24 September 2022

அருள்மிகு பார்த்தசாரதி பெருமாள் திருக்கோவில், திருவல்லிக்கேணி

 அருள்மிகு பார்த்தசாரதி பெருமாள் திருக்கோவில், திருவல்லிக்கேணி

 பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 61 வது திவ்ய தேசம். 

புராணங்களில் ப்ருந்தாரண்ய க்ஷேத்ரம் என்றும் தமிழில் திரு-அல்லி-கேணி என்றும் பெயர் பெற்ற இந்த திருத்தலம் தற்பொழுது திருவல்லிக்கேணி என்று அழைக்கப்படுகிறது.

9 அடி உயர மூலவர், சாரதிக்குரிய மீசையோடு இருத்தல் இத்தலத்தில் மட்டுமே என்பது மிக முக்கிய சிறப்பாக கருதப்படுகிறது.




மூலவர் - பார்த்தசாரதி

உற்சவர் - வேங்கடகிருஷ்ணன், ஸ்ரீ தேவி பூதேவி

தாயார் - ருக்மிணி

தல விருட்சம் - மகிழம்

தீர்த்தம் - கைரவிணி புஷ்கரிணி

ஆகமம்/பூஜை - வைகானஸம்

புராண பெயர் - பிருந்தாரண்ய க்ஷேத்ரம்



பார்த்தசாரதி கோவில் வரலாறு:

திருமாலின் பக்தனான சுமதிராஜன் என்னும் மன்னனுக்கு, பெருமாளை குருக்ஷேத்ர போரில் தேரோட்டியாக இருந்த கண்ணனாக, தரிசிக்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. தனக்கு அக்காட்சியை தந்தருளும்படி பெருமாளிடம் வேண்டினார். சுவாமியும் இங்கு தேரோட்டியாக காட்சி தந்தார். மகிழ்ந்த மன்னர், அதே கோலத்தில் தங்கும்படி வேண்டவே, பாரதப் போரில் அர்ச்சுனனுக்கு சாரதியாக இருந்த திருக்கோலத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமாள் ஆயுதம் எதையும் எடுப்பதில்லை என்று செய்த சபதத்திற்கு ஏற்ப ஒரு கையில் சங்கு மட்டுமே ஏந்தி இருக்கிறார்.

🛕 பாரதப்போரில் அர்ச்சுனன் மீது பீஷ்மர் தொடுத்த அம்புகளையெல்லாம் தானே முன்னின்று ஏற்றுக்கொண்டு அர்ச்சுனனுக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்ததை விளக்கும் வகையில் இன்றும் பார்த்தசாரதி முகத்தில் அம்பு பட்ட வடுக்கள் காணப்படுகின்றன. 

“வேங்கடகிருஷ்ணர்” என்றும் பெயர் பெற்றார். இத்தலத்து உற்சவர், பார்த்தசாரதி ஆவார். பிற்காலத்தில் இவர் பிரசித்தி பெறவே, இவரது பெயரில் கோவில் அழைக்கப்படுகிறது.

🛕 வியாச முனிவரால் இங்கே இவர் பிரதிஷ்டை செய்யப்பட்டார் என்கிறது ஸ்தல புராணம். இங்கு காணப்படும் மூலவர் திருமேனியே, கீதையில் பகவானின் சொரூபம் என்று கருதப்படுகிறது. 

நின்றான் திருக்கோலத்துக்கு வேங்கடகிருஷ்ணர் இவரே மூலவர். 

அமர்ந்தான் கோலத்துக்கு தெள்ளியசிங்கர் என்ற “ஸ்ரீநரசிம்மர்”. 

கிடந்தான் கோலத்துக்கு மன்னாதர் எனப்படும் “ஸ்ரீரங்கநாதர்”. 

இந்த மூன்று நிலைகளுமே வீரம் யோகம், போகம் ஆகியவற்றை பக்தர்களுக்கு அருள்கின்றன.





கோவில் அமைப்பு

🛕 கருவறையில் மூலவர் வேங்கட கிருஷ்ணர் தவிர ருக்மிணி பிராட்டி, பலராமன், சத்யகி, அனிருத்தன், பிரத்யும்னன் என குடும்ப சமேதகராக காட்சி தருகிறார். 

