28 July 2023

கங்கா ஆரத்தி !

வாழ்க வளமுடன் 

பெருமைகள் பல பெற்ற கங்கை நதிக்கு நன்றிக் கடனாக நாள்தோறும் மாலை வேளையில் நேரடியாகச் செய்யப்படும் பூஜையே 'கங்கா ஆரத்தி'. 



முந்தைய பதிவுகள் ...

 1. வாரணாசி ......






 கங்கையின் வரலாறு:

      ஆதி காலத்தில் அயோத்தியை  ஆண்ட இசுவாகு  குலத்தில் சகரர் என்பவர் குழந்தை பேரின்மையால் இறைவனை வேண்டி தவம் செய்ததன் பயனாய் அவரது முதல் மனைவி சுமதிக்கு 60 ஆயிரம் குழந்தைகளும், இரண்டாவது மனைவி கேசினி என்பவளுக்கு ஒரு குழந்தையும் பிறந்தனர். சில காலம் கழித்து சகரர் அஷ்வமேத யாகம் செய்ய ஏற்பாடுகள் செய்தார்.

அவர்  அஸ்வமேத யாகம் செய்தால் தன்னுடைய பதவி போய்விடுமோ என்று அஞ்சிய இந்திரன் யாகக் குதிரையை மறைத்து வைக்க, குதிரையை தூக்கி சென்று பாதாள லோகத்தில் தவம் செய்து கொண்டிருந்த கபில மகரிஷியின் ஆசிரமத்தில் கட்டி வைத்து விட்டான். 

அந்த குதிரையை  தேடி சென்ற சகரரின் புதல்வர்கள் 60,000 பேரும் கபிலரின் ஆசிரமத்தில்  குதிரை இருப்பதைக் கண்டு கபிலரை திட்டியதுடன் அவரை துன்புறுத்த துவங்கினார்கள்.
 கோபமடைந்த மகிரிஷி  அவர்களை சபித்து சாம்பலாக்கினார்.

 அனைத்தையும் அறிந்த சகரர் மன்னன் கபிலரை வணங்கி தான் செய்யும் அஷ்ரமேத யாக குதிரை தங்கள் ஆசிரமத்தில் இருந்ததனால் இந்த குழப்பங்கள் வந்தது என்றும், தம் மக்கள் நற்கதி  அடைவதற்கு வழி சொல்லுமாறும்  தன் குதிரை எடுத்துச் செல்ல அனுமதிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

அவரின்  வேண்டுகோளை ஏற்ற கபில மகரிஷி குதிரை எடுத்துச் செல்ல அனுமதி கொடுத்து, மேலுலகத்தில் இருக்கும் கங்கையை பூலோகம் வரவழைத்து இந்த சாம்பலை புனிதப்படுத்தினால் இவர்கள் நற்கதி அடைவார்கள் என்று விமோசனம் கூறினார்.

இதனை கேட்டு மகிழ்ந்தார்  சகரர் குதிரையை  எடுத்துச் சென்று அஸ்வமேத யாகத்தை முடித்தார். முதல் மனைவியின் வாரிசுகள் 60 ஆயிரம் பெரும் சாம்பல் ஆனதால் இரண்டாவது மனைவியின் புதல்வன் நாட்டின் அரசு பதவி ஏற்றுக்கொண்டார்.

சகரனின் பேரன் அம்சுமானுக்குத் திலீபன் பிறந்தான். மாவீரனான திலீபனாலும் கங்கையை மண்ணுலகிற்குக் கொண்டு வர இயலவில்லை. 

 அவனுக்கு பின் அவனது புதல்வன் “பகீரதன்” ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்டபோது தமது முன்னோர்கள் 60,000 பேருக்கு நடந்ததை தெரிந்து கொண்டார். பின்பு நாட்டை துறந்து கங்கையை  பூலோகம் கொண்டு வர பிரம்மதேவரை  நினைத்து காட்டில் கடும் தவம் ஏற்றினார்.
இவரின் தவத்தில் மகிழ்ந்த பிரம்மதேவன் கங்கையை  பூமிக்கு அனுப்ப இசைந்தார்.

