11 February 2023

34. இடை கழியில் கண்டேனோ முதலாழ்வார்களைப் போலே.

  34. இடை கழியில் கண்டேனோ முதலாழ்வார்களைப் போலே.






முதலாழ்வார்கள் எனப் போற்றப்பட்ட மூன்று ஆழ்வார்கள் - பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்.

 மூவரும் மூன்று வெவ்வேறு திவ்யதேசங்களில் பிறந்தனர் - காஞ்சி, மல்லை, மயிலை. 

இவர்கள் மூவரும் சமகாலத்தவர்கள் மட்டுமல்லாமல், ஞான, பக்தி, வைராக்கியங்கள் மிக்கத் துறவறம் பூண்டு, ஆண்டவனின் நினைவிலேயே உருகி உள்ளம் கனியப் பாடியவர்கள்.

 தனித்தனியே பரம்பொருளான ஸ்ரீ நாராயணனுக்கு அடிமை பூண்டு, அவன் புகழ் பாடித் திரிந்த அவர்களை ஓரிடத்தில் சந்திக்க வைக்கும் லீலையை, அற்புதத்தை, தனது ஆசையை எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன் நிகழ்த்தினார்!!


பொய்கையாழ்வார் தனியே திருக்கோவலூர் க்ஷேத்திரத்தில் அரசாலும் உலகளந்த பெருமாளை தரிசிக்க வந்தார். தரிசனம் முடிந்து, இரவுப்பொழுது பலத்த மழை பெய்ய, வேறு வழியில்லாமல் மிருகண்டு முனிவரின் ஆசிரமத்தில் உள்ள ஒரு மிகச் சிறிய அறையில் தங்க முடிவு செய்தார். ஒருவர் மட்டுமே படுக்கக் கூடிய அளவிலான அந்த சிறிய இடைகழியில், பொய்கையாழ்வார் உறங்கிக்கொண்டிருந்த நேரம், யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டு விழித்தார். கதவை திறந்து பார்த்த பொழுது, வாசலில் நின்ற பூதத்தாழ்வார் தனக்கும் அங்கு தங்க இடம் இருக்குமா என்று வினவினார்.


பொய்கையாழ்வார், அதற்கு, “இங்கு ஒருவர் படுக்கலாம், இருவர் அமரலாம்! உள்ளே வாருங்கள்!”, என்று கூறி இடமளித்தார். இருவரும் ஒருவரை ஒருவர் வணங்கி உரையாட ஆரம்பித்தார்கள். 

கடலை மட்டுமே சேர விரும்பும் இரு மழை துளிகள் போல் அவர்கள் இருவரும் பரமாத்மாவை மட்டும் எண்ணி, அவன் புகழ் பாடி வாழ்பவர்கள் என்பதை அறிந்து, நேரம் போவது அறியா வண்ணம், இருவரும் பகவானின் லீலைகளைப் பற்றி தன்னை மறந்து பேசிக்கொண்டிருந்த நேரம், மீண்டும் யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டு மீண்டும் இவ்வுலகிற்கு வந்தனர்.

கதவை திறந்து பார்த்த பொழுது, வாசலில் நின்ற பேயாழ்வார், தான் தங்க இடம் கேட்க, “இங்கு ஒருவர் படுக்கலாம், இருவர் அமரலாம், மூவர் நிற்கலாம். உள்ளே வாருங்கள்!” என்று கூறி அவ்விருவரும் பேயாழ்வாரை வரவேற்றனர். 

நெருக்கி நின்று கொண்டு மூவரும் பரமாத்மாவை மட்டும் எண்ணி, அவன் புகழ் பாடி வாழ்பவர்கள் என்பதை அறிந்து, பேரானந்தத்துடன் இறைவனின் பெருமையை சொல்லியும், பாடியும், கேட்டும் மகிழ்ந்தனர்.

இந்த சந்தோஷ சூழ்நிலையில், மூன்று ஆழ்வார்களின் மத்தியில் இருக்க விரும்பி எம்பெருமானும் அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தார். அவரைத் தொடர்ந்து, பிராட்டியார் இருவரும் அங்கு வந்தனர். 

அவர்கள் மூவரும் இல்லா இடத்தில் தங்களுக்கு என்ன வேலை என்பது போல், மூவரையும் தொடர்ந்து, ஆதிசேஷனும் கருடாழ்வாரும் அங்கு வந்தனர். அந்த சிறிய இடைகழியில் அனைவரும் வந்து நெருக்க, யார் தங்களை நெருக்குவது என்ற கேள்வி ஆழ்வார்கள் மனத்தில் எழுந்தது.


நெருக்கத்தின் காரணத்தை அறிய பொய்கையாழ்வார்,

வையம் தகளியா*  வார்கடலே நெய்யாக,*  

வெய்ய கதிரோன் விளக்காக,* - செய்ய-

சுடர் ஆழியான் அடிக்கே*  சூட்டினென் சொல் மாலை,* 

இடர் ஆழி நீங்குகவே என்று  (2)

என பாடினார், அது முதல் திருவந்தாதியின் முதலடியானது. 