இவர்கள் தவிர பிற சன்னதிகளில் ஸ்ரீ வேதவல்லி தாயார், 

ஸ்ரீ மன்னாதர் (ரங்கநாதர், ஸ்ரீ ராமர், ஸ்ரீ கரிவரதர் (வரதராஜர் சுவாமி), 

தெள்ளியசிங்கர்  நரசிம்மர், 

ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஆழ்வார்கள், ராமானுஜர், மணவாள மாமுனிகள் மற்றும் வேதாந்தாசாரியர் ஆகியோரும் காட்சி தருகின்றனர். 

இங்கே பார்த்தசாரதி மற்றும் நரசிம்மருக்கு தனித்தனியே கொடி மரங்கள் மற்றும் வாசல்கள் கொண்டு தனித்தனி கோவில்கள் போல் திகழ்கின்றன.






தீர்த்த தாயார்

🛕 முன்னொரு காலத்தில், திருமாலை தனது மருமகனாக அடைய வேண்டி பிருகு மகரிஷி, இத்தலத்தில் தவமிருந்தார். அப்போது இங்கிருந்த புஷ்கரணியில் மலர்ந்த அல்லி மலரில், தாயார் தோன்றினார். பிருகு அவருக்கு வேதவல்லி என பெயரிட்டு வளர்த்தார். அவளுக்கு திருமணப்பருவம் வந்தபோது திருமால், ரங்கநாதராக இத்தலம் வந்து அவளைத் திருமணம் செய்து கொண்டார். இந்த திருக்கல்யாண வைபவம் இக்கோவிலில் மாசி மாதம், வளர்பிறை துவாதசியன்று நடக்கிறது. 

வேதவல்லி தாயார் தனி சன்னதியில் அமர்ந்த கோலத்தில் இருக்கிறாள். இவள் கோவிலைவிட்டு வெளியேறுவதில்லை. வெள்ளிக்கிழமை மற்றும் உத்திர நட்சத்திரத்தில் கோவில் வளாகத்திற்குள் புறப்பாடாகி, ஊஞ்சலில் காட்சியளிக்கிறாள்.


வேதவல்லி தாயார்


குடும்பத்துடன் கிருஷ்ணர்

🛕 மனிதர்கள் குடும்பத்தினருடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும்விதமாக இக்கோவிலில் பெருமாள் அருள்கிறார். மூலஸ்தானத்தில் வேங்கடகிருஷ்ணர் அருகில் ருக்மணி தாயார், மார்பில் மகாலட்சுமி ஆகியோர் உள்ளனர். இந்தப் பெருமாள், அர்ஜுனனுக்கு உதவியாக வந்த கிருஷ்ணாவதாரம் என்பதால், அருகில் ருக்மிணி தாயார் இருக்கிறாள். 

வலப்புறத்தில் அண்ணன் பலராமர், இடதுபுறத்தில் தம்பி சாத்யகி, மகன் பிரத்யும்னன் மற்றும் பேரன் அநிருத்தன் ஆகியோரும் இருக்கின்றனர்.

 தனிசன்னதியில் இருக்கும் ராமபிரானுடன் சீதை, லட்சுணர், பரதன், சத்ருக்கனன், ஆஞ்சநேயர் ஆகியோர் உள்ளனர்.






சக்கரம் இல்லாத சுவாமி

🛕 பெருமாளின் பஞ்சாயுதங்களில் சங்கும், சக்கரமும் பிரதானமானவை. ஆனால், இக்கோவிலில் சுவாமியிடம் சக்கரம் இல்லை. மகாபாரத போரின்போது பாண்டவர்களுக்கு உதவிய கிருஷ்ண பரமாத்மா, போர் முடியும் வரையில் ஆயுதம் எடுப்பதில்லை என உறுதி எடுத்திருந்தார். எனவே, இவர் இத்தலத்தில் ஆயுதம் இல்லாமல் காட்சி தருகிறார். போரை அறிவிக்கும் சங்கு மட்டும் வைத்திருக்கிறார். பெருமாளை இத்தகைய கோலத்தில் தரிசிப்பது அபூர்வம். பொதுவாக நான்கு கரங்களுடன் காட்சி தரும் பெருமாள், இங்கே கிருஷ்ணனாகிய மானிட வடிவில் இருப்பதால் இரண்டு கரங்களே உள்ளன.