 விண்ணுலகம் சென்று அங்கே கங்கையை பார்த்து வணங்கி தம்  முன்னோர்களின் வரலாற்றை கூறி அவர்கள்  நற்கதி அடைய வேண்டி கங்கை பூமிக்கு வந்து பின் பாதாளத்திற்கு வந்து தன் முன்னோர்கள் மோட்சம் அடைய உதவ வேண்டும் என்று வேண்டிக் கொண்டான்.

 அதற்கு கங்கை பகீரதா நான் பூமிக்கு வர சம்மதிக்கிறேன் ஆனால் நான் விண்ணிலிருந்து பூமிக்கு வருகையில் அந்த வேகத்தை பூமி தாங்க மாட்டாள் நான் வரும் வேகத்தை என்னால் குறைக்கவும் இயலாது. என்னை எவரேனும் தாங்கிப் பிடித்து மெல்ல மெல்ல பூமியில் விட ஏற்பாடு செய்தால் நான் வருகிறேன் என்று கூறினார்.

பகீரதனும்  விண்ணுலகத்து தேவர்களிடமும் பராக்கிரம  சாலிகளிடமும் கங்கையின் வேண்டுகோளை கூறி அவர்களை வந்து கங்கை தாங்கி பிடிக்க வேண்டினான். ஆனால் கங்கையின் உண்மையான வேகம் அறிந்த அனைவரும் மறுத்துவிட்டனர். பகீரதன் மகாவிஷ்ணுவை வேண்ட அவர் இச்செயல் ஈசன் ஒருவரால் மட்டுமே இயலும் அவரே  கங்கையை கட்டுப்படுத்த வல்லவர். அவரை தியானித்து தவம் செய்து அவர் அருளை பெறு என்று  கூறினார்.

பகீரதன் ஈசனை குறித்து தவமிருந்து வேண்டினான் மனம் மகிழ்ந்த ஈசனும் அவனுக்கு காட்சியளித்து பகீரதா உன் தவம்  குறித்து மகிழ்ச்சி அடைந்தோம். உன் முன்னோர்களை கடைத்தேற்ற  நீ கையாண்ட வழிகளையும் உன் விடாமுயற்சியையும் உறுதியும் பாராட்டுகிறேன் .

கங்கை பூமிக்கு வரும் பொழுது என் சடாபாரத்தை விரித்து பிடிக்கிறேன் என்றார். 





கங்கையிடம் ஈசனின் உதவியை குறித்து தெரிவிக்க அவளும் மகிழ்வோடு சப்தமிட்டு கொண்டே பூமியை நோக்கி வேகமாக பாய்ந்து வந்தாள். 

 ஈசன் தன் சடையை விரித்து பிடித்தார் அப்போது கங்கைக்குள் அகங்காரம் புகுந்தது. 

நான் மிகவும் வேகமாக வருகின்றேன். என் ஆற்றலையும் வேகத்தையும் இந்த ஈசனால் தாங்க இயலுமா? எனது யோசித்தாள். 

எல்லாம் வல்ல ஈசன் கங்கையின் மன ஓட்டத்தைபுரிந்து கொண்டார்.

 நதி ரூபத்தில்  அவளுடைய நீரோட்டத்தை தன் சடையிலேயே முடிந்து சுருட்டி விட்டார்.

 திணறிப் போன கங்கை வெளிவர முடியாமல் தவித்து தன்  அகங்காரத்தை போக்கிக்  கொண்டாள். கங்கையை காணாமல் கலக்கமடைந்தான் பகீரதன்  பின் ஈசனை நோக்கி மீண்டும் ஒற்றை காலில் தவம் இருந்தான்.

பகீரதன் முன் தோன்றிய ஈசன் கங்கையின் கர்வத்தை ஒடுக்க வேண்டிய தான் இவ்விதம் செய்ததாக கூறிவிட்டு கங்கையை மெல்ல மெல்ல வெளியேவிட்டார். 

அவளை அப்படியே தாங்கிக் கொண்டு இமயத்தில் நந்தியம் பெருமான் விட கங்கை அங்கு இருந்து பாயத்  தொடங்கினாள். 

 பகீரதன்  அவளை பின்தொடர்ந்தான். 

வழியில் ஜான்ஹவி என்னும் ரிஷியின் ஆசிரமம் இருந்தது.