இப்பாசுரத்தில் ஆழ்வார், “இவ்வுலகை அகழியாக கொண்டு, கடலை நெய்யாகக் கொண்டு, அக்கடற்பரப்பின் ஒரு விளிம்பிலே தோன்றுவதுபோல் காட்சியளிக்கும் கதிரவனை திரியாகக் கொண்டு விளக்கை ஏற்றி திருமாலின் திருவடிக்கு பாசுரங்களை மாலையாகச் சூட்டினேன். இந்த இருள் நீங்கட்டும்!” என்கிறார்.


அவரைத் தொடர்ந்து பூதத்தாழ்வார், 

அன்பே தகளியா*  ஆர்வமே நெய்யாக,* 

இன்பு உருகு சிந்தை இடு திரியா,*  நன்பு உருகி* 

ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன்*  நாரணற்கு* 

ஞானத் தமிழ் புரிந்த நான். (2) 

என பாடினார், அது இரண்டாம் திருவந்தாதியின் முதலடியானது. 


இப்பாசுரத்தில் ஆழ்வார், “தன் அன்பை அகழியாகக் கொண்டு, இறைவனையும் அவன் குணங்களையும் அறியும் ஆர்வத்தை நெய்யாகக் கொண்டு, அறிவை திரியாகக் கொண்டு திருமாலுக்கு விளக்கேற்றினேன்” என்கிறார்.


இவர்கள் ஏற்றிய விளக்கின் ஒளியில், இருள் அகல, பரமாத்மாவை கண்ட பேயாழ்வார்:


திருக் கண்டேன்*  பொன்மேனி கண்டேன்,*  திகழும்

அருக்கன் அணி நிறமும் கண்டேன்,* - செருக் கிளரும்

பொன் ஆழி கண்டேன்*  புரி சங்கம் கைக் கண்டேன்,* 

என் ஆழி வண்ணன்பால் இன்று  (2)


என்ற பாசுரத்தின் வழியாக, “பரிந்துரை கூறி நம்மை இறைவனிடம் சேர்ப்பிக்கும் பிராட்டியைக் கண்டேன். அவருடைய சேர்க்கையினாலே நிறம் பெற்ற திருமாலின் திருமேனியைக் கண்டேன். சூரியன் போன்ற அழகிய நிறத்தையும் கண்டேன். போரில் சீறும் திருச்சக்கரத்தையும், மற்றொரு திருக்கையில் உள்ள திருச்சங்கினையும் சேவிக்கப் பெற்றேன்” என்கிறார். 

பின்னர் "திருக் கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும், அருக்கன் அணி நிறமும் கண்டேன்" என ஆழ்வார் பாடியது, மூன்றாம் திருவந்தாதியின் முதலடியானது.

முதலாழ்வார்கள் மூவரும், நெருக்கத்தின் ஊடே திருமாலை கண்டதில், உள்ளம் உருகி அவனுள்ளமும் கனியும் வண்ணம் நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் முதல் பாசுரங்களை பாடினார்கள்.

திருக்கோளூர் பெண்மணி “முதலாழ்வார்கள் போல், அவனது கருணையால் அறியாமை எனும் இருள் நீங்கி அவனைக் காணும் பாக்கியத்தைப் பெறவில்லையே! நான் ஏன் இங்கு இருக்க வேண்டும்? என்கிறாள்.





முந்தைய பதிவுகள் - 

திருக்கோளூர் பெண்பிள்ளை  ரகசியம் முன்னுரை ...

1. அழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் போலே.
2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல
3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே
4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே
5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே
6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே
7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே
8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே
9. மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே
10. முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே



திருவாய்மொழி -முதற் பத்து

1 - 6 பரிவது இல் 

ஆராதனைக்கு எளியவன் 


நீள் கடல் சூழ் இலங்கைக் கோன்*  

தோள்கள் தலை துணிசெய்தான்*

தாள்கள் தலையில் வணங்கி* 

 நாள்கள் தலைக் கழிமின்னே. 7

2960


கழிமின் தொண்டீர்கள் கழித்துத்*  

தொழுமின் அவனை தொழுதால்*

வழி நின்ற வல்வினை மாள்வித்து*  

அழிவின்றி ஆக்கம் தருமே. 8

2961








35. திருத்தேவனார்தொகை

ஸ்ரீ கடல்மகள் நாச்சியார் ஸமேத ஸ்ரீ தெய்வநாயகாய நமஹ



சுவாமி இராமானுஜர் திருவடிகளே சரணம்!!!

ரகசியம் தொடரும்...


அன்புடன் 
அனுபிரேம்  💕💕

No comments:

Post a Comment