23 April 2022

4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே

திருக்கோளூர் பெண்பிள்ளை  ரகசியம் முன்னுரை ...

1. அழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் போலே.

2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல

3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே

4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே





தசமுகன் என்பது இராவணனைக் குறிக்கிறது. 

பிராட்டி என்பது  சீதாதேவி. இங்கு, "செற்றேனோ" என்னும் சொல்லிற்கு "கொன்றேனோ" என்று பொருள். 

இராவணனைச் சீதை வதம் செய்யவில்லை. 

இங்கு, சீதை இராவணனைக் கொன்றார் என்றால், இராவணனின் ஆணவத்தை, பேராண்மையைக் கொன்றார் என்று பொருள்.

 மிதிலையின் இளவரசி. 

ஸ்ரீ ராமனின் துணைவியாய், ஸ்ரீ ராமனின் நிழலாய் வாழ அயோத்தி வந்தவர். 

ஸ்ரீ இராமனைப் பிரிய மனமில்லாமல், பதினான்கு ஆண்டுகள் மலரினும் மென்மையான பாதத்துடன் வனத்தில் வாழ முடிவெடுத்தவர். 

இராவணனின் அஹம்பாவம்,பேராண்மை, தலைக்கணம் நிறைந்த பார்வையும் மனமும் வனத்தில் எளிய வாழ்வு வாழ்ந்த சீதையின் மேல் பட்டு, அவன் அழிவிற்கு விதையிட்டது. 

மிதிலையின் இளவரசியாக இருந்த போதே கொடியிடையாள் என்று வர்ணிக்கப்பட்ட சீதாப் பிராட்டியார், இலங்கையில் சிறையில் வாடிய போது இன்னும் மெலிந்தார் என்றால், அவரின் துயரத்தை எவ்வார்த்தைகள் கொண்டு விளக்குவது?

 இராவணனின் உண்மை நிலையினை அவனுக்கு எடுத்துரைத்தார். 

ஆணவத்தின் உச்சத்தில் யோசிக்காமல் தவறுகள் புரிந்து கொண்டிருந்த இராவணனை ஸ்ரீஇராமனுடன் போர் புரிந்து மடியாமல் அவரிடம் சரணடையுமாறு கூறினார். 

இராவணனையும், ஹனுமனே கண்டு வியந்த இராவணனின் அரண்மனையையும் சீதாப் பிராட்டி ஒடிந்த புல்லினைப் போல் மதித்தார். 

சீதாதேவியை மயக்க இராவணன் குபேரனுக்கு இணையான தன் சொத்துக்களைப் பற்றிக் கூறி ஆசை வார்த்தைகள் காட்டிய போதும் அவர் அதைத் தூசினைப் போல் துச்சமெனக் கண்டார்.   

சித்திரவதைகளை அனுபவித்துக் கொண்டு அனுக்க்ஷனமும் ஸ்ரீ இராமனை மட்டுமே எண்ணி வாழ்வது கூடச் சுகம் என்றார். 

அவ்வாறே சிறை வாசத்தைக் கழித்தார். 

தன் ஆன்மாவும் உடலும் ஸ்ரீராமனின் உடைமை என்பதை மனதில் நிறுத்தி அவர் வருகைக்காகவே காத்திருந்தார்.





இராவணன் இறந்துவிட்டான் யுத்தகளத்தில் என்று கேள்விப்பட்டதும், அவன் மனைவி மண்டோதரி ஓடி வருகிறாள்.

அவனுடைய உடலைக் கண்டு அழுகிறாள். சீதையை மீட்டி இராமனும் மண்டோதரியின் அருகில் தான் நிற்கிறார். இராமனைக் கண்ட மண்டோதரி தன் கணவனின் இறப்பிற்குக் காரணமான இராமனைத் திட்டவில்லை. 

மாறாக இராவணனைத் திட்டுகிறாள். 

எத்தனை பெரிய பாத்திரம் நிறைய பால் இருந்தாலும், பிறன்மனை நோக்கல் என்னும் ஒரு துளி விஷம் அதில் கலந்துவிட்டதால், அந்த விஷத் துளியானது இராவணனின் உயிர்த் துளியைப் பருகிவிட்டது.






சீதை இராவணனைக் கொல்லவில்லைதான்.

 தன் கற்புக்கனலால் கொல்லக்கூடிய சக்தி கொண்டவள்.

 எனினும், அவனை கீழ்மையாக பார்த்து அவனை கொன்றாள். அவளை தன்னிடம் சரணடைய செய்ய இராவணன் தன்னுடைய எல்லா இராஜபோகங்களையும் (அனுமனையே ஆச்சர்யப்பட வைத்தவை) தருவதாக சொன்னான். ஆனாலும், அவையெல்லாம் தூசினும் துச்சமாக நினைத்தாள். அவனுடைய சலுகைகளை ஏற்பதை விட, சிறையுண்டு சித்திரவதை அனுபவிப்பதை ஏற்றாள்.