மீசையில்லாத தரிசனம்

🛕 தேரோட்டிக்கு அழகு கம்பீரத்தை உணர்த்தும் மீசை. இதனை உணர்த்தும் விதமாக, இக்கோவிலில் வேங்கடகிருஷ்ணர் மீசையுடன் காட்சிதருகிறார். இதனால் இவருக்கு, மீசை பெருமாள் என்றும் பெயருண்டு. வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் போது, பகல்பத்து ஆறாம் நாளில் இருந்து பத்தாம் நாள் வரையில் 5 நாட்கள் மட்டும் இவரை மீசையில்லாமல் தரிசிக்கலாம். உற்சவர் பார்த்தசாரதிக்கு வெள்ளிக் கிழமைகளில் விசேஷ அபிஷேகம் நடக்கும் போது மட்டும், மீசையுடன் அலங்காரம் செய்கின்றனர்.


ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி பெருமை

🛕 தருமத்தை நிலைநாட்ட வேண்டி நிகழ்ந்த மகாபாரதப் போரில் பீஷ்மர் எய்த அம்புகளை பார்த்தனுக்குத் தேரோட்டியாக நின்று தாமே தாங்கியதால் ஏற்பட்ட வடுக்களை உற்சவர் திருமுகத்தில் இன்றும் தரிசிக்கலாம். இந்த ஐதீகத்தின் அடிப்படையில் பெருமாள் ஸ்ரீ பார்த்தசாரதி என்றழைக்கப்படுகிறார். ஆலயமும் அப்பெயரில் அழைக்கப்படுகிறது. காயங்களுடன் இருப்பதால் இவருக்கான நைவேத்யத்தில், நெய் அதிகம் சேர்க்கப்படுகிறது. மிளகாய் போன்ற காரமான பொருட்கள் சேர்ப்பதில்லை. 


ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் 






 
மற்ற தலங்களில் குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில்தான் கருடசேவை வைபவத்தைக் காண முடியும். ஆனால் இங்கே வருடம் 365 நாளுமே கருடசேவைதான்! காரணம், கஜேந்திரனுக்கு மோட்சம் அருளிய அந்தக் கஜேந்திர வரதர் (மூலவர்), கருடாழ்வார் மேல் நித்திய வாசம் செய்கிறார். 

கஜேந்திர வரதர் 








 தியாகபிரம்மம் முத்துசுவாமி தீட்சிதர், பாரதியார் ஆகியோர் இத்தலம் குறித்து பாடியுள்ளனர். குறிப்பாக பாரதியார் பாடிய கண்ணன் பாடல்கள் அனைத்தும் இப்பெருமாளைப் பற்றியது எனக் குறிப்பிடுவர். அனுதினமும் பார்த்தசாரதிப் பெருமாளை வழிபட்டிருக்கிறார். சங்கீத மேதை தியாகராஜ சுவாமிகள், தத்துவ மேதை விவேகானந்தர், கணித மேதை ராமானுஜம், அரசியல் மேதை சத்தியமூர்த்தி ஆகியோர் இத்தலத்திற்கு வந்து வழிபட்டுள்ளனர்.


யோக நரசிம்மர் - 

யோக நரசிம்மர், யோக பீடத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவரே இத்தலத்தின் முதல் மூர்த்தியாவார். காலையில் இவருக்கே முதல் பூஜை நடக்கிறது. 

அத்ரி மகரிஷிக்கு காட்சி தந்த நரசிம்மர் இவர். இவரது சன்னதியில் உள்ள மணிகளில் மட்டும் சப்தம் எழுப்பும் நாக்குகள் இல்லை. 

நரசிம்மர் யோக நிலையில் இருப்பதால் மணி ஒலிக்கும் சப்தமும், பேச்சு சப்தமும் கேட்கக்கூடாது என்கின்றனர். எனவே, இவரது சன்னதியில் அலங்காரத்திற்காக கதவில் இருக்கும் மணிகள்கூட, நடுவில் சப்தம் எழுப்பும் நாக்கு இல்லாமல் செய்யப்பட்டிருக்கிறது. பக்தர்கள் இவரிடம் வேண்டிக்கொண்டு உப்பு, மிளகை இவரது சன்னதிக்கு பின்புறத்தில் காணிக்கையாக செலுத்துகிறார்கள். இதற்காக சிறிய மேடை அமைக்கப்பட்டிருக்கிறது. இதனால் நோய்கள் நீங்குவதாக நம்பிக்கை. 

