07 July 2025

ஸ்ரீமந் நாதமுனிகள் திருநட்சத்திரம் ஆனி அனுஷம் இன்று ..

ஶ்ரீமந் நாதமுநிகள் 1202வது திருநக்ஷத்திர திருநாள்  -  ஆனி-அனுஷம்  O7.07.2025





நாதமுனிகள் வாழி திருநாமம்



ஆனிதனில் அனுடத்தில் அவதரித்தான் வாழியே

ஆளவந்தார்க்கு உபதேசம் அருளி வைத்தான் வாழியே

பானுதெற்கில் கண்டவன் சொற்பல உரைத்தான் வாழியே

பராங்குசனார் சொற்பிரபந்தம் பரிந்துகற்றான் வாழியே

கானமுறத் தாளத்தில் கண்டிசைத்தான் வாழியே

கருணையினால் உபதேசக் கதியளித்தான்  வாழியே

நானிலத்தில் குருவரையை நாட்டினான் வாழியே

நலம் திகழும் நாதமுனி நற்பதங்கள் வாழியே



ஸ்ரீ நாதமுனிகள்

பிறந்த காலம்      - கி.பி. 823 - கி.பி. 917
பிறந்த ஆண்டு  - சோபக்ருத ஆண்டு
மாதம்   - ஆனி
திருநட்சத்திரம்  - அனுசம்
திதி    - பௌர்ணமி (புதன் கிழமை)
இடம்  - காட்டு மன்னார் கோயில் (வீரநாராயணபுரம்)
அம்சம்  - சேனை முதலியாரின் படைத்தலைவர் கஜாநனர்.

ஸ்ரீமந்நாதமுனிகள் வைபவம்...  

ஆசார்யர்களில் முதல்வரான ஸ்ரீமந்நாதமுனிகள் சேனை முதலியாருடைய முக்கியமான படைத்தலைவரான கஜாநந்தர் என்னும் யானை முகமுடைய நித்யசூரியினுடைய அம்சமாய், சோழதேசத்தில் உள்ள வீரநாராயணபுரத்தில் (காட்டுமன்னார் கோயில்) சோபக்ருத் ஆண்டு (கி.பி.823) ஆனி மாதம் 7ஆம் தேதி புதன்கிழமை பௌர்ணமி திதி அனுஷ நக்ஷத்திரத்தில் ஈஸ்வர பட்டாழ்வாருக்குக் குமாரராய் சொட்டைக்குலத்திலே அவதரித்தார். 

 இவருக்குத் திருத்தகப்பனார் இட்ட திருநாமம் ஸ்ரீரங்கநாதன் என்பதாகும்.  இவர் யோகாப்யாஸம் கைவந்தவராகையாலே ஸ்ரீரங்கநாத முனிகள் என்றும், சுருக்கமாக நாதமுனிகள் என்றும் வழங்கப்பட்டார்.  

இவர் தம் தகப்பனார் ஈஸ்வர பட்டாழ்வாரோடும், தம் திருக்குமாரரான ஈஸ்வரமுனிகளோடும் ஸகுடும்பமாக (ஒரே குடும்பமாக) காட்டுமன்னார் எம்பெருமானின் நியமனத்தோடு வடநாட்டு யாத்திரை புறப்பட்டு, வடதிசை, மதுரை, சாளக்கிராமம், வைகுந்தம் துவரை, அயோத்தி முதலான வடநாட்டு திவ்யதேசங்களை சேவித்துவிட்டு, யமுனைக்கரையிலே ஸ்ரீகேசவர்த்தனபுரம் என்கிற கிராமத்திலே எழுந்தருளியிருந்தார். 

 "தூயபெருநீர் யமுனைத்துறைவன்" என்கிற எம்பெருமானுக்குக் கைங்கர்யம் செய்துகொண்டு சில வருஷங்கள் அங்கேயே எழுந்தருளியிருந்தார்கள். 

  ஒருநாள் காட்டுமன்னார் நாதமுனிகளின் கனவில் தோன்றி, "வீரநாராயணபுரத்திற்குத் திரும்பி வருவீர்" என்று நியமித்தருள, அவர்களும் யமுனைத்துறை வனிடம் நியமனம் பெற்றுக்கொண்டு, பல திவ்யதேசங்களை சேவித்துக்கொண்டு வீரநாராயணபுரத்திற்குக் குடும்பத்தோடு எழுந்தருளினார்கள்.  

