18 February 2023

35. இருமன்னரைப் பெற்றேனோ வால்மீகியைப் போலே

35.  "இருமன்னரைப் பெற்றேனோ வால்மீகியைப் போலே"







இலக்குவன் தேரிலிருந்து சீதாபிராட்டியை இறங்கச் சொல்கிறான். காட்டின் மையப் பகுதி அது. தூரத்தில் சில முனிவர்களின் ஆசிரமங்கள் தெரிகின்றன. எதற்கு இலக்குவன் தன்னை இங்கே இறக்கி விட்டான்?

மிதிலை மகள் ஒன்றும் புரியாமல் இலக்குவனைப் பார்க்கிறாள்.

இலங்கையிலிருந்து சீதையை மீட்டு, வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பிய ஸ்ரீ இராமர், அயோத்தி மன்னராக தருமநெறி வழுவாது பல ஆண்டுகள் ராஜ்ய பரிபாலனம் செய்து வந்தார். அயோத்தியே மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தது.

 ஒரு நாள், நகர்வலம் வந்த காவலாளி, அங்கே ஒரு வீட்டில் உள்ளவர்கள் இராமரைப் பற்றி பேசுவதைக் கேட்டார். சலவை தொழில் செய்யும் குடும்பத் தலைவன், அங்கே சீதா தேவியைப் பற்றி தவறான விவாதம் நடத்திக் கொண்டிருப்பதை அறிந்து, ஸ்ரீ இராமரிடம் கூறினார்.

அந்த வார்த்தைகள் இராமனுடைய நெஞ்சில் முள் போல் குத்தியது. தர்மத்திற்கு எடுத்துக் காட்டாக வாழ்ந்து வந்த நாம் இப்படி ஒரு விஷயத்தை எண்ணிப் பார்க்கவில்லையே என்றெண்ணி, மக்களின் நலனுக்காகவும், தர்மத்திற்காகவும் கர்ப்பிணியான தன் சீதையைக் காட்டில் கொண்டு போய் விட்டு வர லட்சுமணரைப் பணித்தார்.

இலக்குவனும் சீதாதேவியிடம் தலையைக் குனிந்தபடி ஊர் மக்களின் புறம் பேச்சினை கேட்டு அயோத்திய சக்கரவர்த்தித் திருமகன் சீதையை காட்டில் விட்டு வருமாறு பணித்ததைக் கூறினான்.

சீதை, “பெண்களுக்குக் கணவன்தான் தெய்வம். வேறு கதி இல்லை. எனவே, என் கணவன் இட்ட கட்டளைக்கு அடிபணிவேன் என்று சொல். இன்னொன்றையும் சொல். ருது காலம் தாண்டி நான் அந்த ஸ்ரீ இராமனின் கர்ப்பத்தைத் தாங்கிக் கொண்டுள்ளேன் என்றும் சொல்” என்றாள். அழுவதற்குக் கூட கண்ணீர் வற்றிய இலக்குவன் அங்கிருந்து அகன்றான்.

திசை தெரியாது கலங்கி நின்ற ஜனகபுத்ரிக்கு வால்மீகி முனிவர் அடைக்கலம் கொடுத்தார். ஆசிரம பெண்களை அழைத்து சீதையை அவள் பேறுகாலம் முடியும் வரை கவனமாக பார்த்துக் கொள்ளச் சொன்னார். உரிய காலத்தில் சீதை இரண்டு ஆண் சிங்கங்களுக்கு நிகராக இரண்டு புத்திரர்களைப் பெற்றாள்.

“ஆஹா! என்ன ஒரு ஒளிமயமான பிறவிகள்“ என்று வாங்கிக் கொண்ட வால்மீகி குழந்தைகளைத் தழுவிக் கொண்டார்.

 தனது கண்ணே பட்டுவிடும் என்றால் ஊரார் கண்களுக்குக் கேட்பானேன் என்று குழந்தைகள் இருவரையும் தனது கையிலிருந்த தர்ப்பைப் புல்லினின் நுனியால் ஒரு குழந்தையையும், வேரால் மற்றொரு குழந்தையையும் தொட்டு காப்பிட்டார். இப்புல்லின் நுனிப் பகுதி குசம் என்றும் வேர் பகுதி லவம் என்றும் அழைக்கப்படும். எனவே அந்த குழந்தைகள் இலவ குசன் என்ற பெயரோடு விளங்கினர்.

இராமாயணத்தை வால்மீகி முதல் முதலில் கற்றுக்கொடுத்தது லவ மற்றும் குசனுக்கு மட்டுமே! 

நற்பண்புடனும், நற்குணங்களுடனும், அறிவில் சிறந்தவர்களாகவும், ஆயுதங்களை கையாள்வதில் நன்கு தேர்ச்சி பெற்றவர்களாகவும் லவ குசனை இராமருக்கு உகந்த புத்திரர்களாக வால்மீகி வளர்த்தார்.

வால்மீகியைப் போல இரண்டு இளவல்களை வளர்த்தெடுத்து இறைவனுக்கு சேவை செய்தேனா நான்? பிறகு ஏன் நான் இந்த திருக்கோளூரில் இருக்க வேண்டும்? நான் கிளம்புகிறேன் என்கிறாள் பெண்மணி.





முந்தைய பதிவுகள் - 

திருக்கோளூர் பெண்பிள்ளை  ரகசியம் முன்னுரை ...

1. அழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் போலே.
2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல
3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே
4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே
5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே
6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே
7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே
8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே
9. மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே
10. முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே



திருவாய்மொழி -முதற் பத்து

1 - 6 பரிவது இல் 

ஆராதனைக்கு எளியவன் 


தரும அரும் பயன் ஆய*  

திருமகளார் தனிக் கேள்வன்*

பெருமை உடைய பிரானார்* 

 இருமை வினை கடிவாரே. 9

2962


கடிவார் தீய வினைகள்* 

 நொடியாரும் அளவைக்கண்*

கொடியா அடு புள் உயர்த்த*  

வடிவு ஆர் மாதவனாரே. 10

2963


மாதவன்பால் சடகோபன்*  

தீது அவம் இன்றி உரைத்த*

ஏதம் இல் ஆயிரத்து இப் பத்து*  

ஓத வல்லார் பிறவாரே. 11

2964 








36. திருத்தெற்றியம்பலம்

ஸ்ரீ செங்கமலவல்லீ ஸமேத ஸ்ரீ செங்கண்மால் ஸ்வாமிநே நமஹ


சுவாமி இராமானுஜர் திருவடிகளே சரணம்!!!


ரகசியம் தொடரும்...

அன்புடன் 
அனுபிரேம்  💕💕

No comments:

Post a Comment