஒருவர் தன் அடியவர் கூட்டத்தினருடன் அம்மரத்தடிக்கு வந்தார்.

சிவபக்தர் கூட்டத்தினரை நோக்கி “தலம், தீர்த்தம், மூர்த்தி என மூன்று சிறப்புகளையும் உடையது மதுரையம்பதி.  அங்கு கோவில் கொண்டிருக்கும் சொக்கநாதர் தலைசிறந்தவர். அவர் தம் பக்தர்களுக்கு இம்மையிலும் மறுமையில் நற்கதி அளிப்பார்.” என்று மதுரையின் சிறப்பையும், சொக்கநாதரின் பெருமைகளையும் எடுத்துக் கூறினார்.

சிவபக்தர் கூறியதைக் கேட்ட கருங்குருவிக்குச் சொக்கநாதரை வழிபட வேண்டும் என்ற ஆர்வம் உண்டானது.

சொக்கநாதர் கருங்குருவிக்கு அருளியது:

அக்கருங்குருவி மதுரை நோக்கிப் பறந்தது. மதுரையை அடைந்ததும் பொற்றாமரைக் குளத்தில் நீராடியது.

பின்னர் அங்கயற்கண் அம்மையையும், சொக்கநாதரையும் மனமுருக வழிபட்டது. இவ்வாறாக மூன்று தினங்கள் கருங்குருவி இறைவழிபாடு செய்தது.






கருங்குருவியின் செயலினைக் கண்டதும் அங்கையற்கண் அம்மை இறைவனாரிடம் “ஐயனே, இக்கருங்குருவி வழிபடும் காரணம் என்ன?” என்று கேட்டார்.

இறைவனார் கருங்குருவியின் முற்பிறவியும், இப்பிறவியில் இறைவனைக் கேட்டறிந்த விதத்தையும் எடுத்துரைத்தார்.

பின்னர் கருங்குருவிக்கு ஆயுள்பலத்தையும், பிறவித்துன்பத்தையும் போக்கும் மிருத்யுஞ்சய மந்திரத்தை உபதேசித்தார். ஞானம் பெற்ற கருங்குருவியானது இறைவனைப் பலவாறு துதித்து வழிபட்டது.

பின்னர் இறைவனாரிடம் “ஐயனே, எனக்கு ஓர் குறை உள்ளது. மற்ற பறவைகள் எல்லாம் என்னைத் துன்புறுத்துகின்றன.” என்றது.

அதனைக் கேட்ட இறைவனார் “அப்பறவைகளுக்கு எல்லாம் நீ வலியன் ஆவாய்.” என்று திருவாய் மலர்ந்தருளினார்.

உடனே கருங்குருவி “வலியன் என்பது அடியேன் மரபில் உள்ள பறவைகளுக்கு எல்லாம் விளங்க வேண்டும். தேவரீர் அடியேனுக்கு உபதேசித்த மந்திரத்தை அவைகளும் ஓதி உய்தல் வேண்டும்.” என்று வேண்டியது.

சொக்கநாதர் “அவ்வாறே ஆகுக” என்று கூறியருளினார். உடனே அக்குருவியும், அதன் இனமும் சொக்கநாதர் ஓதியருளிய மிருத்யுஞ்சய மந்திரத்தை உச்சரித்து வலியவனாகின.

அதனால் வலியன் என்னும் காரணப் பெயர் பெற்றுச் சிறப்பு பெற்றன. சில காலம் சென்ற பின் கருங்குருவி சிவப்பரம்பொருள் திருவடிநீழலை அடைந்தது.


கருங்குருவிக்கு உபதேசம் செய்த படலம் கூறும் கருத்து:

இறைவனார் எல்லார் இடத்திலும் அன்பு கொண்டவர். நம்முடைய நல்வினைகள் நம்மை நல்வழிப்படுத்தும் என்பது  இப்படலம் கூறும் கருத்துதாகும்.









முதல்நாள்  இரவு 

சுவாமி  : கற்பக விருட்ச வாகனம் 

அம்பாள் : சிம்ம வாகனம் 

இன்று சுவாமி சுந்தரேஸ்வரர் கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் சிம்ம வாகனத்திலும்  பவனி வந்து அருள்பாலித்தனர்.

கைலாயத்தில் கற்பக விருட்சத்தின் அடியில் இருந்தே சிவபெருமான் அருள்பாலிப்பதாக ஐதீகம். இந்த விருட்சம் (மரம்) கேட்டதைத் தரக்கூடியது. இந்த காட்சியைக் கண்டால் சுந்தரேஸ்வரப் பெருமான் நாம் கேட்டதை அருள்வார்.

அன்னை மீனாட்சி பவனி வரும் சிம்ம வாகனம் தைரியத்தின் அறிகுறியாகும். “உனக்கு வரும் கஷ்டங்களை என்னிடம் விட்டு விடு. இந்த சிங்கத்தையே அடக்கியுள்ள எனக்கு, உன் கஷ்டங்களை அடக்குவது என்பது பெரிய காரியமா என்ன!” என்று அம்பாள் நமக்கு தைரியமூட்டுவது போல இந்தக்காட்சி அமைகிறது.










திருவாலவாய்

பாடல் எண் : 2

நம்பனே நான்மு கத்தாய் நாதனே ஞான மூர்த்தீ

என்பொனே யீசா வென்றென் றேத்திநா னேசற் றென்றும்

பின்பினே திரிந்து நாயேன் பேர்த்தினிப் பிறவா வண்ணம்

அன்பனே யால வாயில் அப்பனே யருள்செ யாயே.

பொழிப்புரை :

எல்லோராலும் விரும்பப்படுபவனே ! நான்கு முகங்களை உடையவனே ! தலைவனே ! ஞான வடிவினனே ! என் பொன் போன்றவனே ! எல்லோரையும் ஆள்பவனே ! அன்பனே ! ஆலவாயில் அப்பனே ! உன்னைப் பலகாலும் துதித்து அடியேன் மனத்திரிபுகளை நீக்கி , பொறிபுலன்களின் வழியே சென்று பிறவாத வண்ணம் நாயேனுக்கு அருள் செய்வாயாக . 


மீனாட்சி அம்மன்  திருவடிகளே சரணம் ....


தொடரும் ...


அன்புடன்
அனுபிரேம் 💓💓💓

No comments:

Post a Comment