கங்கை வந்த வேகத்தில் அந்த ஆசிரமத்தை  முற்றிலும் நீரால் அழித்து முனிவரையும் உருட்டி தள்ள ஆயத்தமானாள்.  கோபம் கொண்ட முனிவர் கங்கையை அப்படியே தன் கைகளால் எடுத்து குடித்துவிட்டார்.

 கங்கை மீண்டும் சிறைப்பட்டாள்.

பகீரதன்  கலங்கியே போனான்.

 முனிவரின் கால்களில் விழுந்து வணங்கி தன்  ஆற்றாமையும் கங்கைக்காகத் தான் மன்னிப்பு கோருவதாயும் தெரிவித்தார். அவன் நிலை கண்டு இறங்கிய ஜான்ஹவி முனிவர் கங்கையை தம் செவி வழியை மிக மிக மெதுவாக விட்டார்.


 கங்கை, முதலில் “நந்தபிராயக்” என்றும், பிறகு சிவனை தரிசித்துத் தாண்டிய இடத்தில் “ருத்ரப்ராயகை” என்றும் பெயர் பெற்று, பகீரதன் கங்கையை தரிசித்த இடத்தில் “பாகீரதி” எனவும் பெயர் பெற்றாள். 

வழியில் ஜான்ஹவி முனிவரின் மகளானாள் என்ற பொருளில் கங்கையை “ஜானவி” எனவும் அழைப்பர்.

பகீரதனிடம் கங்காதேவி, “தான் எப்படிச் செல்ல வேண்டுமென்றும்,

எந்த மார்க்கமாகத் தன் தாரைகள் ஓட வேண்டும்?” என்றும் கேட்டாள். 

பகீரதன் தன் தேரில் ஏறி, ‘தாயே! நான் முன்னே வழிகாட்டிச் செல்கிறேன். என்னைப் பின்தொடருங்கள்’ என்று கூறிவிட்டு, வாயு வேகத்தில் புறப்பட, கங்காதேவியும் பின்தொடர்ந்தாள். 

பல காதங்கள் வந்த பின்பு, திடீரென பகீரதன் திரும்பிப் பார்த்தான். 

கங்கை அவன் பின்னே வரவில்லை. 

இரதத்தின் வேகத்துக்குக் கங்கையால் ஓடி வர முடியவில்லை போலும் என்று நினைத்து, சிறிது நேரம் காத்திருந்தான் பகீரதன். 

அப்போதும் கங்கை வரவில்லை. 

எனவே, தேரைத் திருப்பிக் கொண்டு, வந்த வழியே சென்றான்.

சிறிது தூரம் சென்றதும், அவன் கண்ட காட்சி அவனைத் திகைப்பில் ஆழ்த்தியது. 

ஆம், கங்கை ஏழு பிரிவாகப் பிரிந்து, மீண்டும் ஒன்றாக ஒரே இடத்தில், ஒரு தீவு போன்ற பகுதியை உருவாக்கிக் கொண்டிருந்தாள். காரணம், அங்கே சப்த ரிஷிகள் எனப்படும் ஏழு மகரிஷிகளும் தவம் புரிந்து கொண்டிருந்தனர். அவர்களது தவத்துக்கும் ஞானத்துக்கும் கட்டுப்பட்டு, அவர்களின் பாதங்களை வருடிக்கொண்டு, அங்கே தானும் தவம் புரிந்து கொண்டிருந்தாள் ஞான கங்கை. 

அந்த இடம் தான் இன்று “ரிஷிகேஷ்”, “ஹரித்வார்” ஆகிய புண்ணிய க்ஷேத்திரங்களாக விளங்குகின்றன.

சப்த ரிஷிகளைத் தாண்டிச் செல்லும் போது, அவர்களையும் தரிசித்து, வணங்கிச் சென்றான் பகீரதன.  இன்றைய அலஹாபாத் பகுதிக்கு வரும்போது, யமுனையையும், சரஸ்வதியையும் தன்னோடு சேர்த்துக்கொண்டு *திரிவேணி சங்கமமாகி, அங்கிருந்து தொடர்ந்து புண்ணிய க்ஷேத்திரமான *காசி மண்ணை நனைத்து, சிவபூஜை செய்து தன் பயணத்தைத் தொடங்கினாள் கங்கா.