மன்னனாருக்குச் ( வீரநாராயணபுரத்து எம்பெருமானின் திருநாமம்) சில வருஷம் கைங்கர்யம் செய்துகொண்டிருக்கும்போது, அங்கே ஸேவார்த்திகளாக வந்த சில ஸ்ரீவைஷ்ணவர்கள்  பெருமானை ஸேவிக்கும்போது, ஐந்தாம் பத்து எட்டாம் திருவாய்மொழியை ("ஆராவமுதே") பாடித் துதித்தனர். 

 இந்தப் பதிகத்தின் முடிவில், "குழலின்  மலியச்  சொன்ன ஓர் ஆயிரத்துள் இப்பத்தும் மழலைதீர வல்லார்" என்று பாடியதைக் கேட்ட நாதமுனிகள் அவர்களைப் பார்த்து, 

"நீங்கள் "ஆயிரத்துள் இப்பத்தும்" என்று பாடுகிறீர்களே! 

இந்தப் பிரபந்தம் முழுவதும் உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார். 

 அவர்கள் அதற்கு, "எங்களுக்கு  ஆயிரம் தெரியாது;  இந்தப் பத்துப் பாடல்கள் மட்டும்தான் தெரியும் என்று கூறினர் ,  பிறகு, தீர்த்தப் பிரசாதம் முதலியன அவர்களுக்கு அளித்து அனுக்ரஹித்து விடைகொடுத்தார்.   அன்றுமுதல், திருவாய்மொழி ஆயிரத்தையும் பெறவேண்டும் என்ற பேராவல் நாதமுனிகளின் சிந்தையில் ஓங்கி நின்றது அதற்காக அனவரதமும் முயற்சிகளை மேற்கொண்டுவந்தார்.  

முடிவில் உறுதியான மனத்துடன் மன்னனாரை வணங்கி விடைபெற்றுக் கொண்டு, நம்மாழ்வாரின் அவதார ஸ்தலமான திருக்குருகூருக்கு எழுந்தருளினார். 

 அங்கு சென்று விசாரித்ததில், அந்தப்  பிரபந்தம் யாருக்கும் வராது என்று தெரிந்துகொண்டார்.  என்றாலும், தான் கைக்கொண்ட பணியில் சற்றும் அயராமல் மேன்மேலும் முயற்சி செய்தார். 

அதன் பலனாக முடிவில் உபாயம் (வழி) ஏற்பட்டது. 

 நாதமுனிகள் "குருகூர்ச்சடகோபன்" என்று ஆழ்வாரால் அருளிச்செய்யப்பட்ட திருக்குருகூருக்குச் சென்று  ஸ்ரீமதுரகவி ஆழ்வார் சம்பந்தம் பெற்ற பராங்குசதாசர் என்பவரிடம் விசாரித்தார். 

 அவரும் "நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழியும் மற்ற ஆழ்வார்கள் அருளிய திவ்யப்ரபந்தங்களும் நீண்ட காலத்துக்கு முன்னேயே மறைந்துவிட்டன.  

எங்களுடைய பரமாசார்யரான ஸ்ரீமதுரகவிகள், நம்மாழ்வார் விஷயமான "கண்ணிநுண் சிறுத்தாம்பு" என்கிற பிரபந்தத்தை என்னிடம் அளித்து, " ஒருமுகமாக நம்மாழ்வார் திருமுன்பே இருந்து ஆழ்வார் திருவடிகளை தியானித்துக்கொண்டு நியமத்துடன்  12000 முறை அனுசந்தித்தால் நம்மாழ்வார் ப்ரசன்னாமாவார் என்று கூறினார்" என்று நாதமுனிகளிடம் தெரிவித்தார்.  

அவர் உபதேசித்தபடி நாதமுனிகளும் உடனே நம்மாழ்வார் திருமுன்பே நியமத்தோடு 12000 முறை "கண்ணிநுண் சிறுத்தாம்பு" அனுசந்தித்தார். 

 நம்மாழ்வாரும் அவர் நெஞ்சிலே தோன்றி,  ""உமக்கு என்னவேண்டும்"  என்று கேட்க, 

நாதமுனிகள் "திருவாய்மொழி முதலான திவ்யப்ரபந்தங்களை அடியேனுக்கு உபதேசித்து அருளவேணும்" என்று பிரார்த்திக்க, 

ஆழ்வாரும் அவருக்கு மயர்வற மதிநலம் அருளி, ரஹஸ்ய த்ரயத்தையும், திருவாய்மொழி முதலான  திவ்யப்ரபந்தங்களையும் அவற்றின் அர்த்தவிஷயங்களையும், அஷ்டாங்க யோக ரஹஸ்யத்தையும் அனுக்ரஹித்து அருளினார்..