 


தெள்ளியசிங்கர் 








ஐந்து மூலவர் ஸ்தலம்

 கோயில்களில் பெரும்பாலும் ஒரு மூர்த்தி மட்டுமே பிரதான மூலவராக இருப்பார். 

ஆனால், இக்கோயிலில் ஐந்து மூர்த்திகள் மூலவர் அந்தஸ்தில் வணங்கப்படுகின்றனர். 

பிரதான மூலஸ்தானத்தில் வேங்கடகிருஷ்ணர், முன்மண்டபத்தில் ரங்கநாதர் மற்றும் ராமபிரான், பிரகாரத்தில் கஜேந்திரவரதர் மற்றும் யோகநரசிம்மர் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் இருக்கின்றனர். 

எனவே இத்தலம், "பஞ்சமூர்த்தி தலம்' என்றழைக்கப்படுகிறது.

ரங்க நாதர் சன்னதியில், சுவாமியின் தலைக்கு அருகில் வராகரும், கால் அருகில் நரசிம்மரும் இருக்கின்றனர். ரங்கநாதர், இங்கு தாயாரை திருமணம் செய்துகொள்ள வந்தபோது நரசிம்மரும், வராகமூர்த்தியும் உடன் வந்தனர் என்ற அடிப்படையில் இந்த அமைப்பு உள்ளது. 

இவ்வாறு ஒரே சன்னதிக்குள் பெருமாளின் மூன்று கோலங்களையும் இங்கு தரிசிக்க முடியும். 

திருமணத்திற்கு வந்த ரங்கநாதரை, தாயார் ""என்னவரே!'' என்ற பொருளில், ""ஸ்ரீமன்நாதா!'' என்றழைத்தார். எனவே இவருக்கு "ஸ்ரீமன்நாதர்' என்ற பெயரும் உண்டு.


ஸ்ரீ ரங்கநாதர்





ஸ்ரீ ராமர் 



வைணவ ஆழ்வார்களில்  ஸ்ரீ பேயாழ்வார், ஸ்ரீ திருமழிசையாழ்வார் மற்றும்  திருமங்கையாழ்வாராலும்  பாடப்பட்ட தலமாகும். இத்திருக்கோயிலின் மூலவர் ஸ்ரீ வேங்கடகிருஷ்ணஸ்வாமி ஸ்ரீ கீதாச்சார்யா எனவும் அழைக்கப்படுகிறார். 







பிரசாதம்

பெரும்பாலான நாட்களன்று இங்கு சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர் சாதம் மற்றும் வடை வழங்கப்படுகிறது. வைகுந்த ஏகாதசி சமயத்தில் (பகல் பத்து / இராப் பத்து) ஒருநாள் பகவானுக்கு திருப்பதி வேங்கடாசலபதியை போல அலங்காரம் செய்யப்படுகிறது, அன்று மட்டும் திருப்பதி லட்டு இங்கு வழங்கப்படுகிறது.














 


1068

விற் பெரு விழவும், கஞ்சனும் மல்லும் 
வேழமும், பாகனும் வீழ * 
செற்றவன்தன்னை * புரம் எரி செய்த 
சிவன் உறு துயர் களை தேவை * 
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு 
பார்த்தன் -தன் தேர் முன் நின்றானை * 
சிற்றவை பணியால் முடி துறந்தானைத் 
திருவல்லிக்கேணிக் கண்டேனே. (2)


பெரிய திருமொழி - இரண்டாம்பத்து
மூண்றாம் திருமொழி – விற்பெருவிழ்வும் - 1
-  திருமங்கை ஆழ்வார்





வந்து உதைத்த வெண் திரைகள் செம் பவள வெண் முத்தம் *
அந்தி விளக்கும் அணி விளக்காம் * - எந்தை 
ஒரு அல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன் * 
திருவல்லிக்கேணியான், சென்று. (2) 

மூன்றாம் திருவந்தாதி - 16
 - பேயாழ்வார்



தாளால் உலகம் அளந்த அசைவேகொல்? * 
வாளா கிடந்தருளும், வாய் திறவான் * - நீள் ஓதம் 
வந்து அலைக்கும் மா மயிலை மா அல்லிக்கேணியான் * 
ஐந்தலை வாய் நாகத்து அணை. (2) 

நான்முகன் திருவந்தாதி  - 35
 - திருமழிசைப்பிரான் 





ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் திருவடிகளே சரணம்...