 இதன் பிறகு தடையை ஏதும் இல்லாமல் பாய்ந்த கங்கையை பாதாளம் அழைத்துச் சென்றான் பகீரதன். அங்கே கபில முனிவரை சந்தித்து ஆசிகள் பெற்றுக் கொண்டு தம்மூதாதையரின் சாம்பலை  கங்கை நீரில்  கரைத்து  புனிதம் ஆக்கினார். சகல புத்திரர்கள் 60 ஆயிரம் பேருக்கும்  பெரும் நற்கதி கிடைத்தது.

 அன்று முதலில் கங்கை பூமியில் பாய ஆரம்பித்தது.



கங்கை நதிக்கு நன்றிக் கடனாக செய்யப்படும் கங்கா ஆரத்தி !

 கங்கை நதிக்கு நன்றிக் கடனாக நாள்தோறும் மாலை வேளையில் நேரடியாகச் செய்யப்படும் பூஜையே ‘கங்கா ஆரத்தி’ ஆகும்.

கங்கை புனித நதியாக உருவானவள். ஏழு புண்ணிய நதிகளில் முதலிடம் பெறுவது கங்கைதான். 

சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் உதித்த ஆறு தீப்பொறிகளும் வாயு மற்றும் அக்னி தேவரால் கங்கையில் சேர்க்கப்பட்டன. அதை கங்கா தேவி சுமந்து சென்று சரவணப் பொய்கையில் சேர்ப்பித்ததால் ஆறுமுகப் பெருமான் அவதரித்தான்.

பெருமைகள் பல பெற்ற கங்கை நதிக்கு நன்றிக் கடனாக நாள்தோறும் மாலை வேளையில் நேரடியாகச் செய்யப்படும் பூஜையே ‘கங்கா ஆரத்தி’ ஆகும்.

 இந்த மாபெரும் பூஜை திறந்த வெளியில் கங்கைக் கரையில் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. இந்த பூஜையைக் காணவும், தரிசனம் செய்யவும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கங்கை நதிக்கரையில் கூடுகிறார்கள். பிரசித்தி பெற்ற இந்த பூஜை காசி மாநகரிலேயே கங்கைக் கரையில் பல இடங்களில் நடைபெற்றாலும் ‘தஸாஸ்வமேத’ கட்டத்தில் நடைபெறும் பூஜையே மிகவும் பிரசித்தி பெற்றது.



ஒரே நேரத்தில், ஒரே மாதிரி வெண்ணிற ஆடை அணிந்த ஏழு  பூசாரிகளால் மிக மிக நிதானமாக இந்தப் பூஜை செய்யப்படுகிறது. பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்வதற்கு ஏதுவாக  உயர்ந்த மேடைகள் இங்கே அமைக்கப்பட்டுள்ளன. அந்த மேடைகளின் மேல் நின்று பூசாரிகள் நிதானமாக தூபம், தீபம், அலங்கார தீபம், புஷ்பம், சாமரம் போன்ற நானாவித உபசாரங்களுடன் ‘கங்கா மாதா’ வுக்கு சிறப்பாகப் பூஜை செய்கிறார்கள். மின் ஒளி விளக்குகளின் ஒளி வெள்ளத்தில் நடைபெறும். ‘கங்கா ஆரத்தி’ பூஜையைக் கண்டு பக்தர்கள் ஆனந்த வெள்ளத்தில் மூழ்கிக் களிக்கிறார்கள்.


ஏராளமான பக்தர்கள் படகுகளில் ஏறி நதிக்குள் அமர்ந்து கங்கா ஆரத்தி பூஜையைக் கண்டு மகிழ்கிறார்கள். இந்த பூஜை சுமார் ஒரு மணி நேரம் நடைபெறுகிறது. அப்பொழுது ஒலி பெருக்கிகள் ‘கங்கா மாதா’வின் புகழைப் போற்றிப் பாடுகின்றன. புனித கங்கை நதிக்கரையில் ஆரத்தி பாட்டு என்பது ஒரு முக்கிய நிகழ்ச்சியாகும்.







ஒளிரும் நிலவுடன் ...