   அதற்குப்பின், சில காலம் நாதமுனிகள் ஆழ்வார் திருநகரியிலே  திவ்யப்ரபந்தங்கள் முதலானவற்றை அனுசந்தித்துக்கொண்டு எழுந்தருளியிருந்தார். 

 ஒருநாள் இவரை வீரநாராயணபுரத்திற்கு வரச்சொல்லி மன்னனார் கனவிலே நியமித்தருள, ஐவரும் ஆழ்வாரிடம் விடைபெற்றுக்கொண்டு, வீரநாராயணபுரம் சென்று, மன்னனார் நியமனத்தாலே தமது மருமக்களான மேலையகத்தாழ்வார் மற்றும் கீழையகத்தாழ்வார் ஆகிய இருவரையும் அழைத்துக்கொண்டு திவ்யப்ரபந்தங்களுக்கு தேவகானத்தாலே ராகம் தாளம் முதலானவற்றை அமைத்து இயலும் இசையும் ஆக்கிப் பாடச்செய்து, பரப்பிவந்தார்.  

இவருடைய முக்கிய சிஷ்யர்கள் உய்யக்கொண்டாரும், குருகைக் காவலப்பனும் ஆவர்.  

அவர்கள் மூலமாக திவ்யப்ரபந்தத்தையும் யோக ரஹஸ்யத்தையும் பிரசாரம் செய்து, பிறக்க இருக்கும் தம்முடைய பேரனான யமுனைத்துறைவனுக்கு (ஸ்ரீ ஆளவந்தார்) இவற்றை அளிக்கும்படி நியமித்துவிட்டு குருகைக் காவலப்பன் கோயிலிலே பரமபதித்தருளினார்.  

தாது வருஷம் (கி.பி.917) மாசி மாதம் சுக்லபக்ஷம் ஏகாதசி இவருடைய தீர்த்த தினமாகும்.  சுமார் 93 திருநக்ஷத்திரங்கள் (ஆண்டுகள்) இவர் எழுந்தருளியிருந்தார்.  

இவர் அருளிச்செய்த கிரந்தம் "ந்யாய தத்வம்" என்பது.  இதிலிருந்து சில பகுதிகள் எம்பெருமானார், ஸ்ருதபிரகாசிகா பட்டர், ஸ்ரீ வேதாந்த தேசிகர் முதலான ஆசார்யர்களால் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.  கிரந்தம் இப்போது  இல்லை யோக ரஹஸ்யாம், புருஷநிர்ணயம் என்னும் இரண்டு க்ரந்தங்களையும் இவர் செய்ததாகப் பெரிய திருமுடியடைவில் உள்ளது.  இவையும் இப்போது இல்லை.   




திருவாய்மொழி

ஐந்தாம் பத்து - எட்டாம் திருவாய்மொழி – ஆராவமுதே

ஆழ்வார்  ஆற்றாமை பேசி அலமருதல்



ஆரா அமுதே! அடியேன் உடலம்*  நின்பால் அன்பாயே* 
நீராய் அலைந்து, கரைய*  உருக்குகின்ற நெடுமாலே* 
சீர் ஆர் செந்நெல் கவரி வீசும்*  செழு நீர்த் திருக்குடந்தை* 
ஏர் ஆர் கோலம் திகழக் கிடந்தாய்!*  கண்டேன் எம்மானே!* (2)  1

3418

          

எம்மானே! என் வெள்ளை மூர்த்தி!*  என்னை ஆள்வானே* 
எம்மா உருவும் வேண்டும் ஆற்றால்*  ஆவாய் எழில் ஏறே* 
செம்மா கமலம் செழுநீர் மிசைக் கண் மலரும்*  திருக்குடந்தை* 
அம்மா மலர்க் கண் வளர்கின்றானே! என் நான் செய்கேனே!* (2)    2

3419

          