அன்புடன்
அனுபிரேம்💖💖💖


4 comments:

  1. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. கொஞ்சம் நீளமான பதிவு (படங்களும் சேர்ந்துவிட்டதால்).

    இந்தக் கோவிலின் ஒரு சிறப்பைச் சொல்ல விட்டுப்போய்விட்டது. திருமங்கயாழ்வார் தான் பாடிய பத்துப் பாசுரங்களில் இந்தக் கோவிலின் அனைத்துப் பெருமாளையும் பாடியிருக்கிறார். அப்படியென்றால், அனைத்துமே ஆழ்வார் காலத்துக்கு முன்பேயே இருக்கிறது என்று அர்த்தம்.

    மீன் அமர் பொய்கை நாள்மலர் கொய்வான்* வேட்கையினோடு சென்று இழிந்த*
    கான் அமர் வேழம் கைஎடுத்து அலற* கரா அதன் காலினைக் கதுவ*
    ஆனையின் துயரம் தீரப் புள் ஊர்ந்து* சென்று நின்று ஆழிதொட்டானை*
    தேன் அமர் சோலை மாட மா மயிலைத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே* - கஜேந்திரவரதர்
    பரதனும் தம்பி சத்துருக்கனனும்* இலக்குமனோடு மைதிலியும்*
    இரவும் நன் பகலும் துதி செய்ய நின்ற* இராவணாந்தகனை எம்மானை*
    குரவமே கமழும் குளிர் பொழிலூடு* குயிலொடு மயில்கள் நின்று ஆல*
    இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே. - ராமர் சன்னிதி (எல்லோரோடும் இருக்கும் ராமர்)
    வில் பெரு விழவும் கஞ்சனும் மல்லும்* வேழமும் பாகனும் வீழச்*
    செற்றவன் தன்னை புரம் எரி செய்த* சிவன் உறு துயர் களை தேவை*
    பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு* பார்த்தன்-தன் தேர்முன் நின்றானை*
    சிற்றவை பணியால் முடி துறந்தானை* திருவல்லிக்கேணிக் கண்டேனே* - பார்த்தசாரதிப் பெருமாள் (வெங்கடகிருஷ்ணன்)

    பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன்* வாயில் ஓர் ஆயிரம் நாமம்*
    ஒள்ளிய ஆகிப் போத ஆங்கு அதனுக்கு* ஒன்றும் ஓர் பொறுப்பு இலன் ஆகி*
    பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்ப* பிறை எயிற்று அனல் விழிப் பேழ் வாய்*
    தெள்ளிய சிங்கம் ஆகிய தேவை* திருவல்லிக்கேணிக் கண்டேனே. - நரசிம்ஹர் (தெள்ளியசிங்கர்)

    சட்னு மன்னாதன் என்னும் ரங்கநாதனுக்குரிய பாசுரம் நினைவுக்கு வரவில்லை.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா ...மிக அருமையான விளக்கம்

      Delete
    2. திருப்பதில, நேர பெருமாள். கருவறையைச் சுற்றியுள்ள இடத்தில், ஒரு மூலையில் வரதராஜர், இன்னொரு மூலையில் யோக நரசிம்மர். ஆழ்வார்கள் திருமலையப்பனை மட்டுமே பாடியிருக்கிறார்கள். இதுதான் அனேகமாக எல்லாக் கோவில்களிலும். ஆச்சர்யமாக, திருவல்லிக்கேணியில் இருக்கும் கஜேந்திரவரதர், நரசிம்ஹர், பார்த்தசாரதி, மன்னாதர்-ரங்கநாதன், இராமர்... எல்லோரையும் ஆழ்வார் பாடியுள்ளார். இது தனிச் சிறப்பு.

      Delete
  2. எத்தனை சிறப்பு வாய்ந்த ஸ்தலம் ...படிக்கும் போதே பரவசம் தரும் கோவில்

    ReplyDelete