முந்தைய பதிவில் விசாலாட்சி அன்னையை  தரிசனம் செய்த பின் எங்கள்  மடத்திற்கு திரும்பினோம் என்று கூறினேன். அப்பொழுது மணி 3 பிறகு சிறிது நேரம் ஒய்வு எடுத்த பின் கங்கா ஆரத்தி பார்க்கலாம் என முடிவு செய்து நடக்க ஆரம்பித்தோம்.  அப்பொழுது அங்கிருப்பவர்கள் இன்று கங்கா நதியில் மிக அதிகமான கூட்டம் இருக்கும் பார்த்து மெதுவாக செல்லுங்கள் என்று கூறவே, தைரியத்துடன் அங்கு சென்றோம். வழி  எல்லாம் நல்ல கூட்டம்.

மெதுவாக கங்கை கரை சென்று யாரும் இடிக்காத  வகையில் சிறிது தூரமாகவே நின்று ஆர்த்தி பார்க்க ஆரம்பித்தோம். அன்று கார்த்திகை  பௌர்ணமி தினம் அங்கு தேவ் தீபாவளி, அதனாலே இந்த கூட்டம். கூட்டமாக இருந்தாலும் இந்த விஷேஷ தினத்தில் இங்கு இருந்ததே எங்களுக்கு மிக மகிழ்ச்சி.

இந்த தேவ்  தீபாவளி அன்று  அருகில் உள்ள கிராமங்களில் இருந்து அனைத்து மக்களும் வந்து கங்கா மாதாவிற்கு பல லட்சங்களில் தீபங்களை ஏற்றுகின்றார்கள். அதனால் அனைத்து கடைகளுமே  மாலை 4 மணிக்கு மேல்  மூடி விடுகின்றார்கள். மாலை  நேரத்தில் அனைவரும் தங்களின் கடைகளின் வெளியே அகல் விளக்குகள் ஏற்றுகிறார்கள்.

மாலை 6 மணி அளவில் கங்கா ஆரத்தி ஆரம்பித்தது. சிறிது தூரமாகவே நின்றாலும் நன்றாகவே காண முடிந்தது. மிக அருமையான தரிசனம். அனைத்து மக்களுமே மிக பக்தி பரவசத்துடன்  அதில் கலந்து கொண்டார்கள். அனைவருக்குமே ஆனந்தம் கங்கா மாதாவிற்க்கு தங்களது நன்றியையும் வணக்கங்களையும் தெரிவித்தார்கள்.

 இதற்கு மேல் நிற்க நிற்க இன்னும் கூட்டம் அதிகமாகும் என்று எண்ணி நாங்கள் மீண்டும் எங்களின் மடத்திற்கு வந்து விட்டோம். மனதிற்கு மிக மகிழ்ச்சியான நேரம். அருமையான அனுபவம்.



068 திருக்கயிலாயம்
பாடல் எண் : 5


ஒன்றும்பலவு மாயவேடத் தொருவர் கழல்சேர்வார்

நன்றுநினைந்து நாடற்குரியார் கூடித் திரண்டெங்கும்

தென்றியிருளிற் றிகைத்தகரிதண் சாரல் நெறியோடிக்

கன்றும்பிடியு மடிவாரஞ்சேர் கயிலை மலையாரே.

 


இரவில் சிதறித் தனிமைப்பட்ட யானைகள் குளிர்ந்த மலைச் சாரலின் வழிகளில் விரையச்சென்று கன்றும் பிடியுமாய் இணையும் கயிலைமலைக்குரிய இறைவர். ஒருவராக இருந்தே பற்பல வடிவங்களைக் கொண்ட ஒப்பற்ற பரம்பொருளாவார். தம் திருவடிகளைஅடைய எண்ணும் அடியவர்கள் பேரின்பத்தை அடையும் விருப்போடு நாடுதற்குரியவர்.



ஓம் நமசிவாய ! ஓம்  நமசிவாய ! 
ஓம்  நமசிவாய ! ஓம் நமசிவாய ! 
ஓம்  நமசிவாய ! ஓம் நமசிவாய!


தொடரும் ...


அன்புடன்,
அனுபிரேம் 🌼🌼🌼



.



No comments:

Post a Comment