என் நான் செய்கேன்! யாரே களைகண்? என்னை என் செய்கின்றாய்?*
உன்னால் அல்லால் யாவராலும்*  ஒன்றும் குறை வேண்டேன்* 
கன் ஆர் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய்!*  அடியேன் அரு வாழ்நாள்* 
செல் நாள் எந்நாள்? அந்நாள்*  உன தாள் பிடித்தே செலக்காணே* 3

3420

          


செலக் காண்கிற்பார் காணும் அளவும்*  செல்லும் கீர்த்தியாய்* 
உலப்பு இலானே! எல்லா உலகும் உடைய*  ஒரு மூர்த்தி* 
நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்!*  உன்னைக் காண்பான் நான்- 
அலப்பு ஆய்*  ஆகாசத்தை நோக்கி*  அழுவன் தொழுவனே*. 4

3421

          


அழுவன், தொழுவன், ஆடிக் காண்பான்*  பாடி அலற்றுவன்* 
தழு வல்வினையால் பக்கம் நோக்கி*  நாணிக் கவிழ்ந்திருப்பன்*
செழு ஒண் பழனக் குடந்தைக் கிடந்தாய்!*  செந்தாமரைக் கண்ணா!* 
தொழுவனேனை உன தாள் சேரும்*  வகையே சூழ்கண்டாய்*.    5

3422

          


சூழ்கண்டாய் என் தொல்லை வினையை அறுத்து*  உன் அடி சேரும்- 
ஊழ் கண்டிருந்தே*  தூராக் குழி தூர்த்து*  எனை நாள் அகன்று இருப்பன்?*
வாழ் தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய்!*  வானோர் கோமானே* 
யாழின் இசையே! அமுதே!*  அறிவின் பயனே! அரிஏறே!*. 6

3423

          

அரி ஏறே! என் அம் பொன் சுடரே!*  செங்கண் கருமுகிலே!* 
எரியே! பவளக் குன்றே!*  நால் தோள் எந்தாய் உனது அருளே*
பிரியா அடிமை என்னைக் கொண்டாய்*  குடந்தைத் திருமாலே* 
தரியேன் இனி உன் சரணம் தந்து*  என் சன்மம் களையாயே*. 7

3424

          

களைவாய் துன்பம்; களையாது ஒழிவாய்*  களை கண் மற்று இலேன்* 
வளை வாய் நேமிப் படையாய்!*  குடந்தைக் கிடந்த மா மாயா* 
தளரா உடலம் எனது ஆவி*  சரிந்து போம்போது* 
இளையாது உன தாள் ஒருங்கப் பிடித்துப்*  போத இசை நீயே*.  8

3425

          

இசைவித்து என்னை உன் தாள் இணைக்கீழ்*  இருத்தும் அம்மானே* 
அசைவு இல் அமரர் தலைவர் தலைவா*  ஆதிப் பெரு மூர்த்தி* 
திசை வில் வீசும் செழு மா மணிகள் சேரும்*  திருக்குடந்தை* 
அசைவு இல் உலகம் பரவக் கிடந்தாய்!*  காண வாராயே*. 9

3426 

          

வாரா அருவாய் வரும் என் மாயா!*  மாயா மூர்த்தியாய்* 
ஆரா அமுதாய்! அடியேன் ஆவி*  அகமே தித்திப்பாய்* 
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்!*  திருக்குடந்தை- 
ஊராய்!*  உனக்கு ஆட்பட்டும்*  அடியேன் இன்னம் உழல்வேனோ?* (2)

3427 

          

உழலை என்பின்  பேய்ச்சி முலையூடு*  அவளை உயிர் உண்டான்* 
கழல்கள் அவையே சரண் ஆகக் கொண்ட*  குருகூர்ச் சடகோபன்* 
குழலின் மலியச் சொன்ன*  ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்* 
மழலை தீர வல்லார்*  காமர் மான் ஏய் நோக்கியர்க்கே*. (2)

3428




ஸ்ரீ  மணவாள மாமுனிகள் அருளிச் செய்த உபதேச ரத்தினமாலை


36 
தெருள் உற்ற ஆழ்வார்கள் சீர்மை அறிவாரார்
அருளிச்செயலை அறிவாரார் - அருள் பெற்ற
நாதமுனி முதலான நம் தேசிகரை அல்லால்
பேதை மனமே உண்டோ பேசு






  ஓம் நமோ நாராயணாய நம!!
ஸ்ரீமந் நாதமுனிகள் திருவடிகளே சரணம்!!


அன்புடன் 
அனுபிரேம் 💛💛

No comments:

Post a Comment