அனுமன் இலங்கை சென்று சீதையைக் கண்டு ஆறுதல் கூறி, மீண்டும் இராமனிடம் வந்ததும், முதலில் அவன் கூறியது, 'கண்டனென் கற்பினுக்கணியைக் கண்களால்’ என்பதுதான்.

பிராட்டிக்கு இராவணனைக் கொல்வது பெரிய விஷயமே இல்லை. அதை அவள் இராமனுக்காக தியாகம் செய்தாள். இராவணன் அவனது தவற்றை உணர்ந்து இராமனின் அடிபணியச் சொன்னாள்.




'தாயே! என் முதுகில் அமர்ந்து கொள்ளுங்கள். நான் ஒருவருக்கும் தெரியாமல் உங்களைக் கொண்டுபோய் ராமனிடம் சேர்ப்பித்து விடுகிறேன்’ என்று அனுமன் அழைத்தபோது மறுக்கிறாள் சீதை.

காரணம், அப்படிச் செய்தால், அது இராமனின் மகிமையைக் குறைத்து மதிப்பிடுவதாக அல்லவா ஆகிவிடும்? அனுமனின் வாலில் வைக்கப்பட்ட தீ அவனைச் சுடாமல் பார்த்துக்கொள்ளச் செய்த சீதைக்கு இலங்காபுரியை அழிக்க எவ்வளவு நேரம் ஆகியிருக்கும்?

சரணாகதர்களுக்குத் தங்களைத் தாங்களே ரட்சித்துக்கொள்ள முடியாது. 

பகவான் ஒருவனுக்கே ரட்சிக்கும் தகுதி உள்ளது. இதை உணர்த்தவே சீதை பொறுமையுடன் இருந்தாள்.

இதைத்தான் திருக்கோளூர் பெண்பிள்ளை, 'சக்திகள் இருந்தும் அதை தியாகித்து, அனைத்தையும் அவன் கையில் ஒப்படைத்த பிராட்டியா நான்?’ என்றாள். 

இதைக்கேட்ட இராமானுஜர் வியந்து நின்றார்.



திருவாய் மொழி -முதற் பத்து

ஒன்றாம் திருவாய்மொழி - உயர்வு அற உயர் நலம்

 ஐந்தாம் பாசுரம் - ரக்ஷண ரூபத்தில் இருக்கும் ஸ்திதி எம்பெருமானின் அதீனத்தில் உள்ளது என்று வையதிகரண்யத்தாலே அருளிச்செய்கிறார்.


குறிப்பு – வையதிகரண்யம் என்பது இரண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட பொருள்கள் வேறுபட்ட ஆதாரங்களைக்கொண்டு இருப்பது. இரண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட சொற்கள் வேறுபட்ட பொருள்களைக் குறிக்கும் என்றும் விளக்கப்படும்.


அவரவர் தமதமது அறிவு அறி வகைவகை

அவரவர் இறையவர் என அடி அடைவர்கள்

அவரவர் இறையவர் குறைவு இலர், இறையவர்

அவரவர் விதிவழி அடைய நின்றனரே


5    2903


வேறு வேறு ப்ரயோஜனங்களுக்காக அதிகாரிகள் (வேறு வேறு தகுதியுடையவர்கள்) தங்கள் அறிவின் வகையாலே தங்களுடைய ருசிக்கு ஏற்ற தேவதைகளைப் பலனைக் கொடுக்கும் தலைவர்களாகக் கருதி அடைவார்கள். அந்த தேவதைகள் பலம் கொடுக்கும் தலைவராக எந்தத் தடையுமில்லை. எல்லாருக்கும் ஸ்வாமியான எம்பெருமான் அந்த அந்த அதிகாரிகள் தங்களின் விதிப்படி பலனை அடையும்படி அந்த தேவதைகளுக்கு அந்தர்யாமியாக நின்றான்.








05 - திருஅன்பில்

ஸ்ரீ அழகியவல்லீ ஸமேத திருவடிவழகியநம்பி ஸ்வாமிநே நமஹ


சுவாமி இராமானுஜர் திருவடிகளே சரணம்!!!

ரகசியம் தொடரும்...


அன்புடன் 

அனுபிரேம்  💕💕


2 comments:

  1. பதிவு வழி பகிர்ந்த விஷயங்கள் அனைத்தும் சிறப்பு.

    ReplyDelete
  2. பதிவை ரசித்து வாசித்தேன் அனு...ஆஞ்சு இருக்கும் பதிவாச்சே!! படங்கள் எல்லாமே அழகாகைருக்கின்றன அனு

    கீதா

    ReplyDelete